என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில்
    X
    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில்

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில்

    ‘கயிலையே மயிலை; மயிலையே கயிலை’ எனப் புகழப்படுகிறது, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோவில். இத்தல இறைவன் கபாலீசுவரர் என்று அழைக்கப்படுகிறார். பிரம்ம சிரச்சேத மூர்த்தியாக, பிரம்ம கபாலத்துடன், தாருகா வனத்து ரிஷிகளின் இல்லம் சென்று பிச்சை ஏற்ற காரணத்தால் கபாலீசுவரர் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
    தல வரலாறு :

    ஒரு முறை அன்னை பார்வதிக்கு ஐந்தெழுத்தின் பெருமையையும், திருநீற்றின் சிறப்பினையும் இறைவன் விளக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அன்னையின் கவனம் முழுவதும், அங்கே தோகை விரித்து ஆடிய மயிலின் மீதே சென்றது.

    இதனால் சினம் கொண்ட சிவபெருமான் அன்னையை பூவுலகில் மயிலாகத் தோன்றி தன்னை வழிபட்டு, அதன்பின் கயிலாயம் வந்து சேர வேண்டும் என்று பணித்தார்.

    அதன்படியே மயில் வடிவம் கொண்ட பார்வதிதேவி, தற்போதைய மயிலை திருத்தலத்தில் புன்னை மரத்தடியில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டார். அவரது வழிபாட்டில் மகிழ்வுற்ற சிவபெருமான் மீண்டும் அன்னையை ஏற்றுக்கொண்டார்.

    அதே போல அன்னையின் வேண்டுகோளுக்கு இணங்க இப்பகுதி மயிலை என்று அழைக்கப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது.

    ஆலய அமைப்பு :

    கிழக்கு நோக்கிய ஏழு நிலை ராஜகோபுரம், 9 கலசங்களுடன் 132 அடி உயரத்தில் விண்ணை நோக்கி பிரமாண்டமாய் நிற்கின்றது. அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரலாறு உள்ளிட்ட பல்வேறு சுதைச்சிற்பங்கள் இந்தக் கோபுரத்தினை அலங்கரிக்கின்றன. இதன் எதிரே 16 கல் மண்டபம் அமைந்துள்ளது. ஆலயத்தின் மேற்கே கபாலித் தீர்த்தம் எனும் பிரமாண்ட திருக்குளம் மூன்று லட்சத்து 25 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது.

    மூலவர் கபாலீசுவரர் மேற்கு முகம் நோக்கி காட்சி தர, எளிய மேற்கு கோபுரம் வாசலாக அமைந்துள்ளது. வலமாக, நர்த்தன விநாயகர், உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் சன்னிதி, திருப்புகழ் பாடல் பெற்ற வள்ளி–தெய்வானை சமேத சிங்கார வேலர் சன்னிதிகள் உள்ளன.

    முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், வள்ளி–தெய்வானை யானை வாகனத்திலும் அமர்ந்து காட்சி தருவது அரிய கோலமாகும். மேற்கு வாசலில் கொடிமரம், பலிபீடம், பிரமாண்ட நந்தி கிழக்கு முகமாய் நோக்க, மூலவர் கபாலீசுவரர் மேற்கு முகமாய் அருளாசி வழங்குகிறார். இறைவன் பெரிய வடிவில் எழிலோடு காட்சி தருவது கண்கொள்ளாக்காட்சியாகும்.

    கருவறைக் கோட்டத்தில் துர்க்கை, சண்டிகேசுவரர், பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியவை அமைந்துள்ளன. துர்க்கை சன்னிதி எதிரே அறுபத்து மூவர் உள்ளிட்ட அனைத்து உற்சவர்களும் வரிசையாக அணி வகுக்கின்றன. உற்சவ மூர்த்திகள் அனைத்தும் கலைநயம் கொண்டு திகழ்கின்றன.

    அன்னை மயிலாகி வழிபடும் சன்னிதி, அருணகிரிநாதர், அங்கம் பூம்பாவை, தனி சனிபகவான் சன்னிதி, நவக்கிரக சன்னிதி, சிங்கார வேலர் சன்னிதிக்கு இடது புறம் பழனி ஆண்டவர் சன்னிதி, நாயனார் சன்னிதிகளும் ஒருங்கே அமைந்துள்ளன. நர்த்தன விநாயகர் சன்னிதியில் இடது புறம் ஜெகதீஸ்வரர், சுந்தரேஸ்வரர் சன்னிதிகள் அமைந்துள்ளன.

