என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    ஏ.எல்.எஸ். தயாரித்த "சாரதா'' படத்தை, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன் முதலாக டைரக்ட் செய்தார். எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி இணைந்து நடித்த இந்தப்படம், பெரிய வெற்றி பெற்றது.
    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், குடும்பப்பாங்கான கதைகளுக்கு அருமையாக வசனம் எழுதி புகழ் பெற்றிருந்த காலக்கட்டம் அது. திறமைசாலிகளை ஊக்குவிப்பதில் ஆர்வம் கொண்ட பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன் (கவிஞர் கண்ணதாசனின் அண்ணன்), கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் "சாரதா'' என்ற படத்தை தயாரிக்கத் திட்டமிட்டார்.

    இது புரட்சிகரமான கதை அமைப்பைக் கொண்டது.

    விபத்தில் ஆண்மை இழந்து விடும் கதாநாயகன், மனைவிக்கு மறுமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வான். இதை விரும்பாத கதாநாயகி, பெரிய மனப்போராட்டத்தில் இருப்பாள். இறுதியில், கணவன் காலில் விழுந்து ஆசி பெறும்போது, உயிர் போய்விடும்.

    இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாகவும், விஜயகுமாரி கதாநாயகியாகவும் நடித்தனர். மற்றும் எம்.ஆர்.ராதா, நாகையா, எம்.வி.ராஜம்மா, புஷ்பலதா ஆகியோரும் நடித்தனர்.

    படத்தின் கதை - வசனத்தை உணர்ச்சி பொங்க எழுதியிருந்தார், கோபாலகிருஷ்ணன்.

    கே.வி.மகாதேவன் இசை அமைப்பில், "ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்...'', "மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையைத்தொட்டு'', "தட்டுத்தடுமாறி நெஞ்சம்'' என்பது உள்பட எல்லா பாடல்களும் இனிமையாக அமைந்திருந்தன.

    "சாரதா'', 16-3-1962-ல் வெளிவந்தது. கதை, வசனம், நடிப்பு, பாடல் என்று அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்ததால், படம் `சூப்பர் ஹிட்' ஆகியது.

    குறிப்பாக, விஜயகுமாரியின் நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றது.

    சாரதா பட அனுபவங்கள் பற்றி விஜயகுமாரி கூறியதாவது:-

    "சாரதா'' ஸ்டூடியோ உதயம்

    "ஏ.எல்.எஸ். அவர்கள் இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, "மெஜஸ்டிக்'' என்ற ஸ்டூடியோவை குத்தகைக்கு எடுத்து, அதற்கு "சாரதா ஸ்டூடியோ'' என்று பெயர் சூட்டினார்.

    சாரதா படத்திற்கு பிறகு ஏ.எல்.எஸ். எடுத்த படங்களுக்கெல்லாம் படத்தின் கதாநாயகிகளின் பெயரையே சாந்தி, ஆனந்தி, வசந்தி என்று வைத்தார். இந்தப் படங்களில் எல்லாம் நான்தான் கதாநாயகியாக நடித்தேன்.

    "சாரதா'' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே, சரவணா பிலிம்ஸ் தயாரித்த "பாதகாணிக்கை'' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். இந்தப் படத்தின் டைரக்டர் கே.சங்கர். ஜெமினிகணேசன், சாவித்திரி, எம்.ஆர்.ராதா, அசோகன், எஸ்.வி.சுப்பையா, எம்.வி.ராஜம்மா, ஆகியோருடன் கமலஹாசனும் சின்னப்பையனாக நடித்தார்.

    இந்தப் படத்தில் என்னுடைய மேக்கப் சரியில்லை என்று கூறி, ஹரிபாபு என்ற பெரிய மேக்கப்மேனை எனக்கு மேக்கப் போட ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    ஹரிபாபு, வெளியே எங்கேயும் போகமாட்டார். நடிகர் - நடிகைகள் அவர் வீட்டிற்குப்போய்தான் மேக்கப் போட்டுக் கொள்ள

    இதனால் நான் மேக்கப் போட்டுக் கொள்வதற்காக, அதிகாலை 4-30 மணியிலிருந்து 5 மணிக்குள் புறப்பட்டுப் போவேன். ஏறத்தாழ அதே நேரத்தில், என்.டி.ராமராவும் ஹரிபாபுவிடம் மேக்கப் போட்டுக்கொள்ள வருவார். அப்போது என்னைப் பார்த்த என்.டி.ஆர், என்னை தெலுங்குப் படத்தில் நடிக்க அழைத்தார். அதற்கு நான், "எனக்கு தெலுங்கு தெரியாதே'' என்று சொன்னேன்.

    "நான் உனக்கு தெலுங்கு சொல்லிக் கொடுத்து சின்ன சின்ன ஷாட்டாக எடுக்கிறேன். அதன் பிறகு உனக்கு தெலுங்கில் நடிப்பது சுலபமாகப் போய்விடும்'' என்றார்.

    அப்போது நான் நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்ததால், என்.டி.ஆர். அவ்வளவு ஆர்வமாக கேட்டும், என்னால் நடிக்க முடியாமல் போயிற்று.

    அன்று அவர் கூறியபடி தெலுங்குப் படத்தில் நடித்திருந்தால், தெலுங்குப்பட உலகிலும் எனக்கொரு கதாநாயகி அந்தஸ்து கிடைத்து இருக்கும்.

    அடுத்து ராஜாமணி பிக்சர்ஸ் பட நிறுவனம் "குங்குமம்'' என்ற படத்தை கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ஷனில் தயாரித்தது. இந்தப் படத்தில், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், ரங்காராவ், எம்.வி.ராஜம்மா, நான் எல்லோரும் நடித்தோம். இந்தப்படத்தில் சாரதா

    அறிமுகமானார்.இதில், நான் சிவாஜிகணேசனை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் கதை நன்றாக இருந்தும், பாட்டுக்கள் எல்லாம் அருமையாக அமைந்திருந்தும் படம் ஓடவில்லை.

    அடுத்து ஏ.எல்.எஸ். புரொடக்ஷன் தயாரித்த "சாந்தி'' என்ற படத்தில் சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், நான், எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்தோம். டைரக்டர் பீம்சிங்.

    இந்தப் படத்தில் சிவாஜிகணேசனுக்கும், எனக்கும் முதல் இரவு காட்சி. அந்தக் காட்சியில், முதல் இரவு நடக்கக்கூடாது என்பதற்காக என் புடவையை எரியும் விளக்கில் போட்டு புடவை எரிய ஆரம்பித்ததும் "முதல் இரவு அன்று இப்படி நடந்தது அபசகுனம்'' என்று காரணம் காட்டி, சிவாஜிகணேசன் முதல் இரவை தள்ளி வைத்துவிடுவார்.

    இது அன்றைய தினம் படமாக்கப்பட வேண்டிய காட்சி.

    அப்போது எதிர்பாராமல் என் புடவையில் தீ மள மளவென்று பரவியது.நான் பயந்து போய், என் கையால் அதைக் கசக்கி தீயை அணைத்துவிட்டேன். இதனால் என் கையில் தீக்காயம் ஏற்பட்டு, நான் துடித்துப்போனேன்.

    உடனே, சிவாஜி மருந்து வாங்கி வரச்சொல்லி, அவரே என் அருகில் அமர்ந்து தீக்காயத்திற்கு மருந்து தடவினார். அந்த மனிதாபிமானத்தை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருந்த "சாந்தி'', நன்றாக ஓடியது.

    இதைத்தொடர்ந்து டைரக்டர் ப.நீலகண்டன் டைரக்ஷனில் ஏ.எல்.எஸ். நிறுவனம் எடுத்த படம் "ஆனந்தி.'' இதில் நானும் எஸ்.எஸ்.ஆரும் கதாநாயகன், கதாநாயகி. எம்.என்.நம்பியாரும் இதில் நடித்திருந்தார். இந்தப்படம் சுமாராக ஓடினாலும், இந்தப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. "கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்; நெஞ்சிலே நினைவிருந்தால் நீரிலும் தெய்வம் வரும்'' என்ற அந்தப்பாடலை, அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டு இருப்பேன்.

    தொடர்ந்து "பணம் பந்தியிலே'', "உல்லாசப்பயணம்'', "தேடி வந்த திருமகள்'', "அவன் பித்தனா'', "வழிகாட்டி'', "அல்லி'' முதலிய படங்கள் வந்தன. இவை நானும் எஸ்.எஸ்.ஆரும் இணைந்து நடித்த எங்களுடைய சொந்தப் படங்கள்.

    பெல் பிக்சர்ஸ் நிறுவனம் பீம்சிங் டைரக்ஷனில் எடுத்த படம் "பச்சை விளக்கு.'' இந்தப்படத்தில் சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா, ரங்காராவ், சவுகார்ஜானகி, புஷ்பலதா, நாகேஷ் ஆகியோர் நடித்தோம்.

    இந்தப்படத்தில் நான் சிவாஜிகணேசனின் தங்கையாக நடித்தேன். அதில் சிவாஜிகணேசன் என்னை வாழ்த்தி "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது'' என்று பாடுவார். "குங்குமச் சிமிழே, குடும்பத்தின் விளக்கே, குலமகளே வருக! எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக!'' என்று அந்தப்பாட்டில் வரிகள் வரும்.

