search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நீங்கள் வராவிட்டால் நாங்களும் இந்தியா வரமாட்டோம்- பிசிசிஐ செயலாளருக்கு ரமீஸ் ராஜா பதிலடி
    X

    நீங்கள் வராவிட்டால் நாங்களும் இந்தியா வரமாட்டோம்- பிசிசிஐ செயலாளருக்கு ரமீஸ் ராஜா பதிலடி

    • 14 வருடங்களாக இந்திய அணி பாகிஸ்தானிற்கு செல்லவில்லை.
    • இந்திய அணி மறுப்பு தெரிவித்தால், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

    உலகில் அதிக அளவிலான கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும். இந்த இரு அணிகளும் மோதிக்கொண்டால் அந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது. எனவே, சர்வதேச போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளும் பல ஆண்டுகளாக இரு தரப்பு போட்டிகளில் மோதிக்கொள்வதில்லை. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை போன்ற பொதுவான தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றன. இந்தியா அணி பாகிஸ்தான் சென்று கடைசியாக விளையாடியது 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டிக்குத்தான். அதேபோல், பாகிஸ்தான் அணி கடைசியாக 2016-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்தியா வந்தது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் மோதல் போக்கே இதற்கு காரணம்.

    குறிப்பாக, 2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று விளையாடப் போவதில்லை என் முடிவெடுத்து. எனவே, 14 வருடங்களாக இந்திய அணி பாகிஸ்தானிற்கு செல்லவில்லை.

    இந்நிலையில், 2023-ம் ஆண்டில் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானிலும், அதன் பின்னர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன. முதலாவதாக ஆசிய கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், இதில் இந்திய அணி பங்கேற்காது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். இது பாகிஸ்தான் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "பாகிஸ்தானிற்கு வந்து விளையாட இந்திய அணி மறுப்பு தெரிவித்தால், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியும் பங்கேற்காது.

    பாகிஸ்தான் தொடரில் பங்கேற்கவில்லை என்றால் போட்டிகளை யார் பார்க்கப் போகிறார்கள். எங்கள் அணி சிறப்பான முறையில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணியின் பொருளாதாரத்தை முன்னேற்ற நாம் சிறப்பாக விளையாடினால்தான் முடியும். கடந்த ஒரு ஆண்டில், பாகிஸ்தான் அணி இந்திய அணியை இரு முறை வீழ்த்தியுள்ளது" என்று அதில் கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இவ்வாறு அதிரடி முடிவு எடுத்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் அதற்கு என்ன பதில் தரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    Next Story
    ×