என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமங்கலக்குடி திருத்தலம்
    X
    திருமங்கலக்குடி திருத்தலம்

    நவகிரக தோஷம் போக்கும் திருமங்கலக்குடி

    நவக்கிரக ஸ்தலங்களை தரிசிக்கும் முன் வணங்கவேண்டிய தலம் திருமங்கலக்குடி.
    இத்தலம் சூரியனார் கோவில் அருகில் அமைந்துள்ளது. மூலவராக ” பிராணவரதேஸ்வரரும்”. அம்பாளாக ” மங்கள நாயகியும் ” அருள் புரியும் இத் திருத் தலம், மங்கலக்குடி, மங்கல விநாயகர், மங்கல நாதர், மங்கல் நாயகி, மங்கல தீர்த்தம் என ” பஞ்ச மங்கல ஷேத்ரமாக” வழிபடப்படுகிறது.. திருநாவுக்கரசராலும், திருஞானசம்பந்தராலும் பாடப் பெற்ற புண்ணிய பூமி இது.“மங்கலக்குடி ஆளும் ஆதிபிரான் அடிகள் அடைந்து ஏத்தவே கோளும் நாளவை போயலும் குற்றமிலார்கலே”எனப் புகழ்ந்துள்ளார் திருஞானசம்பந்தர்

    ஒரு சமயம் இமயமலை சாரலில் தவம் செய்து கொண்டிருந்தார் “காலவர் ” என்ற மகா முனிவர் ஒருவர். முக்காலமும் அறிந்தவர். அவரிடம் வந்த துறவி ஒருவர் தன்னை பற்றிய வருங்காலத்தை தெரிவிக்குமாறு கேட்டார். அத்ற்கு காலவரோ ” துறவியே, எனது ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்ட உமது வருங்காலம் பற்றி கூற ஒன்றும் இல்லை” எனக் கூறினார். அதற்கு துறவியோ ” முனிவரே அனைவரது வருங்காலம் பற்றி கூறும் உமது எதிர்காலம் பற்றி உமக்கு ஏதும் தெரியுமா” என வினவ.

    காலவர் ” நீர் யார் ? ” எனக் கேட்டார். துறவி ” நான் தான் கால தேவன் ” எனக் கூறி மறைந்தார். காலவ முனிவரும் தன் வருங்காலம் எப்படி இருக்கும் என தனது ஞானதிருஷ்டியால் காண, தன்னை , முன் வினைப் பயனால் ” குஷ்ட நோய் ” பிடிக்கபோவதை உணர்ந்தார். முன்வினைப் பயங்களுக்கு வினைகளை தருபவர்கள் நவக்கிரகங்களே என்றெண்ணி, அவர்களை நோக்கி கடும் தவம் புரிந்தார். தவத்தை மெச்சிய நவகிரகர்கள் என்ன வரம் வேண்டு எனக் கேட்க, தன்னை குஷ்ட நோய் பீடிக்காமல் காத்தருள வேண்டினார். நவக்கிரக நாயகர்களும் அவ்வாறே ஆகட்டும் என ஆசீர்வதிதனர். இதனை அறிந்த பிரம்ம தேவர் நவகிரகங்களின் மேல் கடும் சினம் கொண்டார்.

    நவக்கிரகங்களே, தேவர்களாய் இருப்பினும் தனித்து இயங்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. சிவனின் ஆணைப்படியும், கால தேவனின் துணையுடனும் மட்டுமே நீங்கள் அவரவர் வினைக்கேற்ப நன்மை, தீமைகளை அளிக்க வேண்டும். இதை மீறி காலவ முனிவரை நீங்கள் காத்ததால், அத் தொழு நோய் உங்களை பிடிக்கும் ” என்றார் பிரம்ம தேவர். கலங்கின நவகிரகங்கள். பிரம்மனின் திருவடி பற்றி சாப விமோஷனம் கேட்டனர்.