    அன்றே சிவாஜிகணேசன் என்னிடம், "விஜி! நீ வருங்காலத்தில் கண்ணகியாக நடிப்பாய்!'' என்றார். அவர் என்னை வாழ்த்தி, பச்சை விளக்கு காட்டினார் என்றே நினைத்தேன்.

    பச்சை விளக்கு படம் திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் வெற்றிக்கொடி நாட்டியது.''

    இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.
    ஸ்ரீதர் தயாரித்த மாபெரும் வெற்றிப்படமான "கல்யாணப்பரி''சில், ஜெமினிகணேசன், சரோஜாதேவியுடன் விஜயகுமாரி இணைந்து நடித்தார்.
    ஸ்ரீதர் தயாரித்த மாபெரும் வெற்றிப்படமான "கல்யாணப்பரி''சில், ஜெமினிகணேசன், சரோஜாதேவியுடன் விஜயகுமாரி இணைந்து

    நடித்தார்."குலதய்வம்'' வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்ப்பட உலகில் நிரந்தரமான ஓர் இடத்தை விஜயகுமாரி தேடிக்கொண்டார்.

    ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ், புத்தா பிலிம்ஸ் போன்ற பெரிய பட நிறுவனங்களில் இருந்து விஜயகுமாரிக்கு அழைப்புகள் வந்தன. ஆனால், அவர் ஏவி.எம். நிறுவனத்துடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தினால், மற்ற படங்களில் நடிக்க முடியாத நிலை இருந்தது.

    இதை அறிந்த ஏவி.மெய்யப்ப செட்டியார், விஜயகுமாரியை அழைத்து, "உனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. அதற்கு, நாங்கள் போட்ட ஒப்பந்தம் தடையாக இருக்கக்கூடாது. எனவே அதை ரத்து செய்து விடுகிறோம். இனி நீ எல்லாப் படங்களிலும் நடிக்கலாம். நீ பெரிய நடிகையாக வருவாய்'' என்று கூறினார்.

    நெகிழ்ந்து போன விஜயகுமாரி, அவர் காலைத்தொட்டு வணங்கி, ஆசி பெற்றார்.

    ஜெமினியின் "வஞ்சிக்கோட்டை வாலிபன்'' படத்தில், ஜெமினிகணேசனின் தங்கையாக நடித்தார். அந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    அதே படத்தை, இந்தியிலும் ஜெமினி எடுத்தது. தமிழில் நடித்த அதே வேடத்தில், இந்தியிலும் விஜயகுமாரி நடித்தார். இதுவும் பெரிய வெற்றிப்படம்.

    விஜயகுமாரிக்கு இந்திப் படங்களில் நடிக்கவும் அழைப்புகள் வந்தன. அவர் கவனம் முழுவதும், தமிழில் சிறந்த இடத்தைப் பெறவேண்டும் என்பதிலேயே இருந்தது. அதனால் அவர் இந்திப்பட உலகின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அவர் நடித்த ஒரே இந்திப்படம், "ராஜ்திலக்'' (வஞ்சிக்கோட்டை வாலிபன் இந்திப்பதிப்பு) மட்டுமே.

    புத்தா பிலிம்ஸ் தயாரித்த "பதிபக்தி''யில் சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சாவித்திரி, எம்.என்.ராஜம் ஆகியோருடன் விஜயகுமாரியும் நடித்தார். இதில், விஜயகுமாரிக்கு, ஜெமினிகணேசனின் முறைப்பெண் வேடம்.

    பீம்சிங் டைரக்ட் செய்த இந்தப்படம் மெகா ஹிட் படமாகும்.

    கதை-வசன கர்த்தாவாக இருந்த ஸ்ரீதர், முதல் முதலாக டைரக்ட் செய்த படம் "கல்யாணப்பரிசு.'' தமிழ்ப்பட உலகில், ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்த படம் இது.

    ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில், விஜயகுமாரியும், சரோஜாதேவியும் அக்கா - தங்கையாக நடித்தனர். விஜயகுமாரிக்காக சரோஜாதேவி தன் காதலை தியாகம் செய்வார்.

    திருப்பங்கள் நிறைந்த இந்த முக்கோணக் காதல் கதையை, ஒரு காவியமாக உருவாக்கியிருந்தார், ஸ்ரீதர். 9-4-1959-ல் வெளிவந்து வெள்ளி விழா கண்ட இப்படத்தின் மூலம், விஜயகுமாரி மேலும் புகழ் பெற்றார்.

    மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "பெற்ற மகனை விற்ற அன்னை'' படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் இணைந்து நடித்தனர். மனோகர், பண்டரிபாய் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். பாடல்கள், படப்பிடிப்பு எல்லாம் சிறப்பாக அமைந்தபோதிலும் படம் வெற்றி பெறவில்லை.

    இந்தக் காலக்கட்டத்தில், எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் இணைந்து, விஜயகுமாரி பல நாடகங்களிலும் நடித்தார்.

    அதுபற்றி விஜயகுமாரி கூறுகிறார்:-

    "நாங்கள் நடித்த நாடகங்களில் கலைஞர் எழுதிய "மணி மகுடம்'' பெரும் புகழ் பெற்றது. மற்றும் "தென்பாண்டிய வீரன்'', "புதுவெள்ளம்'', "முதலாளி'', "முத்து மண்டபம்'' போன்ற நாடகங்களை நாங்கள் நடத்தினோம்.

    நாடகங்களில் நடித்துக் கொண்டே "மனைவியே மனிதனின் மாணிக்கம்'', "கைதியின் காதலி'', "தங்க மனசு தங்கம்'' போன்ற படங்களிலும் நடித்தேன்.

    அந்த சமயத்தில் நாங்கள் "தங்கரத்தினம்'' என்ற படத்தை தயாரித்தோம். இந்தப்படத்தில் நான் ஆதிதிராவிடப் பெண்ணாக நடித்தேன். சாதியில் ஏற்ற தாழ்வு கிடையாது, எல்லோருடைய உடம்பிலும் ஓடுவது ஒரே ரத்தம்தான். எல்லோரும் மனிதசாதி'' என்ற தத்துவத்தை சொல்லும் கதை.

    இந்த படத்தில், அப்போது பழனியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் அண்ணா பேசுவது, கலைஞர் பேசுவது முதலான காட்சிகள் இடம் பெற்றன. மக்கள் இதை மிகவும் வரவேற்றார்கள்.

    இந்தப்படம் முடியும்போது நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தேன்.

    அதனால் நாடகங்களில் நடிக்க முடியவில்லை. எனவே, "மணிமகுடம்'' நாடகத்தில் எனக்கு பதிலாக நடிக்க கோவையிலிருந்து ஒரு பெண் வந்திருந்தார். அவரால் கலைஞர் எழுதிய வசனங்களை பேச முடியவில்லை. ஆகவே மணிமகுடம் நாடகத்திற்குப் பதிலாக "தென்பாண்டிய வீரன்'' என்ற நாடகத்தை நடத்தினோம்.

    அந்தப் புது நடிகை யார் தெரியுமா? பிற்காலத்தில் மலையாள பட உலகில் கொடிகட்டிப் பறந்த "செம்மீன்'' பட நாயகி ஷீலாதான்!

    மருத்துவமனையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. என் குழந்தைக்கு டாக்டர் வாதிராஜம் அவருடைய மனைவியும்தான் பெயர் சூட்டினார்கள். என் கணவரின் முதல் எழுத்தான "ர'', என்னுடைய பெயரின் முதல் எழுத்தான "வி'' இந்த இரண்டையும் சேர்த்து ரவிக்குமார் என்ற பெயர் வைத்தார்கள்.

    குழந்தை பிறப்பதற்கு முன் வீமண்ண முதலி கார்டனில் குடியிருந்தேன். இது எனக்கு சொந்த வீடு. குழந்தை பிறந்த பிறகு, என் கணவர் அவருடைய முதல் மனைவி பங்கஜம் அக்காளுடன் இருந்த தேனாம்பேட்டை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    அந்த காம்பவுண்டுக்குள் மூன்று வீடுகள். அடுத்தடுத்து இருந்தன. அதில் ஒரு வீட்டில், என் கணவரின் முதல் மனைவி பங்கஜம் அக்காள் அவர்களுடைய குழந்தைகளும், மற்றொரு வீட்டில் என் கணவரின் தங்கையும் அவருடைய கணவர் டி.வி.நாராயணசாமியும் அடுத்த வீட்டில் நானும் என் மகனும் இருந்தோம். அப்பா, பாட்டி, அக்காள், தங்கை, அக்காளுடைய மகள் ஆகியோரும் என்னுடன் இருந்தார்கள்.

    நாங்கள் தனித்தனி வீட்டில் இருந்தாலும், எல்லோரும் ஒரே குடும்பத்தில் இருப்பதுபோல், ஒற்றுமையாக - சந்தோஷமாக இருந்தோம். அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் என் மனதில்  இன்னும் நிழலாடுகின்றன.

