search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச விழா நாளை தொடங்குகிறது
    X

    வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச விழா நாளை தொடங்குகிறது

    வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச விழா நாளை (ஞாயிற்றுக் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    வடலூர் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர் வள்ளலார். பின்னர் இவர் சென்னை, கருங்குழி, வடலூர் ஆகிய பகுதிகளில் வசித்து வந்தார். 14 ஆண்டுகள் கருங்குழியில் தங்கிய வள்ளலார் திருவருட்பா எழுதினார். இறைவன் ஒளி வடிவானவர் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார்.

    மேலும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தருமச்சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார்.

    இதைத்தொடர்ந்து மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று சத்திய ஞானசபையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 148-வது தைப்பூச திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவையொட்டி அன்று காலை 5 மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு தருமச்சாலை, மருதூர் இல்லம், கருங்குழி இல்லம், மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும், காலை 10 மணிக்கு ஞானசபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    தைப்பூச திருவிழாவான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணி ஆகிய 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. பின்னர் 23-ந்தேதி மேட்டுக்குப்பத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.

    விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார் கள் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் விழா நடைபெறும் இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். மாவட்ட கலெக்டர் அறிவுரையின் பேரில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ முகாம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. சென்னை, கும்பகோணம், தஞ்சை போன்ற பிற மாவட்டங்களில் இருந்து வடலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    Next Story
    ×