என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பின் மாண்புகள்: கூடி இருந்தால் கோடி நன்மை
    X

    நோன்பின் மாண்புகள்: கூடி இருந்தால் கோடி நன்மை

    இந்த ரமலானில் கூட்டுணர்வை போற்றுவோம், வேற்றுமை உணர்வுகளை மாற்றுவோம்.
    ‘ஜமாஅத்’ எனும் கூட்டமைப்புடன் செயல்படுவதை இஸ்லாம் மிகவும் விரும்புகிறது; வலியுறுத்துகிறது. கூட்டுத்தொழுகை, கூட்டு சஹர், கூட்டு இப்தார், கூட்டுத் தராவீஹ், கூட்டுக் குர்பானி, கூட்டு ஜகாத், கூட்டு ஹஜ், கூட்டு துஆ... என எங்கு திரும்பினாலும் அங்கு கூட்டமைப்பு இருப்பது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    நபிகளார் நவின்றார்கள்: ‘அல்லாஹ்வின் உதவிக்கரம் கூட்டாகச் செயல்படுவதில் தான் இருக்கிறது’ (நூல்: பைஹகி).

    ‘கூட்டாகத்தொழுவது, தனியாகத்தொழுவதைவிட 27 மடங்கு அந்தஸ்து கிடைப்பதற்குரியது’. (நூல்: புகாரி, முஸ்லிம்)

    ‘இருவரின் உணவு மூவருக்குப் போதுமாகும், மூவரின் உணவு நால்வருக்குப் போதுமாகும்’. (நூல்: புகாரி)

    இருவரின் உணவு நால்வருக்குப் போதுமாகும், நால்வரின் உணவு எட்டுப்பேருக்குப் போதுமாகும். (நூல்: முஸ்லிம்)

    மேற்கண்ட நபி மொழிகளின் மூலம் எப்படியெல்லாம் கூடுதலாக நன்மைகள் பெற முடியும் என்பதை நாம் அறிய முடியும்.

    புனிதமிகு இந்த ரமலான் நாட்களில் கூட்டாக செயல்படுவதற்கு நிறைய வாய்ப்பு கள் உள்ளன. ஜமாத்தாக தொழுவது, சஹர் செய்வது, இப்தார் செய்வது, தராவீஹ் தொழுவது, திக்ர் செய்வது, துஆ செய்வது என கூட்டாக அமல் செய்வதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் ரமலானில் நிறைந்திருக்கின்றன.

    நாம் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படுகிறபோது எந்த ஒரு கடின காரியமும் மிக இலகுவாக ஆகி விடுகிறது.

    அருளாளன் அல்லாஹ் கூறுகிறான்: ‘நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் (வேதநூலாகிய குர்ஆன் எனும்) கயிற்றைக் கெட்டியாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள். (3:103)

    திருக்குர்ஆன் காட்டும் வழியில் நடப்பது என்பது, இஸ்லாமிய வழிமுறைகளை சரியான முறைப்படி, ஒற்றுமையாக, ஒன்றிணைந்து, வறட்டுப் பிடிவாதங்களை நீக்கி கூட்டுணர்வை பற்றிப் பிடித்து நடப்பது என்பது தான். கூடவே ‘பிரிந்து விடாதீர்கள்’ என்ற எச்சரிக்கைச்சொல்லும் இத்துடன் இணைத்துப் பார்க்கத்தக்கதே.

    இதனால்தான் ‘எவர் ஒரு சாண் அளவு ஒற்றுமையை விட்டும் சற்று விலகிச்சென்று விடுகிறாரோ அவர் தனது கழுத்திலிருந்து இஸ்லாமிய வளையத்தை கழட்டி விட்டவர் ஆவார். என நபிகளார் சொன்னார்கள் (அபூதாவூது). எனவே, ரமலான் மாத நோன்பு நமக்கு பலவழிகளிலும் ஒற்றுமை வாசல்களை தாராளமாக திறந்து வைத்திருக்கிறது. நாம் தான் உள்ளே நுழைவதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது யோசிக்கும் நேரமல்ல. உடைந்து போன உள்ளங்களின் ஒற்றுமைகளை ஒன்றிணைத்து சுவாசிக்கும் நேரம் இது.

    எனவே இந்த ரமலானில் கூட்டுணர்வை போற்றுவோம், வேற்றுமை உணர்வுகளை மாற்றுவோம்.

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு.
    Next Story
    ×