
அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கடந்த 16-ந் தேதி இரவு கிராம தேவதையான செல்லியம்மன் மற்றும் அய்யனாருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நேற்று காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சித்திவிநாயகர் கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
தொடர்ந்து உற்சவர்கள் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, விழா கொடியேற்றப்பட்டது. இதையடுத்து சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சாமிகள், மயில், ஆட்டுக்கிடா, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலாவும் நடைபெற உள்ளது. வருகிற 27-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது.
28-ந் தேதி பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் திருமுதுகுன்றத்தில் எழுந்தருள சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பின்னர் மாலையில் கொளஞ்சியப்பருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.