இந்தியாவின் முதல் மனநல தூதரானார் தீபிகா படுகோன்

இந்தியாவின் முதல் மனநல தூதராக தீபிகா படுகோன் நியமிக்கப்பட்டார்.அனைவரும் ஒன்றிணைந்தால் மனநலம் நிறைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்றார்.
இந்தியாவின் முதல் மனநல தூதரானார் தீபிகா படுகோன்
Published on

புதுடெல்லி:

உலக மனநல தினத்தையொட்டி, நாட்டின் மனநல ஆதரவு அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நடிகை தீபிகா படுகோனை இந்தியாவின் முதல் மனநல தூதராக மத்திய சுகாதார அமைச்சகம் நியமித்துள்ளது.

மனநலம் சார்ந்த உரையாடல்களை முன்னெடுத்துச் செல்வதில் தீபிகா படுகோன் ஆற்றிய தீவிர பங்களிப்பின் காரணமாகவே அவர் இந்தப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா கூறுகையில், மனநல தூதராக தீபிகா நியமனம் செய்யப்பட்டிருப்பது, நமது நாட்டில் மனநலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும். பொது சுகாதாரத்தில் மன ஆரோக்கியத்தின் பங்களிப்பை முன்னிலைப்படுத்த உதவிசெய்யும் என தெரிவித்தார்.

இதுகுறித்து தீபிகா படுகோன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், உலக மனநல தினத்தன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் முதல் மனநல தூதராக நியமிக்கப்பட்டதில் மிகவும் பெருமை அடைகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பொது சுகாதாரத்தின் முக்கிய பகுதியாக மன ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்துவதற்கு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மனநலம் நிறைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டேன். சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்கீழ் பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com