search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருஞானசம்பந்தரை சுமந்த திருநாவுக்கரசர்
    X
    திருஞானசம்பந்தரை சுமந்த திருநாவுக்கரசர்

    திருஞானசம்பந்தரை சுமந்த திருநாவுக்கரசர்

    திருநாவுக்கரசர் என்னும் அப்பர் சுவாமிகள், திருப்பூந்துருத்தியில் திருமடம் அமைத்து உழவாரப் பணியை செய்து வந்தார். ஞானசம்பந்தரின் மேதமையும், ஞானத்தையும் பற்றி கேள்விப்பட்டிருந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.
    திருகண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில், திருப்பூந்துருத்தி என்ற திருத்தலம். இந்த ஊரை அடுத்து திருஆலம்பொழில் என்ற இடத்தில் ஆத்மநாதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருவையாறில் இருந்து பூதலூர் வழியாகத் திருச்சி செல்லும் பேருந்தில் வந்தால் இத்தலத்தில் இறங்கலாம்.

    திருஞான சம்பந்தர், வைகைக் கரையோரம் சைவ மதத்தை செழிக்கச் செய்ய ஆவல் கொண்டார். மதுரைச் சாக்கியர்கள் செருக்கோடு, ஞானக் குழந்தையான சம்பந்தரிடம் வாதிட, அந்தக் குழந்தையோ பெரிய பண்டிதனைப் போல எதிர்வாதம் செய்தது. வாதத்தின் வெம்மை தாங்காத சமணக் கூட்டம், சிவநெறி செல்வனாகத் திகழ்ந்த சம்பந்தரின் திருப்பாதத்தில் வீழ்ந்து வணங்கியது. சொக்கனின் பேரருள் மக்களின் மனத்தில் மணம் பரப்பியது.

    ஞான சம்பந்தர் சைவம் மேலும் தழைக்க, தஞ்சை நோக்கி நகர்ந்தார். ஞானக் குழந்தை சம்பந்தர் அழகான முத்துச்சிவிகையில் அமர, அவரை சீரடியார்கள் கூட்டம் போட்டியிட்டுக் கொண்டு சுமந்தது. சம்பந்தரைச் சுமந்ததால் அவர்கள் வல்வினைச் சுமைகள் குறைந்தன. அந்த நேரத்தில் திருஞான சம்பந்தருக்கு, திருநாவக்கரசரைப் பார்த்து தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. எனவே “சிவிகையை பூந்துருத்திக்கு திருப்புங்கள்” என்றார்.

    திருநாவுக்கரசர் என்னும் அப்பர் சுவாமிகள், திருப்பூந்துருத்தியில் திருமடம் அமைத்து உழவாரப் பணியை செய்து வந்தார். ஞானசம்பந்தரின் மேதமையும், ஞானத்தையும் பற்றி கேள்விப்பட்டிருந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.

    அப்போது ஒரு அடியவர் ஓடிவந்து, “அடியார்களோடு சம்பந்தப் பெருமான் பூந்துருத்தியைக் காண வருகிறார்” என்று கூறினார். அதைக் கேட்டதும் திருநாவுக்கரசரின் உள்ளம் குளிர்ந்தது.

    “ஞானக் குழந்தை வருவதற்குள் நாம் சென்று எதிர் கொள்வோம் வாருங்கள்” என்று தங்கள் அடியவர்களையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

    வெகுதொலைவில் முத்துச் சிவிகை அசைவதும், மணிகளின் ஓசை காற்றினில் கசிந்து வருவதையும் கண்ட பூந்துருத்தி சிவனடியார்கள் சிலிர்த்துப் போனார்கள். திருஞானசம்பந்தர் வெள்ளாம்பிரம்பூரில் உள்ள ஈசனை வணங்கிவிட்டு, பூந்துருத்தி விரைந்தார். அந்த ஊரின் எல்லையில் (சம்பந்தர் மேடு) சென்றபோது, அடியார்களில் அடியாராக அப்பர் சுவாமிகளும், சம்பந்தர் அமர்ந்திருந்த சிவிகையை சுமந்தபடி வந்தார்.

    திருநாவுக்கரசரின் திருவுள்ளம் களிப்புற்றது. திருவாலம்பொழில் நெருங்கியதும் திருஞானசம்பந்தர், சீலையை விலக்கி வெளியே பார்த்தார். அப்போது அப்பர் சுவாமிகளின் நினைவு மனதில் எழ, “அப்பர் எங்கிருக்கிறார்?” என்று கேட்டார்.

    அப்போது சிவிகையை சுமந்து வந்த அப்பர், தன் தலையை உயர்ந்தி, “இறைவனின் அடியவனாகிய நான், உன் அடிகள் தாங்கி வரும் பெருவாழ்வு பெற்று, இங்கிருக்கிறேன்” என்றார்.

    அதைக்கேட்டு திடுக்கிட்ட சம்பந்தர், உடனடியாக சிவிகையில் இருந்து கீழே குதித்தார். தன் வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கு தொண்டு செய்வதையே பணியாகக் கொண்ட அப்பரின் திருவடியை பற்றுவதற்காக ஓடோடிச் சென்றார். ஆனால் திருஞானசம்பந்தர் பணியும் முன்பாகவே, அவரது அடியைத் தொட்டார், அப்பர். அந்தக் காட்சியைக் கண்ட மற்ற அடியவர்கள் அனைவரும் தரையில் விழுந்து இரண்டு பெரும் அடியார்களையும் வணங்கினார்கள். பின்னர் இருவரும் திருவாலம்பொழில் ஈசனைப் பாடி, திருப்பூந்துருத்தியை வந்தடைந்தனர். இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் வகையில் இன்றளவும், திருஆலம்பொழில் திருத்தலத்தில் ‘தோள் கொடுத்த பெருவிழா’ நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×