என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செல்வமும், செல்வாக்கும் தரும் மகாலட்சுமி விரதம்
    X

    செல்வமும், செல்வாக்கும் தரும் மகாலட்சுமி விரதம்

    செல்வமும், செல்வாக்கும் கிடைக்க தீபாவளிக்கு லட்சுமி விரதத்தை எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    “காடு வெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி
    வீடு கட்டிக்கொண்டிருக்கும் வேள்வணிகர் - வீடுகட்கு
    அன்றைக்கு வந்த எங்கள் அம்மா லட்சுமியே
    என்றைக்கும் நீங்காதிரு”

    தீபாவளி பண்டிகையை நாம் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவதோடு நின்று விடக்கூடாது. செல்வமும், செல்வாக்கும் தரும் லட்சுமியை நாம் அன்று அவசியம் பூஜித்து வழிபட வேண்டும்.

    தமிழகத்தில் நிறைய பேர் தீபாவளி தினத்தன்று லட்சுமி வழிபாட்டை சிரத்தையாக, உளமாற செய்வதே இல்லை. தீபாவளியன்று நாம் எந்த அளவுக்கு லட்சுமி பூஜையை செய்கிறோமோ அந்த அளவுக்கு நமது வீடு லட்சுமி கடாட்சமாக மாறும். அத்தகைய லட்சுமியை நாம் ஒவ்வொருவரும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஆதிபராசக்தி தன்னிடமிருந்து தன்னைப்போலவே சக்திகள் கொண்ட இரு தேவிகளை உருவாக்கினார். அவரது இடது பாகத்திலிருந்து தோன்றியவள் ரமாதேவி; வலது பாகத்திலிருந்து தோன்றியவள் ராதா தேவி. ‘ரமா’ என்றால் மிகவும் அழகானவள் என்று பொருள். ரமா தேவியை ஆதிபராசக்தி ‘மகா லட்சுமி’ என்று பெயரிட்டு அழைத்து, அவளை மகாவிஷ்ணுவிடம் மனைவியாக ஒப்படைத்தார்.

    மகாலட்சுமி அப்போது செல் வத்தின் நாயகியாகச் செயல் படுவாள் என்று தேவி பாகவதத்தில் குறிப்பிடப்படவில்லை. அவள் அன்பின் வடிவம் என்றும், விஷ்ணு பத்தினி என்றும், விஷ்ணுவுக்கு சேவை செய்யும் தேவி என்றும்தான் தேவி பாகவதம் கூறுகிறது. மகாலட்சுமியின் தோற்றம் பற்றி ஸ்ரீமத் பாகவதத்தில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. துர்வாச மகரிஷியின் சாபத்தால் தேவேந்திரன் முதலான தேவர்கள் தங்கள் பதவிகளை இழந்தனர்.

    தேவலோகச் செல்வங்கள் யாவும் மறைந்தன. தேவலோக ஐஸ்வர்யங்களுக்கு ஆதாரமான ஸ்வர்க்க லட்சுமியும் தேவலோகத்தைத் துறந்து மகாலட்சுமியுடன் ஐக்கியமானாள். பாதிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் வைகுண்டம் சென்று, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவைக் குறித்துத் தவம் இயற்றினர். தங்கள் இளமை, ஆயுள், இழந்த அனைத்துச் செல்வங்கள் ஆகியவற்றை மீட்டுத் தந்து, மீண்டும் தேவலோகம் உருவாக அருள்புரியுமாறு பிரார்த்தனை செய்தனர்.

    காக்கும் கடவுளான விஷ்ணு மனமிரங்கி வரமளித்தார். ‘’நீங்கள் இழந்த செல்வங்களைப் பெற மகாலட்சுமி ஒரு அவதாரம் எடுப்பாள். அதற்கு வழிகோல நீங்கள் பாற்கடலைக் கடைய வேண்டும். அதிலே தோன்றும் அமிர்தம் உங்களுக்கு நிரந்தர இளமையையும், மரண மில்லாப் பெருவாழ்வையும் கொடுக்கும். பாற்கடலில் தோன்றும் மகாலட்சுமி, நீங்கள் இழந்த செல்வங்களை பெற அருள்புரிவாள்’’ என்று மகா விஷ்ணு தேவர்களுக்கு வாக்களித்து ஆசி கூறினார்.

    இதையடுத்து பாற் கடலைக் கடையும் பணி தொடங்கியது. முதலில், ஆலகால விஷம் தோன்றியது. அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து சிவனாரை வேண்ட, சிவபெருமான் தோன்றி விஷத்தை அருந்தி, தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றினார். பாற்கடலைக் கடையும் பணி மீண்டும் தொடர்ந்தது. பாற்கடலிலிருந்து அபூர்வமான பல வஸ்துக்களும் ஜந்துக்களும் தோன்றின. முடிவில், ஒளிமயமான ரூப லாவண்யத்துடன் தேவி மகாலட்சுமி தோன்றினாள்.

    தேவியைக் கண்டதுமே அனைத்து தேவர்களும் அசுரர் களும் அவள் அழகைக் கண்டு மயங்கி, அவளை அடைய விரும்பி னார்கள். அப்போது மகாலட்சுமி, ‘’என்னை அடைய வேண்டும் என்று விரும்பும் எவரையும் நான் தேர்ந்தெடுக்கப்போவதில்லை. என் தோற்றத்தைக் கண்டு எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கும் ஒருவரையே நான் சரணடைவேன்’’ என்று கூறினாள்.

    அதன்படி, யோக நித்திரையில் இருந்த மகாவிஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்தாள். மகாலட்சுமியின் பெரு மையை அறிந்த தேவர்கள், அவளை பக்தியோடு சரணடைந்தார்கள். அப்போது, அவளி டமிருந்து வெளிப்பட்ட ஸ்வர்க்க லட்சுமி தேவலோகத்தை அடைந்தாள். தேவலோகம் மீண்டும் தெய்வீகச் செல்வங்களோடு ஒளிவீசியது. தேவர்கள் அவள் துதிப் பாடி மகிழ்ந்தனர்.

    தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் பாதுகாத்து, தகுதியானவர்களுக்குச் சரியான தருணத்தில் அந்தச் செல்வங்களை வழங்கும் அதிகாரம் குபேரருக்குத் தரப்பட்டுள்ளது. மகாலட்சுமி கடாட்சம் பெற்றவர்களுக்கு நவநிதியையும் வழங்குகிறார் குபேரன். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் வழங்கும் செல்வங்கள் நவநிதியில் அடங்கும். மகாலட்சுமியின் அருட்பார்வை பெற்றவர்களுக்கு உலகியல் செல்வங்களோடு நிம்மதியும், சாந்தியும் கிடைக்க குபேரன் வழிசெய்கிறார்.

    சத்யமும் நேர்மையும் இல்லாதவர்கள் பெற்ற செல்வத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதில்லை. மகாலட்சுமி என்பவள் உலகியல் செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல; மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வகைச் செல்வங்களையும் அளிப்பவள்.
    Next Story
    ×