என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பொறுமை தரும் பேரின்பம்
    X

    பொறுமை தரும் பேரின்பம்

    கற்பனை திறன் என்பது இறைவன் மனிதனுக்கு வழங்கிய ஒரு மாபெரும் அருட்கொடையாகும்.
    இன்றைய புதிய கண்டுபிடிப்புகள் யாவும் ஒரு காலத்தில் மனிதனின் கற்பனையாகவே இருந்துள்ளது.

    நேற்றைய கற்பனை இன்றைய நிஜமாகவும், இன்றைய கற்பனை நாளைய நிஜமாகவும் மாறும் தன்மையுடையதாகும். மனிதனின் கற்பனை என்பது ஒரு திரையிடப்பட்ட உண்மையாகவே விளங்குகிறது.

    ஒரு மனிதனின் மனதில் தோன்றிய உண்மைகள், மற்ற மனிதர்களுக்கு பாடமாகவும், கல்வியாகவும் மாறிவிடுகின்றது. கல்வியில் தன்னைப் பற்றி அறியும் சுயகல்விதான் மிகச்சிறந்த கல்வியாகும்.

    இப்பிரபஞ்சத்தில் காணப்படும் தத்துவங்கள் யாவும் மனிதனுக்குள்ளும் இருப்பதாக அருள் மறை குர்ஆன் கூறுவதை பார்ப்போம்:

    'நிச்சயமாக இ(ந்த வேதமான)து உண்மையானது என்று அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக (உலகின்) பல கோணங்களிலும், (மனிதர்களாகிய) அவர்களுக்கு உள்ளேயும் நம்முடைய அத்தாட்சிகளை நாம் அவர்களுக்கு காண்பிப்போம். (நபியே) உமது இறைவன் நிச்சயமாக எல்லாப் பொருட்களின் மீதும் சாட்சியாளனாக இருக்கின்றான் என்பது (உமக்கு) போதுமானதாக இல்லையா? (41-53).

    இங்குள்ள எல்லாமே இறைவனுடைய கணக்குப்படிதான் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இறைவன் சாட்சியாளனாக இல்லாத எப்பொருளும் இவ்வுலகில் இல்லை. எல்லாம் அவனது கவனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கின்றது. அவனை விட்டு எப்பொருளும் தப்பிவிட முடியாது.
    இறைவன் நிர்ணயித்த கணக்கின் படிதான் எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை குர்ஆன் இவ்வாறு இயம்புகின்றது:

    'நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் (அதற்குரிய) நிர்ணய (கணக்கு) படி (தான்) அதனை படைத்துள்ளோம். (54.49)

    கடலின் அலைகளை காணமுடியும் நம்மால் மின்சார அலைகளின் அதிர்வுகளை காணமுடிவதில்லை. கண்ணுக்கு புலப்படும் அதிர்வு அலைகளைவிட, கண்ணுக்குப் புலப்படாத அதிர்வு அலைகளின் சக்தி அபரிமிதமானதாக இருக்கின்றது.

    உடலின் அசைவுகளால் ஏற்படும் ஆற்றலைவிட இதயத்தின் அசைவால் மனித மூளையில் இருந்து ஏற்படும் அதிர்வு அலைகள் மிக நுட்பமானதும், வலிமை வாய்ந்ததுமாகும்.

    இத்தகைய வலிமை வாய்க்கப்பெற்ற தீர்க்கதரிசிகள், ஞானிகள் போன்ற உண்மையாளர்களை கொண்டு இறைவன் இவ்வுலகில், கடலை ஏழாக பிளந்து வழிவிடச் செய்துள்ளான் (மூசா நபிக்கு),

    மரித்தவர்களை உயிர் கொடுத்து எழுப்பியுள்ளான் - (ஈசா நபிக்கு),
    வானில் சந்திரனை இரண்டாக பிளந்து காட்டினான்- (முகம்மது நபிக்கு),
    மாபெரும் நெருப்பு குண்டத்தை குளிரச் செய்துள்ளான் - (இப்ராஹிம் நபிக்கு),
    காற்றை சுமந்து செல்லும் வாகனமாக மாற்றியும் காட்டினான் - (சுலைமான் நபிக்கு).

    இதுபோன்று நல்ல மனிதர்களை கொண்டு அவன் நடத்திக் காட்டிய அற்புதங்கள் அநேகம் உண்டு.

