search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி
    X

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
    நாகையை அடுத்த வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயம் கீழை நாடுகளின் “லூர்து நகர்” என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு உலகின் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து, புனித ஆரோக்கிய மாதாவை பயபக்தியுடன் வழிபட்டு செல்வது வழக்கம்.

    கிறிஸ்தவ ஆலயங்களில் “பசிலிக்கா” என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி ஆலயம் விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடை பெறுவது வழக்கம். அதேபோல் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவு பேராலயத்தின் விடியற்காலை விண்மீன் ஆலயத்தில் பிரார்த்தனை மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தது. இரவு 11.45 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை தொடங்கியது. முன்னதாக தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ்அம்புரோஸ், பேராலய அதிபர் பிரபாகர், பங்கு தந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்கு தந்தைகள் ஜோதிநல்லப்பன், ஆரோக்கியசுந்தரம், ஆருண் மற்றும் பங்கு தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் அவர்கள் பிரார்த்தனை நடைபெறும் மேடை அருகே வந்த போது ஆரத்தி எடுக்கப்பட்டது. பின்னர் பேராலய பிரதிநிதிகள் குத்துவிளக்கேற்றி வைத்து பிரார்த்தனை செய்தனர். அதைதொடர்ந்து மறைமாவட்ட ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் சரியாக நள்ளிரவு 12 மணி அளவில் மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் திருப்பலி மேடையில் வைக்கப்பட்டிருந்த திருவிளக்கை ஏற்றி, திருவிவிலியத்தை (பைபிள்) உயர்த்தி காண்பித்து புத்தாண்டு பிறப்பை அறிவித்தார். அதைதொடர்ந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    திருப்பலி முடிவடைந்தவுடன் புதிய ஆண்டை வரவேற்கும் வகையில் வாணவேடிக்கை நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புத்தாண்டு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனையையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை முதலே வேளாங்கண்ணியில் கூட்டம் அலைமோதியது. இதைதொடர்ந்து நேற்று காலையிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×