search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    குர்பாஸ் அதிரடி: இலங்கைக்கு 210 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்
    X

    குர்பாஸ் அதிரடி: இலங்கைக்கு 210 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

    • குர்பாஸ் 70 ரன்களிலும் அஸ்மதுல்லா ஒமர்சாய் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
    • இலங்கை அணி தரப்பில் மதீஷா பதிரனா, அகிலா தனஞ்செயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் - ரஹ்மனுல்லா குர்பாஸ் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஸஸாய் 45 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனார்.

    அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் இப்ராஹிம் சத்ரன் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - அஸ்ரதுல்லா ஒமர்ஸாய் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் அரைசதம் அடித்து அசத்தினார். குர்பாஸ் 70 ரன்களிலும் அஸ்மதுல்லா ஒமர்சாய் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் மதீஷா பதிரனா, அகிலா தனஞ்செயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

    Next Story
    ×