    தைப்பொங்கல் வந்துவிட்டால் எங்கள் வீடு திருவிழா கோலம் பூண்டுவிடும். என் கணவரும், நானும் பொங்கல் அன்று காலை 6 மணிக்கு போர்ட்டிகோவில் வந்து நிற்போம். நாடக கம்பெனியில் உள்ளவர்கள், சினிமாத் துறையில் உள்ளவர்கள், கட்சியைச் சேர்ந்தவர்கள், ரசிகர் மன்றத்தினர், நரிக்குறவர்கள் கூடியிருப்பார்கள். ஒருபக்கம் நாதஸ்வரம் ஒலி ஒலித்துக்கொண்டிருக்கும்.

    பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகஆட்டம் என்று வீடே கலகலப்பாக இருக்கும், பிறகு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுச்

    செல்வார்கள்.இதெல்லாம் என் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத இனிய நிகழ்ச்சியாகும்.

    அறிஞர் அண்ணா அவர்களின் 50-வது பிறந்த நாள் விழாவை எங்கள் வீட்டில் கொண்டாடினோம். அப்போது ஒரு வெள்ளித்தட்டில் 50 தங்கக் காசுகளை வைத்து அண்ணா அவர்களிடம் என் கணவர் கொடுத்தார்.

    எனக்கு குழந்தை பிறந்து 2 மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன். மாடர்ன் தியேட்டர் படம் "குமுதம்'' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். எனக்கு ஜோடி என் கணவர். இதில் ரங்காராவ், பி.எஸ்.சரோஜா, சவுகார்ஜானகி, எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்தோம்.

    சுப்பையா டைரக்ட் செய்ய, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனம் எழுதினார்.

    இந்தப் படத்தில் எனக்கு வக்கீல் வேடம். காதலனுக்காகவும், காதலன் மனைவிக்காகவும் கோர்டடில் என் தந்தையை எதிர்த்து வாதாடி ஜெயித்து, தன் வாழ்க்கையை தியாகம் செய்யும் ஒரு பெண்ணின் கதை.

    இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து முதல்தர நாயகி அந்தஸ்தை எனக்குத் தேடித்தந்தது.

    - இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.

    ஏவி.எம்.மில் இருந்து விஜயகுமாரிக்குக் கடிதம் வந்தது. "உடனே புறப்பட்டு வாருங்கள்'' என்பதே அக்கடிதம். விஜயகுமாரியும், அவர் பெற்றோரும் புறப்பட்டு சென்னை சென்றனர்.
    ஏவி.எம்.மில் இருந்து விஜயகுமாரிக்குக் கடிதம் வந்தது. "உடனே புறப்பட்டு வாருங்கள்'' என்பதே அக்கடிதம். விஜயகுமாரியும், அவர் பெற்றோரும் புறப்பட்டு சென்னை சென்றனர். ஏவி.எம். நிர்வாகி வாசுமேனனை சந்தித்தனர்.

    "நாளை உனக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப் போகிறோம். நாளைக்கு நீ பேசவேண்டிய வசனம் இந்த பேப்பரில் இருக்கிறது. நன்றாகப் படித்துவிட்டு வா. எப்படி நடிக்க வேண்டும் என்பதை நாங்கள் சொல்லித் தருகிறோம்'' என்றார், வாசுமேனன்.

    விஜயகுமாரி, வசனத்தை நன்றாக மனப்பாடம் செய்து கொண்டு, மறுநாள் ஏவி.எம். ஸ்டூடியோவுக்குப்போனார். அங்கு அவருக்கு மேக்கப் டெஸ்ட் நடந்தது. சிரிக்கச் சொல்லியும், கோபம், சோகம் முதலான முக பாவங்களை வெளிப்படுத்தியும் படம் எடுத்தார்கள்.

    முதல் நாள் கொடுத்த வசனங்களை பேசி நடிக்கச் சொன்னார்கள். அதன்படி பேசி நடித்தார். "பரவாயில்லை; நன்றாக நடிக்கிறாய்'' என்று வாசுமேனன் பாராட்டினார்.

    "இன்னும் இரண்டு நாட்கள் நீங்கள் எல்லோரும் சென்னையிலேயே தங்கியிருங்கள்'' என்று, வாசுமேனன் கூறினார். அதன்படி, பெற்றோருடன் விஜயகுமாரி 2 நாட்கள் சென்னையில் தங்கினார்.

    2 நாட்களுக்குப்பின் ஏவி.எம்.மில் இருந்து கார் அனுப்பினார்கள். அதில் விஜயகுமாரியும், பெற்றோர்களும் ஏவி.எம். ஸ்டூடியோவுக்குச் சென்றார்கள்.

    இவர்களை ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் வாசுமேனன் அழைத்துச் சென்றார்.

    "உனக்குப் பாடத் தெரியுமா?'' என்று விஜயகுமாரியிடம் ஏவி.எம். கேட்டார். "தெரியாது'' என்று விஜயகுமாரி பதில் அளித்தார்.

    "பரத நாட்டியம் தெரியுமா?'', "நாடகங்களில் நடித்திருக்கிறாயா?'' - இப்படி ஏவி.எம். கேட்ட எல்லா கேள்விகளுக்கும் விஜயகுமாரி அளித்த பதில் "தெரியாது'', "இல்லை'' என்பதே!

    இந்த பதில்களைக் கேட்டு ஏவி.எம். சிரித்துவிட்டார். "எதுவுமே தெரியாத உன்னிடம் ஏதோ ஒரு திறமை ஒளிந்து கொண்டிருக்கிறது. ஸ்டூடியோவில் உனக்கு எல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். அதிர்ஷ்டம் உன் பக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு, உனக்கு மாதச் சம்பளம் கொடுக்கப்படும்'' என்று ஏவி.எம். கூறினார்.

    இதற்கான ஒப்பந்தத்தில் விஜயகுமாரியும், அவருடைய அப்பாவும் கையெழுத்துப் போட்டனர்.

    ஏவி.எம். காலில் விழுந்து வணங்கினார், விஜயகுமாரி.

    "நீ பெரிய நடிகையாக வருவாய்'' என்று ஏவி.எம். வாழ்த்தினார்.

    பின்னர் விஜயகுமாரியிடம் வாசுமேனன், "நீ இனிமேல் சென்னையில் தங்கியிருக்க வேண்டும். தினமும் இங்கு வந்து, டான்ஸ், பாட்டு எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கூறினார். அதன்படி பெற்றோருடன் சென்னையில் குடியேறினார், விஜயகுமாரி.

    தினமும் ஏவி.எம். ஸ்டூடியோவுக்குச் சென்று, நடிப்பு, நடனம், வசனம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.

    ஏவி.எம். தயாரித்த "குலதெய்வம்'' என்ற படத்தில் விஜயகுமாரி அறிமுகமானார். இதற்கு வசனம் எழுதியவர் முரசொலி மாறன். அவருக்கும் இது முதல் படம். கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ட் செய்தனர்.

    எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சகஸ்ரநாமம், சந்திரபாபு, எம்.என்.ராஜம், மைனாவதி, பண்டரிபாய் ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தின் மூலம் புகழ் பெற்ற ராஜகோபால், பின்னர் "குலதெய்வம் ராஜகோபால்'' என்று அழைக்கப்பட்டார்.

    தன் முதல் திரைப்பட அனுபவங்கள் பற்றி விஜயகுமாரி கூறியதாவது:-

    "நான் முதன் முதலில் கால் வைத்த இடம் ஏவி.எம். கலைக்கூடம். முதல் மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டபோது, முதன் முதலாக பேசச்சொன்ன வசனம் கலைஞர் அவர்கள் எழுதி- நடிகர் திலகம் சிவாஜி அவர்களால் பேசப்பட்ட வசனம்- "ஓடினாள்... ஓடினாள்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்...'' என்பது. இதெல்லாம் எனக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டங்கள்.

    "குலதெய்வம்'' என்ற அருமையான படத்தில் என்னை ஏவி.எம். நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்தப் படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்தார்.

    எந்தத் தாய் நான் சினிமாவில் நடிப்பதை ஆரம்பத்தில் எதிர்த்தாரோ, அதே தாயார் என் படம் எப்போது வரும் என்று தினமும் ஆவலோடு கேட்டு வந்தார்.

    இந்த சமயத்தில், என் வாழ்க்கையில் விதி விளையாடியது. என் தாயாரின் உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்தது. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்.

    தினமும் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்ப்பது, பிறகு ஸ்டூடியோவுக்கு செல்வது என்று நாட்கள் ஓடின.

    "குலதெய்வம்'' படம் முடிவடைவதற்கு முன்பே என் தாயார் காலமாகிவிட்டார்கள். என் அம்மாவை உயிரற்ற உடலாக வீட்டுக்குக் கொண்டு வந்தபோது, என் இதயம் சுக்கல் சுக்கலாக உடைந்தது. என் அப்பா, நான், பாட்டி, அக்காள், தங்கை, அக்காள் மகள் எல்லோரும் கதறினோம்.

    நாங்கள் சென்னைக்கு புதிது. இங்கு யாரையும் எங்களுக்குத் தெரியாது. ஆறுதல் சொல்வதற்குக்கூட யாரும் இல்லை.

    இந்த சமயத்தில் எங்கள் அம்மா இறந்த செய்தியைக் கேட்டு எஸ்.எஸ்.ஆர். வந்தார். எங்களுக்கு ஆறுதல் சொன்னார். என் அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் அவரே முன்னின்று செய்தார்.

