என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பகோணம் பொற்றாமரை குளத்தில் குறைந்த அளவே தண்ணீர் தேங்கி உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    கும்பகோணம் பொற்றாமரை குளத்தில் குறைந்த அளவே தண்ணீர் தேங்கி உள்ளதை படத்தில் காணலாம்.

    கும்பகோணத்தில் தண்ணீரின்றி காணப்படும் பொற்றாமரை குளம்

    கும்பகோணத்தில் தண்ணீரின்றி காணப்படும் பொற்றாமரை குளத்தை தூர்வாரி சீரமைத்து தண்ணீர் நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள புண்ணிய குளமான பொற்றாமரை குளத்தில் தான் தாமரை மலரில் இருந்து மகாலட்சுமியான கோமளவல்லி தாயார் தவமிருந்து சாரங்கபாணியை திருமணம் செய்தார் என்பது புராண வரலாறு. சுமார் 2½ ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த புனித குளத்தில் ஆண்டு தோறும் மாசிமகத்திருவிழாவின் போது தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த குளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற மாகாமத்தின் பொழுது ரூ.72 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி நடைபெற்றது.

    மேலும், குளத்தில் தண்ணீர் நிரப்புவதற்காக காவிர் ஆற்றிலிருந்து 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்கப்பட்டது. இதற்காக காவிரி ஆற்றிலிருந்து ரெட்டியார்குளம் வடக்கு, ரெட்டியார்குளம் கிழக்கு, கும்பேஸ்வரர்கோவில் திருமஞ்சன வீதி, வடக்குவீதி வழியாக பொற்றாமரை குளத்திற்கு பிளாஸ்டிக் குழாய் பூமிக்கு அடியில் பதிக்கபட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரும் போது பொற்றாமரை குளம் நிரம்பியது.

    இந்தநிலையில் கடந்த மாசிமகத்தின் போது பொற்றாமரை குளத்துக்கு தண்ணீர் நிரப்பட்டது. தெப்பத்திருவிழாவும் நடைபெற்றது. பின்னர் கோடைகாலம் நெருங்கநெருங்க குளத்தில் இருந்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வற்ற தொடங்கியது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தற்போது இந்த குளம் தண்ணீர் இல்லாமல் வற்றி உள்ளது. இதனால் குளம் முழுவதும் செடிகள், கோரைப்புற்கள் வளர்ந்துள்ளது.

    இது குறித்து இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-

    ஆண்டு தோறும் இந்த பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதற்காக காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் நிரப்பி வந்தனர். இதனால், இந்த குளத்தை பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கும். மாலை நேரங்களில் இந்த குளத்தின் அருகில் வரும் போது குளிர்ந்த காற்று வீசும். இதனால் இது மனதுக்கு இதமாக இருக்கும், தற்போது இந்த குளம் வறண்டு காணப்படுகிறது. குளத்தில் எப்போதும் தண்ணீர் தேங்கியிருக வேண்டும். எனவே, இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்ணீரின்றி காய்ந்து செடிகள், கோரைப்புற்கள் முளைத்துள்ள குளத்தை சுத்தம் செய்து, குளத்தில் எப்போதும் தண்ணீர் நிறைந்து இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×