search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வராஹி அம்மன்
    X
    வராஹி அம்மன்

    வரங்கள் பல தரும் வராஹி அம்மன் விரதம்

    வராக நவராத்திரியின் ஒன்பது நாட்களும், இரவு நேரத்தில் விரதமிருந்து வராகி அம்மனை பூஜை செய்துவந்தால், கண்டிப்பாக நல்லவை அனைத்தும் வந்துசேரும் என்பது சித்தர்கள் வாக்கு.
    பன்னிரண்டு மாதங்களுக்கும், 12 நவராத்திரிகள் இருப்பதாக ‘சாக்த சாஸ்திரங்கள்’ குறிப்பிடுகின்றன. ஆனால் பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் நவராத்திரிகள், புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ‘சாரதா நவராத்திரி’, பங்குனி மாதத்தில் வட மாநிலங்களில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ‘வசந்த நவராத்திரி’ ஆகியவைதான். இதுதவிர தை மாத அமாவாசையில் தொடங்கி ஒன்பது நாட்கள் வழிபடப்படும் ‘சியாமளா நவராத்திரி’, ஆனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் அம்பாளை, வராகியாக நினைத்து வழிபடப்படும் ‘வராக நவராத்திரி’ ஆகியவையும் வழிபாட்டில் உள்ளன.

    வராக நவராத்திரியை ‘ஆஷாட நவராத்திரி’ என்றும் அழைப்பார்கள். வராகி அம்மன் என்றாலே ராகு கால வழிபாடும், பஞ்சமி வழிபாடும், பின்னிரவு வழிபாடும் பெரும் சிறப்புக்குரியவை. வராக நவராத்திரியின் ஒன்பது நாட்களும், இரவு நேரத்தில் விரதமிருந்து வராகி அம்மனை பூஜை செய்துவந்தால், கண்டிப்பாக நல்லவை அனைத்தும் வந்துசேரும் என்பது சித்தர்கள் வாக்கு.

    தமிழகத்தில் தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு, ஆஷாட நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வெகு விமரிசையாக வழிபாடுகள் நடைபெறும். இதில் பங்கேற்பவா்களுக்கு கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கைவரப்பெறும். வராகி அம்மன் ஆலயம் அருகில் இல்லை என்றாலோ, வீடுகளில் வராகி அம்மன் வடிவம் இல்லை என்றாலோ, அருகில் உள்ள ஆலயங்களில் உள்ள அம்பாள் சன்னிதிகளில் வழிபாடு செய்தாலே போதுமானது. ஏனெனில் அம்பாளின் வடிவாகத்தான் வராகியைப் பார்க்கிறோம்.

    வராகி நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும், வராகி அம்மனுக்கு தேனில் ஊற வைத்த மாதுளை முத்துக்களை நைவேத்தியமாக படைப்பார்கள். மேலும் அந்த அன்னைக்கு சிவப்பு, மஞ்சள், பச்சை நிற வஸ்திரம் அணிவிப்பதும் சிறந்தது. அதிலும் பச்சை நிறமே, வராகி அம்மனுக்கு பெரிதும் உகந்தது. வராகி அம்மனை வழிபடுபவர்களும், இந்த நவராத்திரி காலங்களில் பச்சை நிற ஆடைகளை அணிந்து வழிபாடு செய்வது உடனடி பலன்களைத் தரும். காஞ்சிபுரம் காமாட்சி அன்னையின் இடது புறத்தில் வராகி தேவி அருள் பாலிக்கிறாள். அங்கு வராகி அம்மனின் எதிரில் ‘சந்தான ஸ்தம்பம்’ உள்ளது. இந்த ஸ்தம்பத்தைப் பிரதட்சணம் செய்யும் பக்தர் களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும்.

    பிராமி, கவுமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி, வராகி எனும் சப்த மாதா்களில், வராகி அம்மன் சிறந்த வரப் பிரசாதி ஆவார். இவர் சப்த மாதர்கள் என்னும் எழுவரில், ஐந்தாமானவள். மனித உடலும், வராக (பன்றி) முகமும் கொண்டவள். சப்த மாதர்களில் வராகியை தனி தெய்வமாக வழிபடும் முறை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. மாதுளை முத்துக்களை தேனில் சிறிது ஊறவைத்து, அதனை வராகி அம்மனுக்கு வைவேத்தியம் செய்து பஞ்சமி நாட்களின் பின்னிரவில் (இரவு 11 மணிக்கு மேல்) அல்லது வராகி நவராத்திரி நாட்களின் பத்தாவது நாளான நிறைவு நாள் வரையிலும் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, வராகி அம்மனுக்கு செம்பருத்தி, சிவப்பு அரளி, மரிக்கொழுந்து மாலை சூட்டி வழிபாடு செய்து வரலாம். இந்த வழிபாட்டின் மூலம் நற்பலன்களை அடையலாம்.

    பள்ளூர் அரசாலை அம்மன் என்னும் வராகி அம்மன் பெரும் வரம் தந்தருளுபவள். காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் பள்ளூர் அரசாலை அம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு தெற்கு நோக்கி அமர்ந்தநிலையில் வராகி அம்மன் அருள்கிறாள். மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் செவ்வாய், பஞ்சமி, அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில், வராகி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பானது. அந்த வழிபாட்டின் போது, வாழை இலை போட்டு, அதில் பச்சரிசியை பரப்பி வைத்து, தேங்காய் உடைத்து, அதன் இரு மூடியிலும் பசு நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் நம்முடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

    ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் உள்ள மங்களாம்பிகை உடனுறை மங்களநாத சுவாமி திருக் கோவிலின் அருகே மிகவும் பழமைவாய்ந்த சுயம்பு மகா வராகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ‘சீதளா தீர்த்தம்’ என்ற தீர்த்தம் காணப்படுகிறது. இந்த தீர்த்தத்தைப் பற்றி தன்னுடைய திருவெம்பாவையில் மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். மேலும் உத்தரகோசமங்கை ஆலயத்தை அலங்கரிக்கும் இறைவன்- இறைவி இருவருடைய தீர்த்தவாரியும், இந்த சீதளா தீர்த்தத்தில் தான் நடைபெற்று வருகிறது. இத்தலத்தில் உள்ள சுயம்பு வராகி அம்மனை, ‘ஆதி வராகி’ என்று போற்றுகின்றனர். மங்கை மாகாளி அம்மன் என்பதும் இந்த தேவியின் திருநாமத்தில் ஒன்று.

    வேலூர் அருகில் உள்ள கீழ்மின்னல் ரத்னகிரி பாலமுருகன் திருக்கோவில் அருகிலும் வராகி அம்மனுக்கு மிகவும் பழமையான கோவில் ஒன்று இருக்கிறது.

    மாமல்லபுரம் அருகில் உள்ள சதுரங்கபட்டினம் திருவேட்டீஸ்வரி உடனாய அரசேஸ்வரர் ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்தது. இங்கு தெற்கு நோக்கிய திருவேட்டீஸ்வரி அம்பாள் கருவறை கோஷ்டத்தில், கிழக்கு நோக்கிய வண்ணம் பைரவரின் பார்வையில் வராகி அம்மன் அருள்பாலிப்பது சிறப்பு.
    Next Story
    ×