    என் அம்மாவின் நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு "குலதெய்வம்'' படத்தில் தொடர்ந்து நடித்து வந்தேன். முன்பெல்லாம் என் துணைக்கு அப்பாவும், அம்மாவும் வருவார்கள். இப்போது அப்பா மட்டும் வந்தார்.

    "குலதெய்வம்'' 1956 செப்டம்பர் 29-ந்தேதி வெளிவந்தது. வெளியிட்ட எல்லா ஊர்களிலும் வெற்றிகரமாக ஓடி, 100-வது நாள் விழாவை கொண்டாடியது.

    என் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், இதைக்காண என் அம்மா இல்லையே என்ற துயரமும் மனதில் நிறைந்திருந்தது.

    எப்படி என் மனதைத் தேற்றினாலும், அம்மாவின் நினைவு அடிக்கடி வந்து என்னை வாட்டியது. அழுதுகொண்டே இருப்பேன். அவ்வப்போது, எஸ்.எஸ்.ஆர். என் வீட்டிற்கு வந்து எனக்கு ஆறுதல் சொல்வார். அது எனக்கு மனதில் தெம்பைக் கொடுத்தது.

    ஒருநாள் என் வீட்டிற்கு எஸ்.எஸ்.ஆர். அவர்கள் வந்தார்கள். என்னைப் பார்த்து "உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்'' என்றார்கள். "சொல்லுங்கள்'' என்றேன். "நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீ என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார். நான் மவுனமாக இருந்தேன். "மவுனம் சம்மதம்'' என்ற முறையில்.

    எங்கள் திருமணம் எளிமையாக நடந்தது. அம்மி மிதித்து அருந்ததி பார்க்கவில்லை; மாலை மாற்றிக் கொள்ளவும் இல்லை. எங்கள் வீட்டில் அப்போது இருந்த பெரியவர்களுடைய ஆசியைப் பெற்று, அவர்கள் முன்னிலையில் நாங்கள் கணவன் - மனைவியாக இல்வாழ்க்கையைத்

    தொடங்கினோம்.''இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.
    நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் விஜயகுமாரி. பள்ளியில் படிக்கும்போது, சினிமா என்றாலே அவருக்கு எட்டிக்காய் கசப்பு! அப்படிப்பட்டவர் சினிமாவில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.
    நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் விஜயகுமாரி. பள்ளியில் படிக்கும்போது, சினிமா என்றாலே அவருக்கு எட்டிக்காய் கசப்பு! அப்படிப்பட்டவர் சினிமாவில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

    விஜயகுமாரியின் சொந்த ஊர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம். தந்தை ராமசாமி கவுண்டர். தாயார் தங்கலட்சுமி அம்மாள்.

    விஜயகுமாரிக்கு ஒரு அக்காள், ஒரு தங்கை.

    விஜயகுமாரி மிகவும் அமைதியானவர். யாரிடமும் அதிகம் பேசமாட்டார். பள்ளிக்கூடத்தில் நடைபெறும் விளையாட்டுப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டி எதிலும் கலந்து கொள்வதில்லை. தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இருப்பார்.

    ஒரு சமயம், விஜயகுமாரியை பள்ளி ஆசிரியை அழைத்து, "இந்த வருடம் பள்ளி ஆண்டு விழாவில் நீ கட்டாயம் நடனம் ஆடவேண்டும். தட்டிக் கழிக்க எந்தக் காரணமும் சொல்லக்கூடாது'' என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

    ஆட மறுத்தால், ஆசிரியை தன்னை நிச்சயம் பெயிலாக்கி விடுவார் என்று விஜயகுமாரி பயந்தார். என்றாலும், எந்த நடனத்தை எப்படி ஆடுவது என்று புரியவில்லை. இதுபற்றி ஆசிரியையிடம் கூற, "வேதாள உலகம்'' படத்தில் பத்மினி ஆடிய "வாசமுள்ள பூப்பறிப்பேனே'' என்ற நடனத்தை ஆட பயிற்சி அளித்தார்கள்.

    பள்ளி ஆண்டு விழாவில் பயந்து கொண்டேதான் ஆடினார், விஜயகுமாரி. ஆனால் நடனம் சிறப்பாக இருந்ததாகக் கூறி, பரிசும் வழங்கினார்கள்!

    ஒரு வாரம் கழிந்தது. விஜயகுமாரியை ஆசிரியை அழைத்தார். "நீ அழகாக இருக்கிறாய். ஆகவே சினிமாவில் நடிக்க முயற்சி செய். சிறந்த நடிகையாக வருவாய்'' என்றார்.

    அவர் மீது விஜயகுமாரிக்கு ரொம்பகோபம். காரணம், அவருக்கு சினிமா என்றாலே பிடிக்காது! அம்மா சினிமாவுக்கு அழைத்துப் போனால், அழுதுகொண்டே போவார். படம் பார்க்கும்போது, தூங்கி விடுவார்!

    ஆனால் ஆசிரியை விட்டபாடில்லை. `சினிமாவில் நடி. வாழ்க்கையில் முன்னேறலாம்' என்று உபதேசித்தபடி இருந்தார்.

    இதனால் மெல்ல மெல்ல, விஜயகுமாரி மனதில் சினிமா ஆசை துளிர்விட ஆரம்பித்தது.

    ஒரு நாள் தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, "அப்பா! நான் சினிமாவில் நடிக்க வேண்டும்!'' என்று தந்தையிடம் கூறினார். அவ்வளவுதான். அப்பா `பளார்' என்று விட்ட அறையில், விஜயகுமாரியின் கன்னம் வீங்கிவிட்டது!

    "உன்னை பள்ளியில் ஆடவிட்டதே தவறு. சினிமா கேட்கிறதா, சினிமா! இனிமேல் நீ பள்ளிக்குப் போகவேண்டாம்!'' என்று கோபத்துடன்

    கூறினார்.அன்று விஜயகுமாரி சாப்பிடவில்லை. அழுதுகொண்டே இருந்தார். காய்ச்சல் வேறு வந்துவிட்டது.

    அதை பார்த்துவிட்டு அவர் அம்மாவும் அழ ஆரம்பித்துவிட்டார்.

    அந்தக் காலத்தில் சில குடும்பங்களில் யாருக்காவது உடல் நலம் இல்லை என்றால், டாக்டரைக் கூப்பிடுவதற்குப் பதில் ஜோதிடரைக் கூப்பிடுவார்கள்!

    விஜயகுமாரியின் அப்பா ஒரு ஜோதிடரை அழைத்தார். விஜயகுமாரியின் ஜாதகத்தை அவரிடம் கொடுத்து, "சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள்'' என்ன செய்யலாம் என்று ஜாதகத்தைப் பார்த்து சொல்லுங்கள்'' என்றார்.

    ஜாதகத்தை ஆராய்ந்த ஜோசியர், "உங்கள் மகள் நிச்சயமாக சினிமாவில் நடிப்பாள். பேரும் புகழும் பெறுவாள்'' என்று அடித்துச்
    சொன்னார்.ஏவி.எம். விளம்பரம்

    அந்த சமயத்தில் பத்திரிகைகளில் ஏவி.எம். நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று பிரசுரமாகியிருந்தது. "புது முகங்கள் தேவை. போட்டோவுடன் விண்ணப்பிக்கவும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த விளம்பரத்தை, பெற்றோரிடம் காண்பித்தார், விஜயகுமாரி.

    அப்பா, அம்மா இருவரும் கலந்து பேசி, மகள் விருப்பத்துக்கு தடை போடவேண்டாம் என்று முடிவு செய்தார்கள். விஜயகுமாரியை போட்டோ ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று சில படங்கள் எடுத்து, ஏவி.எம். நிறுவனத்துக்கு தபாலில் அனுப்பி வைத்தார்கள்.

    இதன் பிறகு நடந்தது பற்றி விஜயகுமாரி கூறுகிறார்:-

    "நான் தீவிர அம்மன் பக்தை. எங்கள் ஊர் மேட்டுப்பாளையத்தில் இருக்கும் வனபத்திரகாளி அம்மனையும், எங்கள் குல தெய்வம் முருகனையும் தினம் தினம் வேண்டிக் கொண்டிருந்தேன், ஏவி.எம். ஸ்டூடியோவில் இருந்து கடிதம் வரவேண்டும் என்று! எப்போதும் வாசலிலேயே உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொரு நாளும் தபால் காரரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.

    ஒருநாள் ஏவி.எம்.மிலிருந்து கடிதம் வந்தது. அதில் எங்களை ஏவி.எம்.மிற்கு வரும்படி அழைத்திருந்தார்கள். எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

    நானும், என் பெற்றோரும் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றோம். அங்கிருந்து ஏவி.எம். ஸ்டூடியோவிற்கு சென்றோம்.

    அங்கு மானேஜர் வாசுமேனன் அவர்களைப் போய்ப் பார்த்தோம். வாசுமேனன் என்னைப் பார்த்ததும், "போட்டோவில் பெரிய பெண் போல் தெரிகிறாய். நேரில் சின்னப் பெண்ணாக இருக்கிறாயே!'' என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

    பிறகு, "உனக்கு டான்ஸ் ஆடத்தெரியுமா?'' என்று கேட்டார். எனக்கு தெரிந்த அந்த ஒரே நடனம் - பள்ளியில் ஆடியதுதான். அந்த நடனத்தை நானே பாடிக்கொண்டு ஆடினேன்.

