என் மலர்
சினிமா

சமுத்திரக்கனி, எஸ்.ஏ.சந்திரசேகரன், சாக்சி அகர்வால்
நான் கடவுள் இல்லை
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்சி அகர்வால், இனியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் முன்னோட்டம்.
நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் ஆகிய புரட்சிகரமான கருத்துகள் அடங்கிய படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் மீண்டும் அதேபோன்ற புரட்சிகரமான கருத்துகளை கொண்ட ஒரு புதிய படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்துக்கு அவர், ‘நான் கடவுள் இல்லை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
இதில் சமுத்திரக்கனி சி.பி.சி.ஐ.டி. அதிகாரியாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக, ‘வாகை சூடவா’ ‘மவுனகுரு’ ஆகிய படங்களில் நடித்த இனியா நடித்துள்ளார். இவர்களுடன் துணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரியாக சாக்சி அகர்வால் நடிக்க, மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில், ‘பருத்தி வீரன்’ புகழ் சரவணன் நடித்துள்ளார்.

ஓய்வுபெற்ற வழக்கறிஞராக எஸ்.ஏ.சந்திரசேகரன், அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் ரோகிணி, நகைச்சுவை வேடத்தில் இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர். மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.
படத்தில் நடித்து முடித்துள்ள சமுத்திரக்கனி கூறும்போது, ‘‘எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை 64 முறை பார்த்து ரசித்தவன், நான். அவருடைய இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அது நிறைவேறியதில் மகிழ்ச்சி’’ என்றார்.
Next Story