search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    போலித்தனமும், நெறிகேடும்

    பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களை நோக்கிய இயேசுவின் வசைமொழிகள் நாளைய நற்செய்தியிலும் (காண். மத் 23:27-32) தொடர்கின்றன.
    பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களை நோக்கிய இயேசுவின் வசைமொழிகள் நாளைய நற்செய்தியிலும் (காண். மத் 23:27-32) தொடர்கின்றன.

    மத்தேயு 23 வாசிப்பதற்கு ஒரு நெருடலான பகுதி. ஏன்? 'வெளிவேடக்காரரே,' 'குருட்டு வழிகாட்டிகளே,' 'குருட்டு பரிசேயரே,' 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே' என்ற வார்த்தைகளால் இயேசு பரிசேயரையும், மறைநூல் அறிஞர்களையும் சாடுகின்றார். 'இரக்கமுள்ளோர் பேறுபெற்றோர்' என்றும் 'ஒரு கன்னத்தில் உங்களை அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டுங்கள்' என்றும், அன்பு, கருணை, மன்னிப்பு என போதித்த இயேசுவின் உதடுகள் மேற்காணும் தூற்றும் அல்லது சபிக்கும் வார்த்தைகளை எப்படி உச்சரித்தன?

    மேற்காணும் இயேசுவின் சாபச் சொற்களை மத்தேயு நற்செய்தியாளர் மட்டுமே பதிவு செய்கின்றார். மேலும் இந்தச் சாபத்திற்கு ஆளாபவர்கள் பரிசேயர்களும். மறைநூல் அறிஞர்களும் மட்டுமே. சதுசேயர்கள், ஏரோதியர்கள் தப்பித்துக்கொள்கின்றனர். மத்தேயுவின் பதிவு மற்றொரு சந்தேகத்தையும் எழுப்புகிறது: இந்த எல்லா சாபங்களையும் இயேசு ஒரே நேரத்தில் சொன்னாரா? அதாவது, ஒருநாள் இதற்கென ஒதுக்கி, அவர்களைக் கூட்டி வைத்து அவர்களிடம் இப்படிச் சபித்தாரா? அப்படிச் செய்திருக்க வாய்ப்பில்லை. வேறு வேறு இடங்களில் சொன்னதை மத்தேயு மொத்தமாகக் கோர்த்து இங்கே போட்டிருக்கிறாரா? அதுவும் இல்லை. அப்படியிருந்தால் மற்ற நற்செய்தியாளர்களும் இதைப் பதிவு செய்திருக்க வேண்டுமே!

    இந்தக் கேள்விக்குப் பதில் தெரிய மத்தேயு நற்செய்தியின் பின்புலம் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

    உரோமையருக்கு எதிரான யூதர்களின் எதிர்ப்பிற்குப் பின் யூத மதம் தன்னையே ஒரு சுயஆய்வுக்கு உட்படுத்துகின்றது. இரண்டு பிரச்சினைகளை அது சந்திக்க நேரிடுகின்றது: ஒன்று, கடவுள் தங்களுக்கென வாக்களித்த நாட்டில் தங்கள்மேல் புறவினத்தார்கள், அதாவது, உரோமையர்கள் ஆட்சி செலுத்துகின்றனர். இவர்களின் ஒரே அடையாளமான ஆலயத்தையும் ஆக்கிரமித்துக்கொள்கின்றனர். இறைவனின் சட்டத்திற்கு மாற்றாக சீசரின் சட்டத்தைக் கடைப்பிடிக்குமாறு சொல்கின்றனர். இரண்டு, புதிதாய் உருவாகி வரும் நசரீன்கள் (கிறிஸ்தவர்கள் முதலில் இப்படித்தான் அழைக்கப்பட்டனர்).

    உரோமையர்கள் இனி தங்களை ஆளக்கூடாது என நினைத்தவர்கள் புரட்சியில் ஈடுபட, அந்தச் சண்டையில் கி.பி. 70ஆம் ஆண்டு அவர்களின் அடையாளமான எருசலேம் ஆலயம் தரைமட்டமாகிவிடுகிறது. ஆலயம் தரைமட்டமானாலும் உரோமைப்படை யூதேயாவிலிருந்து பின்வாங்குகிறது. இப்போது யூதர்களுக்கு ஆலயம் கிடையாது. வேறு ஏதாவது ஒரு அடையாளத்தை அவர்கள் கையில் எடுக்க வேண்டும். அப்படி அவர்கள் எடுப்பதுதான் 'சட்டநூல்' அல்லது 'தோரா'. இந்தச் சட்டநூலை மக்களுக்கு எங்கு வைத்து அறிவிப்பது? ஆலயத்திற்கு மாற்றாக தொழுகைக்கூடங்கள் முளைக்கின்றன. அவை ஆலயம் இல்லாத குறையை நீக்குகின்றன. ஆக, உரோமையர்களின் பிரசன்னத்திற்கு முடிவு கட்டியாயிற்று.