    "சரி. ஊருக்குப் போங்கள். நாங்கள் மறுபடியும் கடிதம் போடுகிறோம்'' என்று வாசுமேனன் கூறினார்.

    எங்களுக்கு ஒரே குழப்பம். `என்ன நடக்குமோ' என்ற கவலையுடன் ஊருக்குத் திரும்பினோம். எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று என் பெற்றோர்கள் நினைத்தனர். "இனிமேல் ஏவி.எம்.மிலிருந்து கூப்பிட மாட்டார்கள். நீ பள்ளிக்குப் போய் படி. ஒருவேளை ஏவி.எம்.மிலிருந்து கடிதம் வந்தால் நாம் போவோம்'' என்று சமாதானம் சொல்வது போல சொல்லி, என்னை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள்.''

    இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.
    ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன், பிறகு பட அதிபராக மாறி, "அன்புள்ள ரஜினிகாந்த்'', "வைதேகி காத்திருந்தாள்'' உள்பட சில படங்களை தயாரித்தார்.
    ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன், பிறகு பட அதிபராக மாறி, "அன்புள்ள ரஜினிகாந்த்'', "வைதேகி காத்திருந்தாள்'' உள்பட சில படங்களை தயாரித்தார்.

    தூயவனுக்கு கல்யாணப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே, இரண்டு பெரிய படக் கம்பெனிகள் அவரை அணுகி, "பால்குடம்'' கதையை படமாக்கும் உரிமையைக் கேட்டன. பெரிய தொகை தரவும் முன்வந்தன.

    அதே சமயம், "பால்குடம்'' கதையை படமாக்க வேண்டும் என்ற எண்ணம், அதை நாடகமாக நடத்தி வந்த ஏவி.எம்.ராஜனுக்கும் இருந்தது. எனவே, பெரிய தொகைகளுக்கு ஆசைப்படாமல், தன் கதையை நாடகமாக அரங்கேற்றிய நன்றிக்கு அறிகுறியாக, படமாக்கும் உரிமையை ஏவி.எம்.ராஜனுக்கே தூயவன் தந்தார்.

    பால்குடத்தை ஏவி.எம்.ராஜன் படமாகத் தயாரித்தபோது, வசனம் எழுதும் வாய்ப்பை தூயவனுக்கே வழங்கினார். படத்தில் ஏவி.எம்.ராஜனும், புஷ்பலதாவும் நடித்தனர். இந்தப்படம் 50 நாட்கள் ஓடியது.

    தூயவன் கதை எழுதுவதில் மட்டும் அல்ல, வசனம் எழுதுவதிலும் கெட்டிக்காரர் என்பதை பட உலகத்தினர் தெரிந்து கொண்டனர். ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. ஜெய்சங்கர் - ஜெயபாரதி நடித்த "புதிய வாழ்க்கை'', சிவாஜிகணேசன் நடித்த "மனிதருள் மாணிக்கம்'', "ஜெயலலிதா- முத்துராமன் நடித்த "திக்குத் தெரியாத காட்டில்'' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார்.

    அந்தக் காலக்கட்டத்தில், ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்கள் பலவற்றில் ஜெய்சங்கர் நடித்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜெய்சங்கர் படங்கள் வந்து கொண்டிருந்தன. அவர் படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். "முடிசூடா மன்னன்'', "கல்யாணமாம் கல்யாணம்'', "எங்களுக்கும் காலம் வரும்'', "கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன'' ஆகியவை, அவற்றில் சில.

    தன் படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதுமாறு தூயவனுக்கு சாண்டோ சின்னப்பா தேவர் அழைப்பு அனுப்பினார்.

    அதைத்தொடர்ந்து "கோமாதா என் குலமாதா'', "மாணவன்'', "ஆட்டுக்கார அலமேலு'', "அன்புக்கு நான் அடிமை'', கமலஹாசன் நடித்த "தாயில்லாமல் நான் இல்லை'', ரஜினிகாந்த் நடித்த "தாய் மீது சத்தியம்'', "தாய்வீடு'', "அன்னை ஓர் ஆலயம்'' முதலான படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். இந்தப் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடின.

    முக்தா பிலிம்ஸ், மறைந்த வேணு செட்டியாரின் ஆனந்தி பிலிம்ஸ் ஆகியவற்றுக்காக பல படங்களுக்கு வசனம் எழுதினார். முக்தா சீனிவாசன் டைரக்ஷனில் சிவாஜிகணேசன் நடித்த "தவப்புதல்வன்'' படம் 100 நாட்கள் ஓடி வசன கர்த்தா தூயவனுக்கு புகழ் தேடித்தந்தது. ரஜினிகாந்த் நடித்த "பொல்லாதவன்'' படத்துக்கும் தூயவன் வசனம் எழுதினார்.

    ஜாவர் சீதாராமன் எழுதிய "பணம், பெண், பாசம்'' என்ற கதையை நடிகர் முத்துராமன் படமாகத் தயாரித்தார். அந்தப் படத்துக்கு தூயவன் வசனம் எழுதினார்.

    நடிகர் முத்துராமன், தூயவனின் நெருங்கிய நண்பர். அவர், படப்பிடிப்புக்காக ஊட்டிக்குச் சென்றிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று மரணம் அடைந்தார்.

    இதேபோல், தூயவனுக்கு ஆதரவு அளித்து வந்த சின்னப்பா தேவரும் திடீர் என்று காலமானார். இந்த இரு மரணங்களும், தூயவனை வெகுவாக பாதித்தன.

    இதன் பிறகு, வசனம் எழுதுவதைக் குறைத்துக் கொண்டு, படத்தயாரிப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

    நண்பர் சக்திவேலுடன் இணைந்து "எஸ்.டி.கம்பைன்ஸ்'' என்ற பட நிறுவனத்தை தொடங்கி, "விடியும் வரை காத்திரு'' என்ற படத்தை தயாரித்தார். இதன் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை கே.பாக்யராஜ் ஏற்றதுடன் கதாநாயகனாகவும்

    நடித்தார்.நகைச்சுவை கலந்த கதாநாயகனாக பாக்யராஜ் முத்திரை பதித்து வந்த காலக்கட்டத்தில், "ஆன்டி ஹீரோ''வாக - அதாவது வில்லன் மாதிரியான கதாபாத்திரத்தில் "விடியும் வரை காத்திரு'' படத்தில் நடித்தார். அதை ரசிகர்கள் ஏற்காததால், படம் சுமாராகவே

    ஓடியது.கார்த்திக் கதாநாயகனாக நடிக்க "கேள்வியும் நானே பதிலும் நானே'' படத்தை தூயவன் தயாரித்தார். இந்தப்படம் சரியாக ஓடவில்லை.

    எம்.ஜி.ஆர். நடிகராக இருந்த காலக்கட்டத்தில் அவருக்காகவே ஒரு கதையைத் தயாரித்து வைத்திருந்தார், தூயவன். அந்தக் கதை எம்.ஜி.ஆருக்கும் பிடித்திருந்தது. அவர் தேர்தலில் வென்று முதல்-அமைச்சர் ஆகிவிட்டதால், அதன் பிறகு நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார்.

    அந்தக் கதையை, ரஜினிகாந்துக்கு ஏற்றவாறு மாறுதல்கள் செய்து அவரிடம் சொன்னார் தூயவன். கதை அவருக்கு பிடித்துப்போயிற்று. "படம் எடுங்கள். நான் கால்ஷீட் தருகிறேன்'' என்றார்.

    அந்தப்படம்தான் "அன்புள்ள ரஜினிகாந்த்.'' எஸ்.டி.கம்பைன்ஸ் பேனரில் தூயவனும், துர்க்கா தமிழ்மணியும் தயாரித்தனர். தூயவன் வசனம் எழுதினார். நட்ராஜ் டைரக்ட் செய்தார்.

    1984 ஆகஸ்டு 2-ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

    இதுகுறித்து, தூயவன் மனைவி ஜெய்புன்னிசா கூறியதாவது:-

    "ரஜினி சார் நடித்த "தாய்வீடு'', "அன்னை ஓர் ஆலயம்'', "அன்புக்கு நான் அடிமை'', "ரங்கா'' முதலிய படங்களுக்கு என் கணவர் வசனம் எழுதினார். அப்போது இருவரும் நட்புடன் பழகினர். என் கணவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஒரு படம் பண்ணிக்கொடுக்க சூப்பர் ஸ்டார் சம்மதித்தார். அப்போது என் கணவர் சொன்ன கதைதான் "அன்புள்ள ரஜினிகாந்த்.''

    கதை ரஜினிக்கு பிடித்து விட்டது. பண விஷயம் பற்றி எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல் உடனே கால்ஷீட் கொடுத்தார்.

    படம் தயாரிக்க பணம் வேண்டுமே என்ற கேள்வி எழுந்தபோது, ஜி.வி.சி.ஆர்.நடராஜன் என்ற பைனான்சியரிடம் என் கணவரை பட அதிபர் கலைஞானம் அறிமுகம் செய்து வைத்தார்.

