என் மலர்
சினிமா செய்திகள்

படம் பார்க்க வருபவர்களுக்கு பட்டுப்புடவை, வேட்டி சட்டை பரிசு... படக்குழுவின் அசத்தல் அறிவிப்பு..!
- ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
- இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இப்படத்தை இயக்கி உள்ளார்.
நடிகர் ஜீவாவின் 45ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியானது. 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இப்படத்தை இயக்கி உள்ளார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவான 'தலைவர் தம்பி தலைமையில்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தப் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில், ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வருகிற 7ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிமி சில்வர் ஸ்கிரீன் திரையரங்கில் "தலைவர் தம்பி தலைமையில்" படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு வேட்டி-சட்டை மற்றும் பட்டுப்புடவை பரிசாக வழங்கப்படும் என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து படத்தை தயாரித்த "கண்ணன் ரவி க்ரூப்ஸ்" தனது அதிகாரப்பூர்வ X தளப்பதிவில், "25வது நாள் சிறப்பு, TTT படக்குழு, கிடைத்திருக்கும் அளவற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. எங்கள் மனமார்ந்த நன்றியின் அடையாளமாக, பிப்ரவரி 7ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள ரோகிணி சில்வர் ஸ்கிரீன் திரையரங்கில் எந்தக் காட்சியில் படம் பார்க்கும் அனைவருக்கும், ஆண்களுக்கு வேட்டி-சட்டை மற்றும் பெண்களுக்கு பட்டுப் புடவை பரிசளிக்கப்படும்.," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் தம்பி தலைமையில் படம் வெளியான 25வது நாளை கொண்டாடும் வகையில், படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட வெற்றியை கொண்டாடும் வகையில், ரசிகர்களுக்கு புத்தாடை வழங்கும் படத்தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்புக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.






