என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வலிப்பு நோய் தீர்க்கும் மாற்றுரை வரதீஸ்வரர் திருத்தலம்
    X

    வலிப்பு நோய் தீர்க்கும் மாற்றுரை வரதீஸ்வரர் திருத்தலம்

    இலுப்பை எண்ணெயில் தீபங்கள் ஏற்றி, திங்கட்கிழமை தோறும் மாற்றுரைவரதீஸ்வரரை வழிபட்டால், வாழ்வில் சுகம் கிடைக்கும் என்ற அனுபவத்தைச் சிலர் உறுதியாகக் கூறுகின்றனர்.
    திருச்சிராப்பள்ளியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது திருப்பாச்சிலாச்சிராமம். நீர் வளமும், நில வளமும் மிக்க இந்த ஊர் தற்போது திருவாசி என்று அழைக்கப்படுகிறது. திருச்சி அருகே உள்ள பெருஞ்சாலை என்ற இடத்தில் இருந்து உள்ளே ஒரு பர்லாங்கு தூரம் சென்றால் இந்தத் திருத்தலத்தை அடையலாம்.

    ஊரின் நடுவில் அமையப்பெற்றுள்ள பெரிய, பழமையான ஆலயம் இது. தற்போது கும்பாபிஷேகத்திற்கான ஆயத்தப் பணிகள் இந்த ஆலயத்தில் நடைபெற்று வருகின்றன. திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகியோரது தேவாரப் பதிகம் பாடப்பெற்ற காவிரி வடகரைத் தலம் இதுவாகும். இந்த ஆலயத்தின் அருகே திருவானைக்கா, திருப்பைஞ்ஞீலி போன்ற சிவ தலங்கள் இருக்கின்றன.

    கிழக்கு நோக்கியுள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், கற்தூண்கள் நிறைந்த பழமை வாய்ந்த பெரிய மண்டபம் உள்ளது. அதைத்தாண்டி உள்ளே நுழைந்தால் மாடக் கோவிலாக சுற்றுப் பிரகாரத்துடன் கூடிய ஆலயத்தில் முக்கண்ணன் வீற்றிருக்கிறார். ருத்ராட்சப் பந்தலின் கீழ் சிவலிங்கமாக வீற்றிருக்கும் இறைவனின் பெயர் மாற்றுரை வரதீஸ்வரர் என்பதாகும்.

    நோய் தீர்த்த வரலாறு :

    ஒரு காலத்தில் இந்தப் பகுதியை கொல்லி மழவன் என்ற சிற்றரசன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவனது மகளுக்கு தீராத வலிப்பு, வாதம், வயிற்று வலி இருந்தது. இதனால் அவள் நாளும் அவதிப்பட்டு வந்தாள். மன்னன் தன்னுடைய மகளுக்கு எவ்வளவோ மருத்துவம் பார்த்தும், அவளது நோய் தீர்ந்த பாடில்லை. இறுதியில் இறைவன் ஒருவனே சரணம் என்ற முடிவுக்கு மன்னன் வந்தான். படுத்த படுக்கையாக இருந்த தன்னுடைய மகளை இந்த ஆலயத்திற்கு கொண்டு வந்து போட்டு விட்டு சென்று விட்டான்.

    இந்த நிலையில் திருஞான சம்பந்தர், தல யாத்திரையாக இந்த ஆலயத்திற்கு வந்து சேர்ந்தார். அப்போது மன்னனின் மகளுக்கு ஏற்பட்ட நோய் குறித்து அறிந்த அவர் வருத்தம் கொண்டார்.

    பின்னர் ‘மங்கையை வாடவிடாதே, தையலை வாடவிடாதே, பைந்தொடியை வாடவிடாதே’ என்ற ரீதியில் உள்ளத்தை உருக்கும் விதமாக பதிகங்களைப் பாடினார் திருஞான சம்பந்தர். இதையடுத்து அந்தப் பெண்ணின் நோய் தீர்க்க சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார்.

    இறைவன் நடராஜராக ஆனந்த நடனம் ஆடினார்.

    மன்னன் மகளைச் சித்திரவதை செய்து கொண்டிருந்த நோயை, முயலகன் வடிவமாகத் திரட்டி அழித்து, பாம்பின் மீது நடனமாடினார் சிவ பெருமான். இதையடுத்து வாதம், வலிப்பு, வயிற்று வலி ஆகிய நோய்கள் நீங்கிய மன்னனின் மகள், பூரண குணம்பெற்று எழுந்து நடந்தாள். மேற்கண்ட நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டு, அவற்றை ‘முயலகன் நோய்’ என்று கூறும் வழக்கு பின்னாளில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்தக் கோவிலில் சிவன் சன்னிதிக்கு முன்பாக உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னிதியில் நர்த்தனமாடும் நடராஜ பெருமான் வீற்றிருக்கிறார். இவரது திருவடியில் வழக்கமாக காணப்படும் முயலகன் இல்லை. விரிசடை இல்லாது, ஒன்றிணைந்த தலைமுடியுடன் நாகத்தை காலடியில் போட்டு, ‘சர்ப்ப நடராஜராக’ நடனமாடும் காட்சி இன்றும் வழிபாட்டுக்குரியதாக இருக்கிறது.

