என் மலர்
சினிமா செய்திகள்

ஜன நாயகனுக்கு பதில் மெர்சல் படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய தியேட்டர்
- ஜன நாயகன் படம் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
- தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் ஒத்திவைக்கப்படுவதாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ஜன நாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காத நிலையில் ஜன நாயகன் படம் ஒத்திவைக்கப்படுவதாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து படத்திற்கு சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது.
அதன்படி, தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'ஜன நாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் விஜய் ரசிகர்களை குதூகலப்படுத்தும் வகையில் ஜனநாயகன் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அதே தேதியில் விஜய் நடித்த மெர்சல் படத்தை வெளியிடுவதாக ராம்சினிமாஸ் தெரிவித்துள்ளது.
அதில், அன்பான தளபதி ரசிகர்கள் அனைவருக்கும்,
தற்போதைய சூழ்நிலை எவ்வளவு கடினமானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
உங்கள் முகத்தில் புன்னகையைக் கொண்டுவரவும், உங்கள் உற்சாகத்தை நிலைநிறுத்தவும், விஜய் மற்றும் அவரது அற்புதமான ரசிகர்களுக்கான அன்பின் அடையாளமாக, இன்று #மெர்சல் திரைப்படத்தை #ராம்சினிமாஸில் பிரத்யேகமாகத் திரையிட முடிவு செய்துள்ளோம்.
இந்த உற்சாகத்தைத் தொடர்வோம் என பதிவிட்டுள்ளார்.






