search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    செவ்வாய் தோஷம் போக்கும் தை கிருத்திகை விரதம்

    தைக் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.
    முருகனுக்கு உகந்த விரத நாட்களில் கிருத்திகை விரதம் சிறப்பு மிக்கது. அதிலும் ஒரு வருடத்தில் வரும் மூன்று கார்த்திகை தினங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தை மாதத்தில் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை என இந்த மூன்றும் கார்த்திகையுமே கடவுளுக்கு உகந்த நாட்கள். கிருத்திகையில் விரதம் இருந்து சேவல் கொடியோனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    சூரியனின் பயணம்

    ஆன்மிகத்தில் ஒரு ஆண்டினை உத்தராயனம், தட்சிணாயனம் என இரண்டாகப் பிரிக்கின்றனர். ஆடி முதல் மார்கழி வரை இருக்கும் 6 மாதங்கள் தட்சிணாயனம் என்றும் ,தை மாதம் முதல் ஆனி வரை இருக்கும் 6 மாதங்கள் உத்தராயனம் எனவும் பிரிக்கப்படுகிறது. உத்தர - அயனம் என்றால் வடக்குப்புற வழி என்று பொருள் . சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கே மறைகிறான் என்று சொன்னாலும், தட்சிணாயன காலத்தில் சற்றுத் தென்புறமாகவும், உத்தராயன காலத்தில் சற்று வடக்குப்புறமாகவும் சூரியனின் பயணம் இருக்கும். மங்கலகரமான காரியங்களைச் செய்ய உத்தராயனமே சிறந்த காலம். இறப்பது கூட உத்தராயனத்தில் நிகழ்ந்தால் நற்கதி கிடைக்கும். எனவேதான், தட்சிணாயண காலத்தில் பாரதப்போர் நிகழ்ந்தபோது அடிபட்டுக் கீழே விழுந்த பீஷ்மர், தான் இறப்பதற்காக உத்தராயன புண்ணிய காலம் வரும் வரை காத்திருந்து உயிர் நீத்தார்.

    சிவனின் வாக்கு

    உத்தராயன புண்ணிய காலம் தை மாதம் தொடங்குகிறது என்றால், இம்மாதத்தில் வரும் கிருத்திகை - வாழ்வு செழிக்க, எத்தனை பாக்கியம் வாய்ந்தது என்பதை நாம் உணர வேண்டும் . அதனால் தான், இக்காலம் துவங்குகிற தை மாதத்தைப் போற்றும் வகையில் முன்னோர்களால் சொல்லப்பட்ட வாசகம்... தை பிறந்தால் வழி பிறக்கும் -என்பதாகும். ‘‘தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும்!’’ என்று சிவபெருமானே வாக்குறுதி அளித்ததாகவும் கூறுவர்.

    தை சிறப்பு

    தை மாதத்தில், அமாவாசைக்கு அடுத்த ஏழாம் நாளன்று, அருணன் என்பவன் சாரதியாக இருந்து ஓட்டும் கதிரவன் தேர், வடக்கு முகமாகத் திரும்புகிறது. அந்நன்னாளே “ரத சப்தமி’ எனப்படுகிறது. இந்தப் புண்ணிய தினத்துக்கு அடுத்து வரும் நாளே “தை கிருத்திகை’ ஆகும். சித்திரை முதலாகத் தொடங்கும் பன்னிரு மாதங்களில் பத்தாவது மாதமாக மலர்வது “தை’ மாதம். பத்து மாதம் கருவுற்று, பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்மணிகள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் மால் மருகன் முருகனை மனமார நினைத்து ஏறக்குறைய ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும்; கட்டாயம் குழந்தையும் பிறக்கும்என்பது . எனவே தான் “தை பிறந்தால் வழி பிறக்கும்‘ எனும் வாழ்வியல் பழமொழி வருகிறது.

    திருமணத்தடை

    செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சனைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தைக் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும். கிருத்திகை விரதத்திற்கு முதல் நாளான பரணி நட்சத்திரத்தின் பின்னேரத்தில் சிறிது உண்டு, கார்த்திகை அன்று விடியற்காலை பொழுதில் நீராடி,கந்த புராணம் மற்றும் முருகன் துதிகளை பாராயணம் செய்தல் வேண்டும். கிருத்திகை அன்று முழுதும் உண்ணாமல், உறங்காமல் நோன்பிருந்து, அடுத்த நாள் அதிகாலை ரோகிணி நட்சத்திரத்தில் மனமார முருகப் பெருமானை நினைந்து, பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆனால் இன்று நாம் இயந்திரத்தனமாய் சுழன்றுக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், அந்த அளவிற்கு விரதம் இருக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் கிருத்திகை தினத்திலாவது விரதமிருப்பது முருகப் பெருமானின் அருளைப் பெற உதவும்.
    (தெளிவோம்)
    Next Story
    ×