search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    ஜீவனை கொடுத்த அன்பு

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் மீது வைத்துள்ள அன்பை போல, நாமும் பிறரிடத்தில் அன்பாயிருக்க அழைக்கிறார்.
    நாம் மற்றவர்கள் மீது எப்படி அன்பாய் இருக்க வேண்டும் என்று வேதாகமத்தில் யோவான் 15-ம் அதிகாரம் 12-ம் வசனத்தில், ‘நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையிருக்கிறது’ என்று சொல்லப்பட்டுள்ளது.

    இயேசு கிறிஸ்து இந்த மேற்கண்ட வசனத்தில் நம்மை பிறர்மேல் அன்பாயிருக்க சொன்னது மாத்திரமல்லாமல் அதை கட்டளையாய் கைக்கொள்ள வலியுறுத்துகிறார். இயேசு இவ்வுலகத்தில் வாழ்ந்த போது தன்னலமற்ற தெய்வீக அன்பை மனுக்குலத்திற்கு வெளிப்படுத்தினார். அவருடைய அன்பில் இரக்கமிருந்தது, சாந்தமிருந்தது, பொறுமையிருந்தது, அனைத்திற்கும் மேலாக பிறரை மன்னிக்கும் தன்மை இருந்தது. இறுதியில் அவர் மனுக்குலத்திற்கு தன் ஜீவனையே பலியாகக்கொடுத்தார். ஒருவன் சகல அறிவையும், வரத்தையும் உடையவனாயிருந்து, அன்பு அவனுக்கு இல்லாமல் போனால் சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பான் என்றும், ஒருவன் தனக்கு உண்டான யாவற்றையும் அன்னதானம் பண்ணினாலும், தன் சரீரத்தை சுட்டெரிக்கக்கொடுத்தாலும் அன்பு அவனிடம் இல்லை என்றால், அதில் அவனுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை. மேலும் அன்புக்கு பொறாமை இல்லை, அன்பு தன்னை புகழாது, இறுமாப்பாக இராது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோ‌‌ஷப்படாமல் சத்தியத்தில் சந்தோ‌‌ஷப்படும், அன்பு சகலத்தையும் தாங்கும். சகலத்தையும் நம்பும் என்று பரிசுத்த வேதாகமம் அன்பை பற்றி தெளிவாகச்சொல்லுகிறது.

    1 யோவான் 4-ம் அதிகாரம் 8-ம் வசனத்தில், ‘தேவன் அன்பாகவே இருக்கிறார்’ என்று வாசிக்கிறோம். தேவனுடைய அருமையான குணாதிசயம் அன்பு. ஆகவே இந்த தவக்காலங்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் மீது வைத்துள்ள அன்பை போல, நாமும் பிறரிடத்தில் அன்பாயிருக்க அழைக்கிறார்.

    ரூத்பிமோராஜ். ராக்கியாபாளையம்.
    Next Story
    ×