என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வழிபாட்டிற்குரியவன் ஒருவனே
    X

    வழிபாட்டிற்குரியவன் ஒருவனே

    குர் ஆனில் பல வசனங்களில் இறைவன் நேரடியாகப் பொருள் தராமல் ஒரு விஷயத்தை உறுதியாகத் தெரிவிக்க அதனை மறுத்து பின்பு உறுதிப்படுத்துகிறான்.
    இஸ்லாமியர்களின் முதல் கலிமாவான `லா இலாஹ இல் லல்லாஹ்` என்பதின் பொருளை கூர்ந்து கவனித்தால் `வழிபடுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை` என்பதாகும்.

    `லா இலாஹ` அதாவது வழிபாட்டிற்குரியவன் யாருமில்லை என்று கூறும் போதே வழிபாட்டிற்குரிய தகுதி யாருக்கும் எவருக்கும் இல்லை என்று முதலில் மறுத்துச் சொல்லிவிட்டு, பின்பு `இல் லல்லாஹ்` - அல்லாஹ்வைத் தவிர என்று அதனை அழுத்தமாக உறுதிப்படுத்துகிறான். இதிலிருந்து தகுதி அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ளது, அவனுக்கு இணையாக யாரும் எதுவும் இல்லை என உறுதிப்படுத்துவதே இஸ்லாமின் அஸ்திவாரமாகும்.

    இந்தக் கலிமாவை மனதார மொழிந்தவர்களுக்கு நரகம் தடுக்கப்பட்டதாகிவிடுகிறது.

    ``யார் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும் நிலையில் `லா இலாஹ இல் லல்லாஹ்` என்று சொன்னாரோ அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்`` என்று ஸஹீஹான ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

    இதுவே இறைத்தூதர்களின் இஸ்லாமிய அழைப்பிற்கான திறவுகோலாக இருந்தது.

    வெறும் வாய் வார்த்தையாக மொழிவதல்லாமல் பொருள் உணர்ந்து, உறுதியாகத் தெளிந்த உள்ளத்துடன், முழுமையான நம்பிக்கையுடன் இதைக் கூற வேண்டும்.

    -ஜெஸிலா பானு.
    Next Story
    ×