என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்
    X
    சிவன்

    தமிழ் மாத பவுர்ணமியும் விரத வழிபாடும்

    ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் வரும் பவுர்ணமி அன்று எந்த தெய்வத்தை விரதம் இருந்து வழிபாடு செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    * சித்திரை மாத பவுர்ணமி எமதர்மனின் கணக்கரான சித்ரகுப்தன் அவதரித்த நாள். அது ‘சித்ரா பவுர்ணமி’ என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்.

    * வைகாசி மாத பவுர்ணமி முருகப்பெருமான், ஆறுமுகங்களுடன் அவதரித்த நாள். இந்த நாளில்தான் ‘வைகாசி விசாகம்’ வெகு விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் விரதம் மேற்கொண்டால் இன்பமான வாழ்வு அமையும்.

    * ஆனி மாத பவுர்ணமியன்று, காரைக்கால் அம்மையாரின் மாங்கனித் திருவிழா நடத்தப்படும். இந்த நாளில் விரதம் இருந்தால் இறை தரிசனம் சித்திக்கும்.

    * ஆடி மாத பவுர்ணமி என்பது கஜேந்திர மோட்சம் நடைபெற்ற நாள். அம்மனை வழிபட உகந்த நாள். அன்றைய தினம் அம்மன் ஆலயத்தில் மாவிளக்கு வைப்பது மங்கள வாழ்வை தரும்.

    * ஆவணி மாத பவுர்ணமி அன்று விரதம் இருப்பது சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும்.

    * புரட்டாசி மாத பவுர்ணமியும் சிறப்புக்குரிய நாள்தான். அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து விரதம் இருந்தால் அவர்களின் ஆசியைப் பெறலாம்.

    * ஐப்பசி மாத பவுர்ணமி அன்று அன்னாபிஷேக திருநாள். அன்றைய தினம் விரதம் இருந்தால் வறுமை அகலும்.

    * கார்த்திகை மாத பவுர்ணமியில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும்.

    * மார்கழி மாத பவுர்ணமியில் வருவது ஆருத்ரா தரிசனம். அன்றைய தினம் நடராஜனின் ஆருத்ரா தரிசனம் பார்த்தால், சிறப்பான எதிர்காலம் அமையும்.

    * தை மாத பவுர்ணமியில் தைப்பூசத் திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நன்னாளில் விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருள் கிடைக்கும்.

    * மாசி மாத பவுர்ணமியில்தான் மாசி மக திருநாள் வரும். இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் உலகத்தை ஆளும் வாய்ப்பு உண்டாகும்.

    * பங்குனி மாத பவுர்ணமியில்தான், பங்குனி உத்திரப் பெருவிழா நடத்தப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான், முருகன் - வள்ளி திருமணம், சிவ -பார்வதி திருமணம், சீதா- ராமர் திருமணம் என தெய்வத் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. அன்றைய தினம் வழிபாடு செய்தால் வரன்கள் வாசல் தேடி வரும். இந்த நாளில் குலதெய்வ வழிபாடும் சிறப்புக்குரியது. இதனால் குடும்ப ஒற்றுமை பலப்படும்.
    Next Story
    ×