search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகர் ஜி.எம்.சுந்தர்
    X
    நடிகர் ஜி.எம்.சுந்தர்

    எனக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது: ஜி.எம்.சுந்தர்

    புன்னகை மன்னன், சத்யா படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜி.எம்.சுந்தர், எனக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
    இயக்குநர் சிகரம் பாலச்சந்தரால் 'புன்னகை மன்னன்' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ஜி.எம்.சுந்தர். தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவரான இவர், கமலின் 'சத்யா' படத்தில் நடித்தவர். சத்யராஜ் நடித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' படத்திலும் முகம் பதியும் அளவிற்கான பாத்திரத்தில் நடித்தவர். இப்படிச் சுமார் 70 படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் திருப்புமுனையின் சதவீதம் குறைவு தான். அண்மைக் காலங்களில் வந்த 'காதலும் கடந்து போகும்' படம் இவருக்கு ஒரு பிரகாசமான வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. சில நாட்களுக்கு முன் வெளியான 'மகாமுனி' படத்திலும் இவருக்கு நல்லதொரு வேடம்.

    சினிமா வாழ்க்கை பற்றி ஜி.எம்.சுந்தர் கூறும்போது, ‘எனக்குச் சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க ஆசை. அதனால்தான் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன். நாசர், அர்ச்சனா, பப்லு போன்றோர் என் திரைப்படக் கல்லூரித் தோழர்கள்.

    படித்து முடித்து திரைப்பட வாய்ப்புக்காக கவிதாலயா அலுவலகம் சென்றபோது எழுத்தாளர் அனந்து அங்கே இருந்தார். அவர் மூலம் இயக்குநர் பாலசந்தர் அவர்களிடம் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம்தான் 'புன்னகை மன்னன்'. அதன் பிறகு கமல் சாரின் நட்பு கிடைக்க அவரது 'சத்யா' படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் தயாரித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' படத்திலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு 'கிழக்குக்கரை', 'பொன்னுமணி', 'அதர்மம்', 'தொட்டி ஜெயா', 'எங்க ஊரு காவல்காரன்' போன்று பல நாயகர்களுடன் பலதரப்பட்ட படங்களுடன் பலவகையான பாத்திரங்களுடன் என் திரைப்பயணம் தொடர்ந்தது.

    மகாமுனி படத்தில் ஜிஎம்.சுந்தர்

    கூத்துப்பட்டறையின் முதல் வரிசை நாடகக் கலைஞன் நான். முத்துசாமி அவர்களின் 'நாற்காலி மனிதர்கள்' நாடகத்தில் நான்தான் நாயகன். அதுமட்டுமல்ல கூத்துப் பட்டறை அரங்கேற்றும் நாடங்களுக்கெல்லாம் நான்தான் பெரும்பாலும் நாயகன். ஆனாலும், சினிமா வாய்ப்புக்காக போராடத்தான் வேண்டியிருந்தது. இந்த உண்மையை ஒப்புக் கொள்வதில் எனக்கொன்றும் வெட்கமில்லை.

    ஆனால் வாய்ப்பு கேட்டுச் செல்லும் வேளைகளில் எல்லாம் நான் துவண்டு விடவில்லை. காரணம் குடும்பம் ஆதரவாக இருந்தது. 'காதலும் கடந்து போகும் 'படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்தார் இயக்குநர் நலன் குமாரசாமி. 'மௌனகுரு' படத்தை இயக்கிய சாந்தகுமார் தனது 'மகாமுனி' படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். இது எனது சமீபத்திய சந்தோஷம்.

    எனக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது என்கிற தெளிவு எனக்கு இருக்கிறது. அதனால் எனக்கு வயது ஒரு தடை இல்லை என்று நினைக்கிறேன். நான் எப்போதும் இயக்குநரின் கைப்பாவையாக இருப்பேன். இப்போது நான் நடித்து 'மண்டேலா' என்ற ஒரு படம் வரவிருக்கிறது. அதில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். 'சைரன்' என்றொரு படம் முடிந்திருக்கிறது. மேலும் 2 புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். திரைப்படக் கல்லூரியில் 1982ல் படித்த எனக்கு 2019 -ல் வாய்ப்பு வந்திருக்கிறது என்கிறபோது எனக்கான இடம் தேவை இருக்கத்தான் செய்கிறது என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன் பயணம் தொடர்கிறது. "இவ்வாறு நடிகர் ஜிஎம் சுந்தர் கூறினார்.
    Next Story
    ×