என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரைக்காலில் தூயதேற்றரவு அன்னை ஆலய பெரிய தேர்பவனி
    X

    காரைக்காலில் தூயதேற்றரவு அன்னை ஆலய பெரிய தேர்பவனி

    காரைக்காலில் தூயதேற்றரவு அன்னை ஆலயத்தின் முக்கிய நிகழ்வான பெரியதேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது.
    காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற மும்மத வழிபாட்டுத் தலங்களுள் தூயதேற்றரவு அன்னை ஆலயமும் ஒன்று. காரைக்கால், புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்தபோது சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை ‘ஆண்டுத் திருவிழா’ கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு ‘ஆண்டுத் திருவிழா’ கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபவழிபாடு மற்றும் சிறியதேர் பவனியும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை திருவிழா கூட்டுத் திருப்பலியும், மாலையில் மின் அலங்கார பெரியதேர் பவனியும் நடைபெற்றது.

    தேர்பவனியை ஆலய பங்குத்தந்தை அந்தோணி லூர்துராஜ் தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் பார்த்திபன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி, தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி முதல்வர் அந்தோணிராஜ், சமாதானக் கமிட்டி உறுப்பினர்கள், துணை பங்கு குருக்கள், அருட்சகோதரிகள் மற்றும் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6-30 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அத்துடன் இந்த ஆண்டு ‘ஆண்டுத் திருவிழா’ நிறைவடைகிறது.
    Next Story
    ×