    வீண் பேச்சும், கோபமும் தான் மனித ஆற்றலை வீணடித்து விடுகின்றது. இறைவனை நினைவு செய்வதினால் மனிதன் அடையும் பேரின்பத்தை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    'அவர்கள் தாம் ஈமான் (இறை விசுவாசம்) கொண்டவர்கள், அவர்களின் இதயங்கள் அல்லாஹ்வை திக்ரு (நினைவு) செய்வதனால் அமைதி பெறுகின்றன. அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்வதனால் தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன'. (13-28)

    இவ்வாறு மனிதன் தன் ஆத்மாவையும் அமைதியடையச் செய்து அது கொண்டு - மற்ற மனிதர்களையும் அமைதி பெறச் செய்யவே இஸ்லாம் வழிகாட்டுகின்றது.

    கோபம் தான் மனிதனுடைய மிகப்பெரிய எதிரியாகும். எவ்வளவு பெரிய அறிவாளிகளையும் அது சட்டென வீழ்த்திவிடும் சக்தி வாய்ந்தது. ஆனால் இறைவிசுவாசிகளோ, தங்களுக்கு கோபம் வந்தால், அதனை இறைவனுக்காக மென்று விழுங்கிவிடுகிறார்கள் என்று அருள்மறை கூறுகிறது.

    'நின்று கொண்டிருக்கும் போது உங்களுக்கு கோபம் வந்தால், உட்கார்ந்து விடுங்கள். அப்படியும் அது தணியவில்லை என்றால் படுத்துவிடுங்கள்.

    அதிலும் அடங்கவில்லை என்றால் ஒளூ (அங்கச் சுத்தி) செய்து உடலை தண்ணீரால் நனைத்து விடுங்கள். அதிலும் அது தீரவில்லை என்றால் நெற்றியை தரையில் வைத்து சஜ்தா செய்து விடுங்கள்...' என்று கோபத்தை தணிக்க நபிகளார் இவ்வாறு கற்றுத்தந்துள்ளார்கள்.

    கோபப்பட்டு பேசிவிட்டு ஒருவன் அமரும் போது நஷ்டத்துடனே தான் அமர்கின்றான். கோபத்தால் ரத்தம் சூடேறி அதிவேகமான செயல்படுவதால், அவனது ஒவ்வொரு வியர்வை துவாரத்தின் வழியாகவும் சக்தி வீணாக வெளியேற்றப்படுகின்றது.

    அதனால் உடலும் மனமும் சோர்வடைந்து மனிதன் பலவீனம் அடைகின்றான். பலவீனமான மனித உடலில் நோய் எளிதில் தொற்றிக் கொள்கின்றது. கோபம் மனிதனுக்கு உள்ளேயும், அவனுக்கு வெளியேயும் கெடுதியை ஏற்படுத்துகின்றது.

    எவ்வளவு கஷ்டம் நஷ்டம் வந்தாலும் துவண்டுவிடாமல் பொறுமையை கடைப்பிடிப்பவர்களுக்கு இறைவன் கூறும் நற்செய்தி இது:

    'இறைவிசுவாசிகளுக்கு ஓரளவு பயத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் (விளைச்சல்) போன்றவற்றின் நஷ்டங்களாலும், திண்ணமாக நாம் உங்களை சோதிப்போம் (இச்சோதனைகளில்) பொறுமையாளர்களுக்கு (நபியே) நீர் (சொர்க்கத்தைக் கொண்டு) சுபச் செய்தி கூறுவீராக' (2-155).

    'பொறுமையே பேரின்பம் நிறைந்த சொர்க்க வாழ்விற்கு மனிதனை தகுதியுடையதாக்குகின்றது' என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது. அழிந்து போகும் இவ்வுலகையே இவ்வளவு அழகாக படைத்துள்ள இறைவன், என்றும் அழியாத மறு உலகை எவ்வளவு அழகாக படைத்து வைத்திருப்பான்.

    அது எந்த கண்ணும் கண்டிராதது, எந்த காதும் கேட்டிராதது, எவருடைய கற்பனையிலும் தோன்றிடாதது. அத்தகைய சொர்க்க வாழ்வுதான் நாம் ஆசைப்பட மிகவும் தகுதியான ஒன்றாகும். அதனை அடையும் நற்பேற்றினை இறைவன் நம்அனைவருக்கும் வழங்கி அருள்புரிவானாக, ஆமின்.
    Next Story
    ×