    உடனடியாக நடராஜன், பட உரிமையை வாங்கிக்கொண்டு ரூ.25 லட்சம் கொடுத்தார். "கணபதி வேல் முருகன் கம்பைன்ஸ்'' என்ற பேனரில், "அன்புள்ள ரஜினிகாந்த்'' தயாராகியது. ரஜினிகாந்த், அம்பிகா ஆகியோருடன், குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்தார். இப்படம் நூறு நாட்கள் ஓடியது.

    சூப்பர் ஸ்டார் ரஜினி சார் செய்த உதவியை எங்கள் குடும்பம் என்றும் மறவாது.''

    இவ்வாறு ஜெய்புன்னிசா கூறினார்.

    ஆர்.சுந்தரராஜன் டைரக்ஷனில் தூயவன் தயாரித்த "வைதேகி காத்திருந்தாள்'' அற்புதமான படம். இதில், அடிதடி இல்லாத குணச்சித்திர வேடத்தில் விஜயகாந்த் வாழ்ந்து காட்டினார்.

    விதவைப் பெண்ணாக நடித்த ரேவதி, "அழகு மலராட...'' நடனக் காட்சியில் மெய்சிலிர்க்கச் செய்தார்.

    1984 அக்டோபர் 23-ந்தேதி வெளியான இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

    விஜயகாந்த் - ராதிகா நடித்த "நானே ராஜா நானே மந்திரி'', கவுண்டமணி கதாநாயகனாக நடித்த "தலையாட்டி பொம்மைகள்'' ஆகிய படங்களும் தூயவன் தயாரித்தவை.

    தூயவன் கடைசியாகத் தயாரித்த படம் "உள்ளம் கவர்ந்த கள்வன்.'' இந்தியில் வெளியான "சிட்சோர்'' படத்தின் உரிமையைப் பெற்று, அக்கதையை தமிழில் தயாரித்தார்.

    படம் முடிவடையும் தருணத்தில், நாகப்பட்டினத்துக்கு சென்றிருந்தபோது, 1987 ஜுலை 11-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டு, திடீரெனக் காலமானார்.

    அப்போது அவருக்கு வயது 41 தான்.

    தூயவன்-ஜெய்புன்னிசா தம்பதிகளுக்கு பாபு தூயவன் (இக்பால்) என்ற மகனும், யாஸ்மின் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பாபு தூயவன் "பி.காம்'' படித்தபின் திரைப்படக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்.

    டெலிவிஷன் சீரியல்களை தயாரிப்பதில் புகழ் பெற்றவர். "அபர்ணா'' அவர் உருவாக்கிய டெலிவிஷன் சீரியல்களில் ஒன்று.

    ஜெய்புன்னிசா தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார். 
    பல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய "தூயவன்'', ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்து பிறகு பட உலகில் புகுந்தவர்.
    பல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய "தூயவன்'', ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்து பிறகு பட உலகில் புகுந்தவர். "வைதேகி காத்திருந்தாள்'', "அன்புள்ள ரஜினிகாந்த்'' உள்பட சில படங்களை சொந்தமாகத் தயாரித்தவர்.

    திரை உலகில் புகுந்த எழுத்தாளர்களில் பெரும்பாலோர் தோல்வியைத்தான் தழுவினர். வெற்றி பெற்ற சில எழுத்தாளர்களில் ஒருவர்

    "தூயவன்.''இவர் நாகூரைச் சேர்ந்தவர். இயற்பெயர் எம்.எஸ்.அக்பர். இவருடைய தந்தை ஷாகு ஒலியுல்லா, அந்தக் காலத்திலேயே ஆங்கில இலக்கியத்தில் "பி.ஏ'' பட்டம் பெற்று, தஞ்சையில் ரிஜிஸ்திரார் ஆகப் பணியாற்றியவர்.

    ஐந்து பெண்களுக்கு மத்தியில் பிறந்த ஒரே ஆண் வாரிசு என்ற முறையில், தூயவன் மீது பெற்றோர் மிகுந்த அன்பு செலுத்தினர்.

    தூயவன், பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தந்தை திடீரென்று மறைந்ததால், படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    இளமையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார், தூயவன். நாகப்பட்டினம், இலக்கியவாதிகள் நிறைந்த ஊர். அப்துல் வகாப் சாப் என்ற ஆன்மீக இலக்கியவாதியின் தொடர்பு கிடைத்ததால், தன் எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள முடிந்தது.

    "தினத்தந்தி'', "ராணி'', "ஆனந்தவிகடன்'', "தினமணி கதிர்'' உள்பட பல பத்திரிகைகளில் தூயவனின் கதைகள் பிரசுரமாகி வந்தன.

    1967-ம் ஆண்டில், "ஆனந்த விகடன்'' அதன் முத்திரைக் கதைகளுக்கு வழங்கி வந்த நூறு ரூபாய் பரிசுத்தொகையை, 500 ரூபாயாக உயர்த்தியது.

    "தூயவன்'' எழுதிய "உயர்ந்த பீடம்'' என்ற கதை, 500 ரூபாய் பரிசு பெற்ற முதல் முத்திரைக் கதையாகும். இதனால், தமிழ்நாடு முழுவதும் புகழ் பெற்ற எழுத்தாளரானார்.

    அது, டெலிவிஷன் இல்லாத காலம். மேடை நாடகங்கள் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தன. மேஜர் சுந்தரராஜன் மேடையிலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்கினார்.

    தூயவன் சென்னை சென்று, மேஜர் சுந்தரராஜனை சந்தித்தார். தன்னை ஒரு எழுத்தாளர் என்று மட்டும் அறிமுகப்படுத்திக் கொண்டு, கதை-வசனம் எழுதும் வாய்ப்பு கேட்டார்.

    உடனே மேஜர், "நீங்கள் எல்லாம் என்னப்பா எழுதுகிறீர்கள்! ஆனந்த விகடனில் தூயவன் என்ற எழுத்தாளர் முத்திரைக்கதை எழுதியிருக்கிறார். கதை என்றால் அப்படி எழுதவேண்டும்! என்ன நடை... என்ன எழுத்து!'' என்றார்.

    அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்த தூயவன், "நீங்கள் பாராட்டுகிற அந்தக் கதையை எழுதிய தூயவன் நான்தான்!'' என்று நிதானமாகக் கூறினார்.

    மலைத்துப்போய் விட்டார், மேஜர். பிறகு தூயவனை உள்ளே அழைத்துச் சென்று, அவரைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டறிந்தார். மேடை நாடகம் எழுதும் வாய்ப்பை அளித்தார்.

    மேஜருக்காக "தீர்ப்பு'' என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார், தூயவன்.

    இதே சமயத்தில் ஏவி.எம்.ராஜனும் தூயவனுடன் தொடர்பு கொண்டு நாடகம் கேட்டார். அவருக்காக தூயவன் எழுதிய நாடகம் "பால்குடம்.'' இந்த நாடகம்தான் முதலில் அரங்கேறியது.

    "தீர்ப்பு'' நாடகத்தின் 100-வது நாள் விழாவுக்கு, எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார்.

    "நாடகம் மிகச்சிறப்பாக உள்ளது. இந்து சமய கோட்பாடுகளில் எவ்வித பிழையும் நேரிடாமல், மிகவும் நுட்பமாக ஆராய்ந்து நாடகத்தை எழுதியிருப்பவர் ஒரு இஸ்லாமிய சகோதரர் என்பது, ஆச்சரியமான விஷயம்'' என்று எம்.ஜி.ஆர். பாராட்டிப்பேசி, தூயவனுக்கு கெடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

    "பால்குடம்'' நாடகமும், அரங்கு நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக நடைபெற்று வந்தது. அப்போதுதான் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா முதல்-அமைச்சராகப் பதவி ஏற்றிருந்தார். நிதி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் இந்த நாடகத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு தூயவனுக்கு பரிசு வழங்கினார்.

    இந்த சமயத்தில் தூயவனுக்குத் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் விரும்பினர். தனக்கு மனைவியாக வரும் பெண், இலக்கியத் துறையைச் சேர்ந்தவளாக - எழுத்தாளராக இருக்க வேண்டும் என்று தூயவன் விரும்பினார்.

    "தினமணி கதிர்'' வார இதழின் ஆசிரியராக "சாவி'' இருந்த நேரம் அது. "தூயவன்'' எழுதிய "சிவப்பு ரோஜா'' என்ற கதை, பரிசுக் கதையாக அதில் பிரசுரமாகியிருந்தது. அதே இதழில், "செல்வி'' என்ற பெண் எழுத்தாளர் எழுதிய கதையும் பிரசுரமாகியிருந்தது.

    "செல்வி'' என்ற புனைப்பெயரில் அந்தக் கதையை எழுதியவர் ஒரு முஸ்லிம் பெண்மணி என்பதும், பெயர் கே.ஜெய்புன்னிசா என்பதும் தூயவனுக்குத் தெரிந்தது.

    உடனே தன் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். தூயவனின் தாயார், பெரியம்மா, அக்கா, மாமா ஆகியோர் கோவைக்குச் சென்று, பெண்ணைப் பார்த்தார்கள்.

    இரு தரப்பினருக்கும் பிடித்துப்போகவே, தூயவன் என்கிற எம்.எஸ்.அக்பருக்கும், ஜெய்புன்னிசாவுக்கும் 27-9-1968-ல் கோவையில் திருமணம் நடைபெற்றது.

