என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி
    X

    புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி

    மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் நடந்த ஆடம்பர தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர் கிராமத்தில் நூற்றாண்டு விழா கண்ட புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5 - ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி நடைபெற்று வந்தது.

    மேலும் பொருத்தனை தேர்பவனி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் புதுச்சேரி - கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் பெருவிழா திருப்பலி நடைபெற்றது.

    இதையடுத்து இரவு 11 மணிக்கு ஆலய அதிபரும், பங்கு தந்தையுமான பால்ராஜ் தலைமையில் பங்கு தந்தையர்களான குருமார்கள், காரியக்காரர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஜெபவழிபாடு நடத்தி ஆடம்பர தேர்பவனியை தொடங்கி வைத்தனர். இதில் முதலில் புனித சூசையப்பர் தேரும், 2 - வது புனித மரியாள் தேரும், 3 - வதாக புனித அந்தோணியார் தேரும் வரிசையாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நேற்று காலை ஆலயத்தை வந்தடைந்தது.

    இதில் கடலூர், விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, திருச்சி, நாகர்கோவில் உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா ஆகிய வெளிமாநிலங்களை சேர்ந்த கிறிஸ்தவர்களும் திரளாக கலந்து கொண்டு புனித அந்தோணியாரை வழிபட்டனர்.

    இந்த தேர்பவனி நிகழ்ச்சிக்காக சின்னசேலம் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பாரம்பரிய முறைப்படி குடும்பத்தினருடன் மாட்டுவண்டிகளில் ஆலயத்துக்கு வந்தனர். தேர்பவனி முடிந்ததும் ஆலய அதிபர் பால்ராஜ் தலைமையில் திருப்பலி நடத்தப்பட்டு விழா கொடி இறக்கப்பட்டது.

    Next Story
    ×