    மனமிறங்கிய நான்முகனும் அவர்களிடம், “அர்க்கவனம் என்ற தலம் சென்று அங்கு வீற்றிருக்கும் பிராணவரதரையும், மங்கல நாயகியையும் வழிபடுங்கள். கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்று கிழமை தொடங்கி 12 ஞாயிற்று கிழமைகள் தவம் செய்யுங்கள். திங்கள் கிழமைகள் தோறும் நீராடி, வெள்ளெருக்கு இலையில் ஒரு பிடி தயிர் அன்னம் வைத்து உண்ணுங்கள் ” என்றார். மற்ற நாட்களில் உண்ணா நோன்பு இருக்க சொன்னார்.

    நவக்கிரகங்களும் அவ்வாறே அர்க்கவனம் வந்து அப்பனையும், அம்மையையும் வழிபட்டனர். பிரம்மனது சாபத்தால் தொழு நோய் அவர்களை பற்றியது. அச் சமயம் அங்கு வந்த அகத்திய முனிவர், வழிபாடு முறை பற்றி விளங்கச் சொன்னார். அர்க்கவனத்தின் வட கிழக்கு பகுதியில் விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடச் சொன்னார்.

    கடுமையான உண்ணா நோன்பும், திங்கட் கிழமைகள் மட்டும் எருக்க இலையில் சிறிது தயிர் அன்னம் புசிக்க சொன்னார். அர்க்கவனத்தில் இருந்த ஒன்பது தீர்த்தங்களையும் ஆளுக்கு ஒன்றாக தேர்ந்து எடுத்து நீராடச் சொன்னார். எருக்க இலையில் தயிர் அன்னம் உண்ணும் பொழுது, அந்த இலையின் ஒரு அணுப் பிரமான அளவு அன்னத்தில் கலக்கும். அதுவே குஷ்ட நோய் தீர்க்கும் எனவும் விளக்கினார்.

    இவ்வாறு 78 நாட்கள் கடும் தவம் செய்த பின்னர், 79 ஆம் நாள்பிராணவரதரும் மங்கல நாயகியும் நவக்கிரகங்களுக்கு காட்சி தந்து ” நவக்கிரகர்களே, உமது தவம் மெச்சினோம். உம்மை பற்றிய தொழு நோய் முழுவதும் நீங்கட்டும். இந்த அர்க்க வனத்தின் வட கிழக்கு பகுதியில் ஒர் ஆலயம் உண்டாக்கி, உம்மை வந்து வழிபடுபவரது நவக்கிரக தோஷங்களை தீர்ப்பீராக. இத் தலம் நவக்கிரகர்களுக்கு உரிய பரிகார தலமாக விளங்கட்டும் ” என அருளினார்.

    இதனிடையே, தன்னால் நவக்கிரகர்கள் தொழு நோயால் பிடிக்கப்பட்டதை அறிந்த காலவ முனிவர், ஓடோடி வந்து நவக்கிரகர்களிடம் சரணடைந்து மன்னிப்பு கேட்டார். நவ நாயகர்களும் அவரை மன்னித்து தாங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வினாயகரை வழிபட்டனர். சாப பிணியான கோள் தீர்த்ததால் இவர் ” கோள் தீர்த்த வினாயகர் ” என வழிபடலானார். பின்னர் காலவ முனிவரிடம், இறைவன் ஆணைப்படி தங்களுக்காக தனி சன்னதிகள் கொண்ட ஆலயம் ஒன்றை உருவாக சொன்னார்கள். முனிவரும் அவ்வாறே, திருக்கோயில் ஒன்றை அமைத்து நவக்கிரக நாயகர்களை தனி சன்னதிகளில் பிரதிஸ்டை செய்தார்.

