search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வடிவேலு உதவி செய்யவில்லை என வருத்தப்படவில்லை- போண்டாமணி உருக்கம்
    X

    வடிவேலு உதவி செய்யவில்லை என வருத்தப்படவில்லை- போண்டாமணி உருக்கம்

    • நடிகர் போண்டாமணி பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
    • இவர் சமீபத்தில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

    வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாகவுள்ளது.


    சமீபத்தில் நடிகர் போண்டாமணிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தீவிர சிகிச்சைக்கு பின் தற்போது நலமுடன் உள்ளார். இவரின் சிகிச்சைக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் தமிழ் நாடு அரசு பல உதவிகள் செய்தது.

    இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் மருத்துவ முகாம் மற்றும் இலவச மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நடிகர் போண்டா மணி பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "நான் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது பெரிய திரை சங்கம் வரவில்லை சின்னத்திரை சங்கம் தான் ஓடி வந்து உதவியது. இன்றைக்கு நான் உயிருடன் வாழக் காரணமே தமிழ்நாடு முதலமைச்சர் தான். அவருக்கு நன்றி சொல்லணும்.


    என்னுடைய நிலைமையை ஊடகங்கள் தான் எல்லாரிடமும் கொண்டு போய் சேர்த்தார்கள். அதைப் பார்த்துத்தான் முதலமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை அனுப்பி வைத்தார். அதனால் தான் எனக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். அதனால் தான் இன்றைக்கு நான் எம தர்மனிடம் இருந்து மீண்டு வந்து உட்கார்ந்து இருக்கிறேன். மீண்டும் கலைத்துறையில் இறங்கிவிட்டேன். மிகவும் பெருமையாக இருக்கிறது. பெரிய திரை சங்கத்தைவிட சின்னத்திரை நண்பர்கள் தான் நிறைய உதவி செய்தார்கள். மகளிர் குழுவினர் வந்து உதவி செய்தார்கள்.

    அதேபோல் சின்னத்திரை கலைஞர்கள் நிறையப் பேர் வந்து உதவி செய்தார்கள். பெரிய திரையை எடுத்துக் கொண்டால் நடிகர்கள் ரஜினி, தனுஷ், விஜய் சேதுபதி சாருக்கு எல்லாம் நன்றி சொல்ல வேண்டும். வடிவேல் சார் உதவி செய்யவில்லை என்று நிறையப் பேர் சொன்னார்கள். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. போண்டாமணியை உலகத்திற்கு தெரியவைத்ததே வடிவேலுசார் தான். வடிவேல் உடன் சேர்ந்து நடித்ததால் தான் போண்டா மணி என்ற ஒருத்தன் இருப்பது உலகத்திற்கு தெரியவந்தது. ஒருவர் நமக்கு செய்யவில்லை என்று வருத்தப்படக்கூடாது. நானும் நடிச்சேன். ஆனால் சேர்த்து வைக்கவில்லை. அந்த அளவுக்கு சம்பாதிக்கவில்லை. அதுதான் உண்மை" என்று கூறினார்.

    Next Story
    ×