search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பண்ணாரி அம்மன் சப்பரத்தின் முன்பு வரிசையாக படுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    பண்ணாரி அம்மன் சப்பரத்தின் முன்பு வரிசையாக படுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களை படத்தில் காணலாம்.

    பண்ணாரி அம்மன் சப்பரம் முன்பு தரையில் படுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

    சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் சப்பரம் முன்பு தரையில் படுத்து பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இது குறித்த செய்தியை பார்க்கலாம்.
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் திருவிழா கடந்த 27-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    28-ந் தேதி மாலை சருகு மாரியம்மன், பண்ணாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளினார்கள்.

    இதைத்தொடர்ந்து தாரை, தப்பட்டை மற்றும் பழங்குடியின மக்களின் பீனாட்சி வாத்தியம் முழங்க சப்பரம் வீதி உலாவாக புறப்பட்டது. அன்று நள்ளிரவு பண்ணாரி அருகில் உள்ள சிக்கரசம்பாளையம் மாரியம்மன் கோவிலை சப்பரம் சென்றடைந்து தங்க வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை சிக்கரசம்பாளையம் கிராமம் முழுவதும் அம்மன் வீதி உலா நடந்தது.

    பின்னர் மாலை சிக்கரசம்பாளையத்தில் அம்மன் வீதி உலாவாக புறப்பட்டு அருகில் உள்ள புதூர் மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. இரவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜை செய்யப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டது.

    பின்னர் நேற்று காலை 7.30 மணி அளவில் புதூரில் இருந்து இக்கரைதத்தப்பள்ளி காலனியில் உள்ள பட்டத்தரசி கோவிலுக்கு சப்பரம் வீதி உலாவாக வந்து சேர்ந்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தேங்காய், பழம் படைத்து அம்மனை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து அம்மன் வீதி உலா தொடங்கியது.

    உடனே அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் சப்பரத்தின் முன்பு வரிசையாக தரையில் படுத்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். அப்போது கோவில் பூசாரிகள் மற்றும் சப்பரத்தை தூக்கி வந்த பக்தர்கள் அங்கு தரையில் படுத்திருந்தவர்களை தாண்டி, தாண்டி சென்றனர்.

    இதையடுத்து அம்மன் சப்பரம் வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம் வழியாக தொட்டம்பாளையத்தில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலை சென்றடைந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) வெள்ளியம்பாளையம் புதூர், அக்கரைதத்தப்பள்ளி பகுதியில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பண்ணாரி கோவிலை அம்மன் சப்பரம் சென்றடைகிறது.
    Next Story
    ×