search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு கேது தோஷம், புத்திர பாக்கியம் அருளும் விரதம்
    X
    ராகு கேது தோஷம், புத்திர பாக்கியம் அருளும் விரதம்

    ராகு கேது தோஷம் நீங்கும்... புத்திர பாக்கியம் அருளும் விரதம்

    நாக சதுர்த்தி விரதம் இருந்து வழிபாடு செய்தால், ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
    * கருடபஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாக சதுர்த்தி நாளாகும். பாற்கடலிருந்து வெளிவந்த ஆலகாலத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்நாள் கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்நாளில் தம்பிட்டு என்னும் உணவுப்பொருளை தயார் செய்து இறைவனுக்குப் படைக்கின்றார்கள்.

    * இந்நாளில் அட்ட நாகங்களான வாசுகி, ரட்சகன், காளிங்கன், மணிபத்ரன், ஜராவதன், திருதராஷ்டிரன், கார்க்கோடகன், தனஞ்சயன் ஆகியவர்களை வணங்க வேண்டும். நாக தேசத்திற்காக இந்த நாளில் நாக கற்களை வழிபடுதல், புற்றுக்கு பால் ஊற்றுதல் போன்ற சடங்குகளை செய்கின்றனர்.

    * ராகு கேது தோஷங்களால் திருமணம் நடக்காதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நாகங்களை வழிபடுகின்றனர். நாகப்பிரதிகளுக்கு புது துணி கட்டி பாலால் அபிஷேகம் செய்கின்றனர். சிலர் அருகிலுள்ள நீர் நிலைகளிலிருந்து நீரெடுத்துவந்து அவைகளுக்கு அபிஷேகம் செய்கின்றார்கள்.

    நாக சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுவதற்கு காரணம்:

    * பகவான், அனந்தன் என்னும் நாகமாக இருந்து பூமியைக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் பாதாள லோகத்தில் வசிக்கின்றனர்.

    * கஸ்யபருக்கு கத்ரு என்பவளிடம் தோன்றியவர் நாகர். தாய் சொல்லைக் கேளாததால், நெருப்பில் வீழ்ந்து இறந்து போகும்படி தாயே சபித்து விட்டாள். அந்தச் சாபத்தால் பல சர்ப்பங்கள் நெருப்பில் மாண்டு போயின.

    * அஸ்தீகர் ஜனமேஜயனது சர்ப்பயாகத்தை நிறுத்தி, சாபத்தை அகற்றினார். அதுவே இந்த பஞ்சமி. அப்பொழுது நாகங்களை வழிபட்டால் நலம் உண்டாகும்.

    * புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம்.

    * ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது நாகப்பாம்பு கடித்து இறந்து விட்டனர். அவர்களை உயிர்ப்பித்துத் தரும்படி அந்தப் பெண், நாகராஜனை வேண்டி நோன்பு செய்தாள். அவரது வேண்டுகோளுக்காக அவளது சகோதர்களை நாகராஜன் உயிர்ப்பித்த நிகழ்வினை தொன்மமாக கருதுகிறார்கள். அதுவே நாக சதுர்த்தி. பாம்பு கடித்து இறந்தவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி கருடனை நோக்கிச் செய்த நோன்பு கருட பஞ்சமி. தங்கள் விருப்பம் போல் நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களை மேற்கொள்வார்கள்.

    * விரதம் எதுவானாலும் சரி அன்றைய தினம், பாம்புப் புற்றில் பால் வார்த்து, புஷ்பங்களைச் சாத்தி, பழம் முதலியவற்றை வைத்து பூஜை செய்வார்கள். புற்று மண்ணை எடுத்து வந்து நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். குறிப்பாக சகோதரர்களின் நெற்றியில் இடுவார்கள்.

    * இந்த நாக சதுர்த்தி நாளில் நாகர் கோவில் நாகராஜா கோவில், பரமக்குடி நயினார் கோவில், நாகப்பட்டினம் நாகநாதர் கோவில் மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோவில் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    இந்த நாளில் நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பால் அபிஷேகம் செய்வார்கள். பின் மஞ்சள் பூசிக் குங்குமம் வைப்பார்கள். நாக சதுர்த்தி வழிபாட்டைச் செய்தால், ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அதில் உள்ள ராகு மற்றும் கேது பகவான்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.

    நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக இட்டுக் கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது. அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, பால் மற்றும் முட்டைகள் வழங்கி வழிபட்டால், சர்ப்ப தோஷங்கள் யாவும் நீங்கும்.

    நாக சதுர்த்தி விரதத்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
    Next Story
    ×