என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விநாயகர் சதுர்த்தி விரதம் இருக்கும் முறை
    X

    விநாயகர் சதுர்த்தி விரதம் இருக்கும் முறை

    விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருக்கும் முறையை பற்றி கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    விநாயகர் சதுர்த்தியன்று வீட்டை சுத்தம் செய்து கோலம்போட்டு அலங்கரிக்க வேண்டும். வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில் சுத்தமான பலகையில் கோலம் போட வேண்டும். அதன் மீது தலை வாழை இலையை போட வேண்டும்.

    நுனி பாகம் வடக்கு முகமாக இருக்க வேண்டும். அந்த இலைமீது பச்சரிசியை பரப்ப வேண்டும். அந்த அரிசியின் மீது களிமண்ணில் செய்துள்ள விநாயகர் விக்ரகத்தை எழுந்தருள செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார் தான் விசேஷம்.

    விநாயகருக்கு வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் எனும் முக்கனிகள், கரும்பு, எள், கடலை, அப்பம், மோதகம், பொரி உருண்டை போன்றவற்றை விநாயகருக்கு நிவேதித்து கணேச அஷ்டகம் கூறி பூஜைசெய்து வழிபடவேண்டும். விநாயகர் புராணம் படித்து மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.

    மறுநாள் புனர்பூஜையை கொண்டாட வேண்டும். தயிர்சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். அதன் பிறகு குளத்திலோ, கிணற்றிலோ, பிள்ளையாரைக்கரைத்து விடலாம். பிள்ளையார் பூஜைக்கு அருகம்புல்லும், எருக்கம்பூவும் விசேஷமான ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் விநாயகரின் அருள்பெற்று அனைத்து நலன்களையும், சுகங்களையும் பெறுவர். வாழ்க்கையில் துன்பம், இடையூறு வராது.

    Next Story
    ×