    வலிப்பு, வாதம், வயிற்றுவலி போன்றவை மருத்துவத்தால் குணமடையாத நிலையில் இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். சிவனே தஞ்சம் என்று இங்கு வந்து ஒரு மண்டலம் நடராஜருக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தித்து, திரு ஞானசம்பந்தரின் பதிகம் பாடினால் நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    சிவன் சன்னிதிக்கு வலது புறத்தில் மேற்கு நோக்கிய சன்னிதியில் அம்பிகை வீற்றிருக்கிறார். ‘பாலாம்பிகை’ என்பது அன்னையின் திருநாமம் ஆகும். அன்னை சன்னிதிக்கு எதிரே ‘அன்னமாம் பொய்கை’ என்ற தீர்த்தமும், தல விருட்சமான வன்னி மரமும் இருக்கின்றன.

    அருள் வழங்கும் அன்னை :

    அருள் வழங்குவதில் சுவாமிக்கு சளைத்தவள் அல்ல.. இந்த பாலாம்பிகை. பால தோஷம் உள்ள குழந்தைகளின் நோய் நீங்க மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து வந்து, பாலாம்பிகைக்கு அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டால், குழந்தைகள் நலம் பெறுவார்கள் என்பது பக்தர் களின் நம்பிக்கை. அன்னைக்கு பாலாபிஷேகமும் செய்து பலன் பெறலாம்.

    திருமணம் ஆகாத கன்னியரும், காளையரும் 5 வெள்ளிக்கிழமை தொடர்ந்து வந்து, இங்குள்ள திருக் குளத்தில் நீராடி அம்பிகையை வழிபட்டால் விரைவில் திருமணம் நடந் தேறும். ஏனென்றால் அம்பிகையும் ஒரு வணிகன் மகளாகப் பிறந்து, இத்தல வன்னி மரத்தடியில் தவமிருந்து, சிவபெருமானை திருமணம் செய்து கொண்டதாகத் தலபுராணம் சொல்கிறது.

    பொன் பெற்ற சுந்தரர் :

    சிவபெருமானின் கயிலாய நண்பர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர் பூலோகத்தில் சுந்தரராக அவதரித்ததில் இருந்து அவரிடம் விளையாட்டுக் காட்டுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தார் ஈசன். அப்படி ஒரு விளையாட்டு, சோதனை நடந்த தலம் இதுவாகும்.

    ஆம்! சுந்தரர் ஒரு முறை, சிவபெருமானிடம் பொன் கேட்டுப் பதிகம் பாடினார். பதிகப் பாடல்களைக் கேட்ட சிவபெருமான், சுந்தரருக்கு பொன் வழங்காமல் மவுனம் காத்துக் கொண்டிருந்தார். இதனால் கோபம் கொண்ட சுந்தரர், ‘இங்கு சிவன் இருக்கிறாரா? இல்லையா?’ என்று கேட்கும் விதத்தில் ஒரு பதிகப் பாடலைப் பாடினார். இதையடுத்து சிவபெருமான் ஒரு பொற்கிழியை, சுந்தரர் முன்பாக பரிசாக வைத்தார்.

    ஆனால் அந்தப் பொன் உண்மையானதுதானா? என்ற சந்தேகம் சுந்தரருக்கு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக இரண்டு பேர் வந்தார்கள். அவர்களில் ஒருவர் அந்த தங்கத்தை உரசிப் பார்த்து, அது தரமான தங்கம் தான் என்று சொன்னார். உடன் வந்தவரும் அதை உறுதிப்படுத்தினார். அவர்கள் யார் என்று சுந்தரர் அறியும் முன்பாக, இருவரும் மறைந்து விட்டனர்.

    பின்னர்தான் தங்கத்தை உரசிப் பார்த்தவர் சிவபெருமான் என்பதும், அவருக்கு துணையாக வந்தவர் விஷ்ணு பகவான் என்பதும் சுந்தரருக்கு தெரியவந்தது. இதையடுத்து தன் தவறை உணர்ந்த சுந்தரர், சிவபெருமானை புகழ்ந்து சில பதிகங்களைப் பாடினார். எனவே இத்தல இறைவனுக்கு ‘மாற்றுரை வரதீஸ்வரர்’ என்று பெயர் ஏற்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.

    இலுப்பை எண்ணெயில் தீபங்கள் ஏற்றி, திங்கட்கிழமை தோறும் மாற்றுரைவரதீஸ்வரரை வழிபட்டால், வாழ்வில் சுகம் கிடைக்கும் என்ற அனுபவத்தைச் சிலர் உறுதியாகக் கூறுகின்றனர்.

    திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் வட்டத்தில் புராதனப் பெருமையும், நோய் தீர்க்கும் சிறப்பும் கொண்ட இந்தத் திருக்கோவில், தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    Next Story
    ×