என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிதம்பரம் நடராஜர் கோவில்
    X
    சிதம்பரம் நடராஜர் கோவில்

    சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள், அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகளுக்கு அனுமதி கிடையாது. 100 தீட்சிதர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா ஜூன் 19-ந் தேதி (அதாவது நாளை) கொடியேற்றத்துடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால், ஆனி திருமஞ்சன விழா நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் எழுந்தது.

    இதற்கிடையே ஆனி திருமஞ்சன விழாவுக்கான ஏற்பாடுகளை தீட்சிதர்கள் மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது. ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், விழாவை நடத்துவது குறித்து சிதம்பரத்தில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தீட்சிதர்கள், சுவாமியை உள்பிரகாரத்தில் சுற்றிவர அனுமதி தரவேண்டும் என கூறினர். ஆனால் அதற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்காததால், அந்த கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

    இந்த நிலையில் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆனி திருமஞ்சன விழாவை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் அன்புசெல்வன் பேசுகையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் எளிய முறையில் ஆனி திருமஞ்சன விழாவை நடத்திக் கொள்ளலாம்.

    விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள், அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகளுக்கு அனுமதி கிடையாது. 100 தீட்சிதர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். கோவிலுக்குள்ளே பூஜைகளை நடத்திக் கொள்ள வேண்டும். ஊரடங்கு அமலில் உள்ளதாலும், கொரோனா வைரஸ் பரவும் சூழல் உள்ளதாலும் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை நடத்தக் கூடாது. மேலும் விழாவுக்கு ஊரடங்கில் இருந்து எந்தவித தளர்வுகளும் அளிக்கப்படாது என்றார்.

    கூட்டத்தில் சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் பொது தீட்சிதர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆனிதிருமஞ்சன விழா தொடங்குகிறது.
    Next Story
    ×