    திருமணத்துக்கு ஏவி.எம்.ராஜன் - புஷ்பலதா, மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர்.

    திருமணம் நடந்தவேளை, பட வாய்ப்புகள் தூயவனைத் தேடி வந்தன.

    நடிகை ஸ்ரீபிரியா, நடிகை லதாவின் தம்பி ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜ்குமாரும் நடிகர் ஆவார். "காஷ்மீர் காதலி'' உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

    நடிகை ஸ்ரீபிரியா, நடிகை லதாவின் தம்பி ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜ்குமாரும் நடிகர் ஆவார். "காஷ்மீர் காதலி'' உள்பட சில படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீபிரியா -ராஜ்குமார் காதல் திருமணத்துக்கு, இரு குடும்பத்தினரின் சம்மதத்தை பெறச் செய்வதில் முக்கிய பங்கு எடுத்துக் கொண்டவர் நடிகை ராதிகாவின் தாயாரான கீதா. இலங்கையைச் சேர்ந்த கீதா, தமிழ்நாட்டுக்கு வந்து நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவியானார்.

    ராதிகா பிறந்த நேரத்தில் மைலாப்பூர் வாரன் ரோட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். ஸ்ரீபிரியாவின் தாயார் அந்த குடியிருப்புக்கு சொந்தக்காரர். அடிக்கடி தன் சொந்த பூமியான இலங்கைக்கு சென்றுவந்த கீதா, தன் பிள்ளைகளுக்கு புது டிரெஸ் எடுத்து வருவார். அப்போது ஸ்ரீபிரியாவுக்கும் அவர் அக்காவுக்கும்கூட புதிய துணிகள் எடுத்து கொடுத்தார். இப்படி ஒரு குடும்பமாய் பழக நேர்ந்த அந்த நாட்களை நினைவு கூர்ந்தார், ஸ்ரீபிரியா.

    "ராதிகா பிறந்திருந்த நேரத்தில் எனக்கு 3 வயது. இந்த வகையில் எனக்கும் ராதிகாவுக்கும் 3 வயது வித்தியாசம். இந்த வகையில் நான் வளர்ந்த அதே இடத்தில்தான் ராதிகாவும் வளர்ந்தார். சிறுவயதிலேயே நாங்கள் நல்ல தோழிகளாக இருந்தோம். எங்கள் நட்பு பிரிக்க முடியாமல் இறுகிய நேரத்தில் கீதாம்மா மறுபடியும் குடும்பத்துடன் இலங்கைக்கு போய்விட்டார்கள். ராதிகா என்னைப் பிரிந்த இழப்பு, என் சின்ன வயதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

    நானும் வளர்ந்து நடிக்க வந்தேன். படங்களும் `ஹிட்'டாகி வளர்ந்த நிலையில், "ஆட்டுக்கார அலமேலு'' படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா என்னிடம், "ராதிகான்னு ஒரு புதுப்பொண்ணு இலங்கையில் இருந்து வந்திருக்கு. இப்ப பாரதிராஜாவின் "கிழக்கே போகும் ரெயில்'' படத்துல நடிச்சிக்கிட்டிருக்கு. அந்தப்படத்தில் அவர் பாடற "பூவரசம்பூ பூத்தாச்சு'' பாட்டுக்கு நான்தான் மாஸ்டர்'' என்றார். அப்போதே என் சிறு வயதுத்தோழி மறுபடியும் கிடைத்து விட்ட சந்தோஷத்தை எனக்குள் உணர்ந்தேன். மறுபடி எங்கள் குடும்பங்கள் கைகோர்த்தபோது முன்பிருந்த அதே அன்பு மீண்டும் நிரந்தரமாகியது.

    "ராதிகா என் தங்கச்சி'' என்று நான் சொல்லிக் கொள்கிற அளவுக்கு நாங்கள் ஒரே குடும்பம் மாதிரி ஆனோம். ராஜ்குமாரை (கணவர்) நான் விரும்பிய நேரத்தில் எங்கள் வீட்டில் ராஜ்குமார் பற்றி நல்லவிதமாய் சொல்லி எங்கள் காதலை திருமணம் வரை கொண்டு வந்தவர் கீதாம்மாதான்.

    எனக்கு திருமணமாகி 6-வது மாதத்தில் அபார்ஷன் ஆனது. முதல் குழந்தை இப்படி ஆகிவிட்ட ஒரு தாய்மையின் வேதனையை அப்போது அனுபவித்தேன். இந்த சமயத்தில் ராதிகாவின் தம்பி மோகனின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. பிறந்த அந்தக் குழந்தையை குளிக்க வைத்து கையில் வாங்கிய கீதாம்மா அதைக் கொண்டு வந்து என் கையில் கொடுத்தார். "இதே மாதிரி ஒரு குழந்தை அடுத்த வருஷம் இதே நேரம் உன் கையிலும் இருக்கும்'' என்று `அருள் வாக்கு' மாதிரி சொன்னார்.

    அருள்வாக்கு என்று ஏன் சொன்னேன் என்றால், அவர் சொன்னதுபோலவே நடந்தது. ஒரே வருடத்திற்குள் என் மகள் சிநேகா பிறந்து என் தாய்மையை அர்த்தமுள்ளதாக்கினாள்.

    குழந்தையை இழந்த தாயிடம் அந்த மாதிரி சமயங்களில் சென்டிமென்டாக யாருமே தங்கள் வீட்டு குழந்தையை கொடுக்கமாட்டார்கள். ஆனால் அந்த மாதிரியான தடைகளையெல்லாம் எண்ணிக் கொள்ளாமல் தன் பேரக்குழந்தையை மகனிடம் கொடுப்பதற்கு முன்பு என்னிடம் கொடுத்து வாழ்த்தினாரே, அந்த அன்பு யாருக்கு வரும்? இப்போதும் எங்கள் இரு குடும்பத்தினரிடையே அன்பு அப்படியே நீடிக்கிறது.'' நெகிழ்ச்சியுடன் சொன்னார், ஸ்ரீபிரியா.

    சினிமாவில் நடித்து புகழ் பெற்ற நிலையில், திருமணத்துக்குப் பின் 10 வருடங்கள் நடிக்காமல் இருந்தார் ஸ்ரீபிரியா. அதற்குப் பிறகு, அவர் தொட்டது சின்னத்திரை சீரியல்கள். "விடுதலை'', "மறக்க முடியுமா?'', "சாரதா'', "விக்ரமாதித்தன்'', "சிந்துபாத்'' என சீரியல்களை தொடர்ந்தவர், இப்போதும் "இம்சை அரசிகள் தொடரை தயாரித்து நடித்தும் வருகிறார்.

    இந்த பிசியிலும் தோழி ராதிகா தயாரித்த "சின்ன பாப்பா பெரிய பாப்பா'' காமெடித் தொடரில் "சின்ன பாப்பா''வாக வந்து காமெடி செய்து சின்னத்திரை வட்டாரத்திலும் நடிப்புக்காக பெயர் பெற்றார் ஸ்ரீபிரியா.

    முதலில் இந்தத் தொடரை தயாரிக்க இருந்தவர் ஸ்ரீபிரியா. இந்தியில் வெளியான "தூது மேமே'' நகைச்சுவைத் தொடர், ரொம்பவும் பிரபலமானது. இந்த தொடரை பார்க்கும் ரசிகர்கள் அதை இப்பவும் முதலிடத்தில் வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு மவுசு குறையாமல் இப்போதும் அந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

    இந்த தொடர் பற்றி கேள்விப்பட்ட ஸ்ரீபிரியா அதை பார்த்தார். பார்த்ததுமே வெற்றி பெறக்கூடிய தொடர் என்பது தெரிந்து தமிழில்   அதை தயாரிக்கும் உரிமைக்கு முயற்சித்தார். அப்போது தான் கொஞ்சம் முன்னதாக அந்த உரிமையை ராதிகா பெற்றுக்கொண்டதை அறிந்தார். இதன் பிறகு தோழிகள் சந்தித்தார்கள். "நான் தயாரிக்கிறேன். நீங்கள் நடியுங்கள்'' என்று ராதிகா சொல்ல, தொடரில் "சின்னபாப்பா''வாக வந்து காமெடி துவம்சம் செய்தார், ஸ்ரீபிரியா.

    இந்த "சின்ன பாப்பா'' கேரக்டரில் தொடர்ந்து 2 வருடம் நடித்தார். பிறகு சொந்த தொடர் தயாரிப்பில் ஈடுபட்டதால், நடிப்புக்கு நேரமின்றி விலகிக்கொண்டார். அதன் பிறகு "சின்ன பாப்பா'' கேரக்டரில் ஊர்வசியின் சகோதரி கல்பனாவும், அவரைத் தொடர்ந்து சீமாவும் நடித்தார்கள்.

    ஸ்ரீபிரியா "இம்சை அரசிகள்'' தொடரை விரைவில் முடிக்கிறார். அடுத்து புராணப் பின்னணியில் ஒரு தொடரை உருவாக்கும் வேலையில் பிசியாக இருக்கிறார். இதற்காக பெரியபுராணத்தை படித்து வருகிறார்.

