search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    விரதம் இருந்து வழிபட்டால் வரம் கொடுப்பான் வள்ளிமணாளன்

    விரதத்தின் மூலமாகத்தான் அருணகிரிநாதர், முருகப்பெருமானின் அருளைப்பெற்றார். முருகப்பெருமானுக்கு உகந்த விரதத்தை எல்லோரும் கடைப்பிடித்து வாழ்வில் வளம் காணலாம்.
    கந்தப்பெருமான் மீது நம்பிக்கை வைத்து சிந்தை மகிழ வழிபட்டால், எந்த நாளும் இனிய நாளாக அமையும் என்பது முன்னோர்களின் வாக்கு. அந்த அடிப் படையில் கார்த்திகைத் திருநாளில் நேர்த்தியாக முருகனை நாம் வழிபட்டால் பாராட்டும், புகழும் கிடைக்கும். அதனால்தான் ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை’ என்று சொல்லிவைத்தார்கள். அப்படிப்பட்ட முருகப்பெருமானை வழிபட உகந்த நாள் கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை தினமாகும்.

    ‘திரு’ என்ற அடைமொழி, சிறப்புமிக்க சில ஊர்களோடு இணைந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். குறிப்பாக திருப்பத்தூர், திருமயம், திருவாடானை, திருவாரூர், திருப்பதி, திருப்புங்கூர், திருவாடுதுறை, திருப்பூர், திருவண்ணாமலை, திருவானைக்காவல், திருநெல்வேலி, திருமழபாடி, திருத்தணி உள்ளிட்ட எண்ணற்ற தலங்கள் ‘திரு’ என்ற அடைமொழியுடன் இருப்பதைக் காணலாம்.

    அதேபோல பெருமைக்குரிய நட்சத்திரங்களில் ‘திரு’ என்ற அடைமொழியுடன் கொண்டாடப்படும் திருநாள் ‘திருக்கார்த்திகை’ ஆகும். அந்த நாளன்று முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டால் அந்த முத்துக் குமரன் உங்களுக்கு முத்தான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பான்.

    திருக்கார்த்திகை தினம் அருள்வழங்கும் முருகப்பெருமானை வழிபட்டால் பொருள் வளம் பெருகும். ஆலயம் சார்ந்த மலைகளை வலம் வந்து வழி பட்டால், வாழ்வில் மகத்துவம் காணலாம்.

    அதற்கு முதல் நாள் பரணி நட்சத்திரம் தொடங்குகிறது. பாவங்கள் போக்க பரணி தீபம் ஏற்றும் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். நட்சத்திரத்தின் பெயரும், மாதத்தின் பெயரும் ஒன்றாக அமைவது இந்த மாதத்தில்தான். இந்த மாதத்திற்கு மற்றொரு பெருமை, ‘கை’ என்ற எழுத்தில் முடியும் மாதம் இது. வாழ்க்கை என்ற கை சிறப்பாக அமைய, இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டிய மாதமிது. பரணி தீபத்தன்று பிரதோஷமும் வருகின்றது. சோமவாரம் என்பதால் சங்காபிஷேகமும் நடைபெறும். பரணிதீபம், பிரதோஷம், சங்காபிஷேகம் என முப்பெரும்விழா நடைபெறும் இந்த நன்னாளில், இல்லத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டும். இனிய வாழ்வு அமைய முருகப்பெருமான் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள்.

    ‘பரணி தரணி ஆளும்’ என்பார்கள். பரணி நட்சத்திரமன்று நாம் முருகப்பெருமானை முறையாக வழிபட்டால், தரணி ஆளக்கூடிய யோகம் கிடைக்கும். அதாவது புகழ், கீர்த்தி, செல்வாக்கு, செல்வ வளம், பதவி, பட்டம் ஆகிய அனைத்தும் வந்து சேரும்.

    தீபம் ஏற்றுவதன் மூலம் முழுமையான பலன் நமக்குக் கிடைக்கும் நாள்தான் திருக்கார்த்திகை. அதற்கு முதல் நாள் வரும் பரணி நட்சத்திரமன்று மாலையில் நாம் இல்லங்களில் விளக்கேற்றி வைத்தால் உன்னதமான வாழ்க்கை அமையும். வீட்டில் நல்லெண்ணெய்யிலும், ஆறுமுருகப்பெருமான் சன்னிதியில் இலுப்பை எண்ணெய்யிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்பது மரபு. ஒளி விளக்கு ஏற்றினால் ஒளிமயமான எதிர்காலம் அமையும். வீட்டில் விளக்கேற்றும் பொழுது, படிக்கு மூன்று விளக்கு ஏற்ற வேண்டும்.

    மறுநாள் திருக்கார்த்திகை அன்று வீட்டை சுத்தம் செய்து முருகப்பெருமானை வரவேற்க வேண்டும். பூஜை அறையில் முழு முதற்கடவுள் விநாயகப்பெருமானின் படத்தோடு, அவரது தம்பியான முருகப்பெருமானின் படத்தையும் வைத்து மாலை சூட்ட வேண்டும். பஞ்சமுக விளக்கேற்றி, அதில் ஐந்து வகையான எண்ணெய் ஊற்றி, கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் எல்லாவற்றையும் பாராயணம் செய்து வழிபட்டால் இனிய வாழ்க்கை அமையும்.

    ‘வந்த வினையும், வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே!’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். கார்த்திகை தினத்தில் கந்தன் பேரை உச்சரித்தால் வந்த துயரங்கள் வாசலோடு நின்றுவிடும். எந்த நாளும் இனிய நாளாக மாற வழிபிறக்கும். கந்தனுக்கு பிடித்த அப்பத்தை நைவேத்தியமாக வைத்துப் படைக்கலாம். அதோடு முப்பழமும், பருப்பு பாயசமும் வைத்து நைவேத்தியம் செய்வது நல்லது.

    கார்த்திகை தினத்தன்று இரவு வரை விரதமிருந்து வழிபடுவது மிகச்சிறந்த பலனை வழங்கும். அப்படி இயலாதவர்கள் ஒரு நேரமாவது விரதமிருக்கலாம். கார்த்திகைத் திருநாளில் அன்னதானம் செய்தால், ஆச்சரியப் படத்தக்க சம்பவங்கள் அதிகம் நடைபெறும். காக்கைக்கும் உணவளிக்க வேண்டும். ஜோதி வடிவான இறைவனை நினைத்து சிவாலயங்கள் தோறும் சொக்கப்பனை ஏற்றி வழிபாடு செய்வார்கள். அதிலுள்ள கம்பு அனலில் எரிந்து முடிந்ததும், அதை எடுத்து வந்து வீட்டில் வைத்துள்ள செடிகளில் நட்டுவைத்தால் செடிகள் நன்றாக வளரும் என்பது நம்பிக்கை.

    இந்த விரதத்தின் மூலமாகத்தான் அருணகிரிநாதர், முருகப்பெருமானின் அருளைப்பெற்றார். இழப்புகளை ஈடுசெய்யும் விரதமான இந்த விரதத்தை எல்லோரும் கடைப்பிடித்து வாழ்வில் வளம் காணலாம்.

    “ஜோதிடக்கலைமணி” சிவல்புரி சிங்காரம்

    Next Story
    ×