    பிராண வரதேஸ்வரரும் , மங்களாம்பிகையும் எழுந்தருளியுள்ள திருத்தலம் ” திருமங்கலக்குடி ” என்றும், நவக்கிரக நாயகர்கள் தனி சன்னதிகள் கொண்டு அருளும்தலம் ” சூரியனார் கோவில் ” என்றும் வழிபடலாயிற்று. சூரியனார் கோவில் வழிபாட்டை திருமங்கலக்குடியில் இருந்துதான் துவங்க வேண்டும். நவக்கிரக வழிபாட்டில் முதல் திருத்தலமாக விளங்குவது இத்திருமங்கலக்குடி.
    மாங்கல்ய பலம் அருளும் மங்கலநாயகி

    நவக்கிரகங்களின் தோஷங்களையே நீக்கிய இத்திருத்தலத்தினை வழிபட்ட பின்னரே சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டும். நோய்கல் தீர்க்கும் திருத்தலம் இது. வியாதி உள்ளவர்கள், கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு துவங்கி தொடர்ந்து 11 ஞாயிற்று கிழமைகள் வெள்ளெருக்கு இலையில் தயிர் அன்னம் நைவேத்யம் செய்து வழிபட்டு அப்பிரசாதத்தினை உட்கொண்டால் வியாதிகள் அனித்தும் முற்றிலும் நீங்கப் பெறலாம். மங்கள விமானம், மங்கள விநாயகர், மங்கள நாயகி, மங்கள தீர்த்தம் மற்றும் மங்கள கோயில் என “பஞ்சமங்கள ஷேத்திரமாக” விளங்கும் திருத்தலம் இது.

    கும்பகோணம்- மயிலாடுதுறை பேருந்துச் சாலையில் உள்ள ஆடுதுறை என்ற ஊரிலிருந்து சுமார் இரண்டு கி.மீ. தூரத்தில், சூரியனார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது குரங்காடு துறை எனப்படும் ஆடுதுறை தலம். (திருவாவடு துறை என்பது வேறு.)

    இத்திருத்தலத்தில் சிவபெருமான் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயரில் இறைவி பவளக்கொடியம்மையுடன் அருள்புரிகிறார். இந்தத் திருத்தலத்திலிருந்து வடக்கே இரண்டு கி.மீ. தூரத்தில் அமைந்திருப்பதுதான் “பஞ்ச மங்கலத் தலம்’ என்று சிறப்பித்துப் போற்றப்படும் திருமங்கலக்குடி திருத்தலம். மங்கள விமானம், மங்கள விநாயகர், மங்கள தீர்த்தம், மங்கலக்குடி, மங்களாம்பிகை ஆகிய ஐந்தும் இத்தலத்தில் அமைந்திருப்பதாலேயே இந்தத் திருப்பெயர் ஏற்பட்டது.

    இத்தலத்து இறைவியை வழிபட, திருமணத் தடை நீங்கும்; மாங்கல்ய பலம் நீடிக்கும்; ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவம். அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடிய திருத்தலம் இது. கார்த்திகை மாத முதல் ஞாயிறு தொடங்கி, தொடர்ந்து 11 ஞாயிற்றுக் கிழமைகள்- தயிர் சாதத்தை வெள்ளெருக்கு இலையில் வைத்து சுவாமிக்கு நிவேதனம் செய்து அதை உண்ண, நோய் குணமடைவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு செய்து பிணிகள் விலகியோர் பலருண்டு..

    ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு திசை நோக்கியுள்ளது. முன்மண்டபத்தில் அம்பாள் மங்களநாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. உள்சுற்றில் விநாயகர், ஆறுமுகர், கஜலட்சுமி, பைரவர் சந்நிதிகளும் நடராஜ சபையும் உள்ளன. இரண்டு நடராஜ உற்சவ மூர்த்தங்கள் இங்கு காணப்படுவது சிறப்பு. ஒருவர் ஆனித் திருமஞ்சன நாளிலும் மற்றொருவர் ஆருத்ரா தரிசன நாளிலும் திருவீதி உலா வருகின்றனர்..

    கருவறையில் கோவில் கொண்டிருக்கும் சிவபெருமான் நீண்டுயர்ந்த பாண வடிவில் உள்ளார். சந்திரசேகரர், மயில் வாகனர், நால்வர், பிரதோஷ நாயகர் உற்சவமூர்த்திகள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, ரிஷபாரூடர், பிரம்மா, துர்க்கைக்கு சந்நிதிகள் உள்ளன..

    சூரியன், திருமால், காளி, பிரம்மன், அகத்தியர் முதலானோர் இத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டுப்பேறு பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.

    Next Story
    ×