search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்
    X
    நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ரோத்சவம்: நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

    உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலை வேளையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ரோத்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பவித்ரோத்சவம் கடந்த 18-ந் தேதி தொடங்கியது.

    இதனை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலை வேளையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பவித்ரோத்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசல் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு இரவு 7.30 மணியளவில் வந்தடைந்தார்.

    அங்கிருந்தவாறு உபய நாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். அதன் பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திக காப்பு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு இரவு 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் நிறைவு நாளான நாளை (26-ந் தேதி) காலை 9.30 மணியளவில் நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

    மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பிடப்படும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அர்ச்சக பட்டர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×