    இப்போது யூத மதத்தில் இன்னும் கொஞ்சம் அழுக்காக ஒட்டிக்கொண்டிருப்பது, 'நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாய் இருக்கும்' நசரீன்கள். யூதர்களாய் இருந்து நசரீன்களாய் மாறியவர்களும் தொடர்ந்து யூத தொழுகைக்கூட வழிபாடுகளில் பங்கேற்கின்றனர். ஏனெனில் நசரீன்களுக்கென்று வழிபாடுகள் எனவும் தொடங்கப்படவில்லை. இப்படி இவர்கள் தங்களின் தொழகைக்கூட வழிபாடுகளில் கலந்துகொள்வதை விரும்பாத 'தூய்மையான' யூதர்கள், இவர்களைச் சபிப்பதையே செபங்களாகச் சொல்ல ஆரம்பிக்கின்றனர். இந்தச் சாபமொழியைக் கேட்கமுடியாமல் நசீரீன்கள் தாங்களாகவே தொழுகைக்கூடங்களை விட்டு வெளியேறுகின்றனர். அப்படி வெளியேறாதவர்கள் வற்புறுத்தி வெளியேற்றப்படுகின்றனர்.

    இவர்களின் வெளியேற்றத்திற்கு காரணமானவர்கள் பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும். ஏனெனில் வழிபாட்டை நெறிப்படுத்தும், ஆளுகை செய்யும் அதிகாரம் இவர்களிடம்தான் இருந்தது. இப்படி வெளியேறியவர்கள் பெரும்பாலும் மத்தேயுவின் திருச்சபையில்தான் இருந்தனர். ஆக, அவர்களுக்கு ஏற்பட்ட இந்த அநீதியைக் கண்டிக்கும் விதமாக, அவர்களுக்கும் இயேசுவுக்கும் முன்பே இருந்த பகையை மனதில் வைத்து உருவாக்கும் 'சாபமொழிகளே' மத்தேயுவின் 23ஆம்; அதிகாரம். (முதல் ஏற்பாட்டில் சாபங்கள் அதிகமாக உள்ள ஒரு பகுதி இணைச்சட்டம் 28).

    நாளைய நற்செய்தியில் இயேசு முதலில் பரிசேயர்களை வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே என்றும், இரண்டாவதாக, இவர்கள் பழைய கல்லறைகளை அலங்காரம் செய்கின்றனர் என்றும் சாடுகின்றனர். ஆக, முதல் 'கல்லறை' உருவகம். இரண்டாம் 'கல்லறை' எதார்த்தம்.

    'போலித்தனம்', 'நெறிகேடு' - இந்த இரண்டும்தான் பரிசேயர்களுக்குள் இருப்பதாகச் சொல்கின்றார்.

    'எனக்கும், எனக்கும் உள்ள உறவில்' வெளிப்படுவது 'போலித்தனம்'. அதாவது, நான் நல்லவனாக இருப்பதாக என் மனதில் நினைத்துக்கொள்கிறேன். ஆனால் நான் நல்லவனாக இருப்பதில்லை. இது மற்றவர்களுக்குத் தெரியாது. எனக்கு மட்டுமே தெரியும்.

    'எனக்கும், பிறருக்கும் உள்ள உறவில்' வெளிப்படுவது 'நெறிகேடு'. 'ஒழுங்கின்மை' என்கிறது கிரேக்கப்பாடம். அதாவது என் செயலால் நான் பிறழ்வை ஏற்படுத்துகிறேன்.

    இந்த இரண்டும் தன்னிடம் இல்லை என்று நாளைய முதல் வாசகத்தில் (1 தெச 2:9-13) என்று பெருமைப்பட்டுக்கொள்கின்றார் பவுலடியார்.

    'என்னிடம் இவை இருக்கின்றதா?' - என்று கேட்கிறேன் நான்!
    Next Story
    ×