    பல நூற்றாண்டுகளாக இவ்வாலயத்திற்கு விழாக்கள் நடைபெற்றதை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

    சிவாலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்கள் இங்கு சிறப்புடன் நடத்தப்படுகின்றன. பங்குனியில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. தலமரம் புன்னை மரம், தலத் தீர்த்தம் கபாலித் தீர்த்தம் ஆகும்.

    பேயாழ்வார் :

    வைணவ நெறியைப் பின்பற்றி வாழ்ந்த பன்னிரெண்டு ஆழ்வார்களில், பேயாழ்வார் குறிப்பிடத்தக்கவர். கிணற்றில் தோன்றியவர். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின், மூன்றாம் திருவந்தாதி பாடியவர். சைவம், வைணவம் என்ற இரு சமயத்திற்கும் இடையே இருந்து வந்த வேற்றுமையை நீக்கி ஒற்றுமைக்கு பாடுபட்டவர் என்பது இவரின் கூடுதல் சிறப்பு. இவர் அவதரித்த கிணறு, சென்னை கச்சேரி சாலையில் இணையும் அருண்டேல் தெருவில் அமைந்துள்ளதை இன்றும் கண்டு மகிழலாம்.

    பெண்ணை உயிர்ப்பித்த சம்பந்தர் :

    ஏழாம் நூற்றாண்டில் சிவனேசன் என்ற வணிகர் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார். அவர் தனது மகளான பூம்பாவையை திருஞான சம்பந்தருக்கு மணம் புரிய விரும்பினார். ஆனால் எதிர்பாராத விதமாக பூம்பாவை, பாம்பு தீண்டி இறந்து போனாள். எனினும், நம்பிக்கையை இழக்காத சிவனேசர் தன் மகளின் உடலை எரித்து, அதன் எலும்பு மற்றும் சாம்பலை ஒரு குடத்தில் வைத்து பாதுகாத்து வந்தார்.

    இந்த நிலையில் ஒரு முறை திருஞானசம்பந்தர், திருமயிலைக்கு வருகை தந்தார். அப்போது தனது மகளின் நிலையை அவரிடம் எடுத்துக்கூறினார் சிவனேசர். திருஞான சம்பந்தர், கபாலீசுவரரை மனதில் தியானித்து, பதினோரு பாடல்களை பாடினார். இறைவனின் அருளால், பூம்பாவை உயிர் பெற்று எழுந்தாள். உடனே அவளை மணம் செய்து கொள்ளும்படி சம்பந்தரிடம் வேண்டினார் சிவனேசர். ஆனால் ஒரு உயிரை உயிர்ப்பித்துக் கொடுத்த வகையில், அவளுக்கு தந்தையாகிப்போனதாக கூறி அன்போடு மறுத்து விட்டார். இந்த நிகழ்வே அறுபத்து மூவர் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அறுபத்து மூவருக்கு சில குறிப்பிட்ட ஆலயங்களில் விழா எடுப்பது அறிந்ததே. என்றாலும் மயிலாப்பூரில் நடக்கும் எட்டாம் நாள் விழாவான அறுபத்து மூவர் விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. பூம்பாவையை உயிர்பித்து 16 கால் மண்டபம் வரும் திருஞானசம்பந்தர், சிவனேச செட்டியார், பூம்பாவை, பஞ்ச மூர்த்திகள் மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்கள் ஆகியோர் வீதி உலா வருவது வெகு விமரிசையாக நடைபெறும்.

    அமைவிடம் :

    தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரின் மையப்பகுதியில் மயிலாப்பூர் அமைந்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து தெற்கே 9 கிலோமீட்டர், சென்னை எழும்பூரில் இருந்து தென் கிழக்கே 8 கிலோமீட்டர், வேளச்சேரி – சென்னை கடற்கரை ரெயில் தடத்தில் திருமயிலை ரெயில் நிலையம் அருகே மயிலாப்பூர் கபாலீசுவரர் திருத்தலம் அமைந்துள்ளது.

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென்கிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் மயிலாப்பூர் உள்ளது. வடக்கில் திருவொற்றியூர், தெற்கே திருவான்மியூர் நடுவில் திருவல்லிக்கேணி என பழம் பெரும் தலங்களுக்கு மையமாக மயிலாப்பூர் இருக்கிறது.

    Next Story
    ×