    சொந்த தொடர் தவிர, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் "ஆனந்தம்'' தொடரிலும் நடித்து வருகிறார். இதுபோக தோழி ராதிகா தயாரிக்கும் "கண்ணாமூச்சி ஏனடா'' படத்தில் தோழி கேட்டுக் கொண்டதற்காக நடிக்கிறார். "எனக்கு கணவர், குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பு இருப்பதால் மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தாக வேண்டும். இந்த கண்டிஷனுக்கு தோழி ஒத்து வந்ததால் அவர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். "ஆனந்தம்'' தொடரிலும் மாலை 5 மணிக்குள் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்து விடுவார்கள். இப்படி குடும்பத்தின் பொறுப்புக்கு பங்கம் ஏற்படாதபடி நடிக்கிறேன்'' என்கிறார்.

    ஸ்ரீபிரியாவின் மகள் சிநேகா இப்போது சர்ச் பார்க்கில் 9-வது படிக்கிறார். அம்மா படித்த அதே பள்ளியில் மகளும் படிக்கிறார் என்பதில் இந்த அம்மாவுக்குள் நிறையப் பெருமை. மகன் அர்ஜுன் `ஷேர்வுட் ஹார்ட்' பள்ளியில் 5-வது படிக்கிறான்.

    "பிள்ளைகள் உங்கள் மாதிரி கலைத்துறைக்கு வருவார்களா?'' ஸ்ரீபிரியாவைக் கேட்டால், "பிள்ளைகள் விஷயத்தில், பெற்றோர் எந்த விருப்பத்தையும் திணிக்கக் கூடாது. கணவர் ராஜ்குமாரும் நானும் கலைத்துறையில் இருந்தாலும், பிள்ளைகள் விஷயத்தில் அவர்களின் விருப்பம் எதுவோ அதுதான் எங்கள் விருப்பமாகவும் இருக்கும். என் அக்காவின் மகன் சிவாஜி, திடீரென நடிக்க ஆசைப்பட்டான்.

    அக்கா மீனா ராம்குமார், அம்மா கிரிஜா பக்கிரிசாமி, தம்பி சந்திரகாந்த் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகும் "சிங்கக்குட்டி'' படத்தில் அவன்தான் ஹீரோ, டைரக்டர் வெங்கடேஷ் இயக்கத்தில் படம் வளர்ந்து வருகிறது. எந்த ஆர்வமும் தானாக வந்தால் அதில் அதிக கருத்தூன்றி வெற்றி பெற முடியும்.''

    ஒரு அம்மாவுக்கு உரிய நெகிழ்ச்சியுடனே சொல்லி முடித்தார், ஸ்ரீபிரியா.
    தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீபிரியா வியந்து பார்த்த ஒரு நடிகை லட்சுமி. அவருடன் 'அவன் அவள் அது'' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு டைரக்டர் முக்தா சீனிவாசன் மூலம் வந்தபோது, ஸ்ரீபிரியாவுக்கு அளவு கடந்த சந்தோஷம்.

    தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீபிரியா வியந்து பார்த்த ஒரு நடிகை லட்சுமி. அவருடன் 'அவன் அவள் அது'' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு டைரக்டர் முக்தா சீனிவாசன் மூலம் வந்தபோது, ஸ்ரீபிரியாவுக்கு அளவு கடந்த சந்தோஷம். லட்சுமியின் கருவை சுமந்து குழந்தையைப் பெற்றுக்கொடுக்கும் "வாடகைத் தாயாக'' ஸ்ரீபிரியா நடித்துள்ளார். வெள்ளி விழா கொண்டாடிய படம் இது.

    இந்தப் படத்தில் நடிக்க ஸ்ரீபிரியாவுக்கு அழைப்பு வந்தபோது, படத்தில் லட்சுமியும் இருக்கிறார் என்பது தெரிந்து ரொம்பவும் மகிழ்ந்திருக்கிறார். அந்த நேரம் ஏற்பட்ட பரவசத்தை ஸ்ரீபிரியாவே பகிர்ந்து கொள்கிறார்:-

    "எனக்கு லட்சுமியை ரொம்ப பிடிக்கும். அவங்களோட "சட்டைக்காரி'' படத்தையெல்லாம் ரொம்ப ரசித்துப் பார்த்திருக்கிறேன். நடிப்பில் தனித்துவம் வாய்ந்தவர். அவருடன் நடிக்கப் போகிறேன் என்றதும் எனக்கு வேண்டியவர்களே கொஞ்சம் பயமுறுத்தினார்கள். "லட்சுமி பிரமாதமான நடிகை. அவர் கூட நடிக்கும்போது நீ காணாமல் போயிடப்போறே'' என்று பயமுறுத்தினார்கள். ஆனால் படத்தில் நடிக்கும்போது நட்பில் நாங்கள் ரொம்பவே ஒன்றிப் போனோம். படத்தில் 'ஆச்சி'யும் இருந்தார். மூன்று பேரும் செட்டில் இருந்து விட்டால் அரட்டை! அரட்டை! ஒரே அரட்டைதான்!

    ஒரு கட்டத்தில் எங்கள் லூட்டியை தாங்கிக்கொள்ள முடியாத டைரக்டர் முக்தா சீனிவாசன், "உங்களை கட்டி மேய்க்க என்னால் முடியவில்லை. கடவுள் சத்தியமா உங்க மூணு பேரையும் ஒண்ணா வெச்சு இனிமே படம எடுக்கவே மாட்டேன். எனக்கு வேலையே நடக்க மாட்டேங்குது'' என்றார்.

    எந்த நேரத்தில் அப்படிச் சொன்னாரோ அதன் பிறகு நாங்கள் மூன்று பேரும் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்க முடியாமலே போய்விட்டது. ஒன்று நானும் ஆச்சியும் இருப்போம். இல்லேன்னா லட்சுமியும், நானும் இருப்போம். எப்படியோ டைரக்டர் முக்தா சீனிவாசன் சொன்னது நடந்துவிட்டது.''

    இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.

    டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சிவகுமார் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்த முதல் படம் "ஆண்பிள்ளை சிங்கம்.''

    திட்டமிட்டு படமாக்கும் ஆற்றல் இவரிடம் இருப்பதை ஸ்ரீபிரியா தெரிந்து கொண்டார். தேவையில்லாமல் நடிகர் - நடிகைகளை காக்க வைக்கிற பழக்கமும் இவருக்கு இருந்ததில்லை. தொழிலில் இவர் காட்டிய ஈடுபாடு ஸ்ரீபிரியாவை பெரிய அளவில் கவர்ந்திருக்கிறது. தொடர்ந்து இவரது படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். இப்படி அவர் "ஒரு கொடியில் இரு மலர்கள்'', "சொந்தமடி நீ எனக்கு'', "எனக்குள் ஒருவன்'', "மோகம் முப்பது வருஷம்'' என படங்களை தொடர்ந்தார்.

    இதில், "மோகம் முப்பது வருஷம்'' படத்தில் மட்டும், தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் ஸ்ரீபிரியாவுக்கு திருப்தி இல்லை. தைரியமாக, "இந்த கேரக்டரில் நான் நடிக்கத்தான் வேண்டுமா?'' என்று டைரக்டர் எஸ்.பி.முத்துராமனிடமே கேட்டும்விட்டார்.

    இந்த நேரத்தில், ஸ்ரீபிரியாவுக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது. அதற்காக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது, இப்படத்துக்கு திரைக்கதை - வசனம் எழுதிய மகேந்திரன் அவரை சந்தித்தார். "படத்தில் 3 பெண் கேரக்டர்கள் இருந்தாலும் நீங்கள் நடிக்கிற பாமா கேரக்டரோடுதான் ரசிகர்கள் ஒன்றிப் போவார்கள். படம் வெளிவரும்போது ரசிகர்கள், பாமா பற்றிதான் பேசிக்கொண்டு வருவார்கள். அந்த அளவுக்கு வித்தியாசமும் அழுத்தமும் கொண்ட கேரக்டர்'' என்று விளக்கம் தந்தார்.

    அதன் பிறகு பாமா கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டார் ஸ்ரீபிரியா. அவர் குணமானதும் படப்பிடிப்பு தொடங்கியது. படம் ரிலீசானபோது மகேந்திரன் சொன்னது போலவே நடந்தது. படம் பார்த்த ரசிகர்கள் பாமா கேரக்டர் பற்றியே பேசினார்கள்.

    ஸ்ரீபிரியாவை கவர்ந்த இன்னொரு இயக்குனர் டி.என்.பாலு. டைரக்டர் ராமண்ணாவிடம் உதவியாளராக இருந்தபோதே "நான்'', "மூன்று முகம்'' போன்ற வெற்றிப்படங்களுக்கு கதை எழுதியவர். இவர் டைரக்டரானதும் இயக்கிய "சட்டம் என் கையில்'' படத்தில் கமலஹாசன் கதாநாயகன். அவருக்கு ஜோடி ஸ்ரீபிரியா.

    டி.என்.பாலு பற்றி ஸ்ரீபிரியா இப்படிச் சொன்னார்:-

    "பாடல் காட்சியின்போது எனக்கு சரியாக வாயசைக்க வராது என்பதை கண்டுபிடித்து திருத்தியவர் இவர்தான். பாட்டு சீனில் வாயை ஒரு மாதிரி வைத்துக் கொண்டிருப்பேன். 'இப்படிச் செய்தால் நீ பாடுகிற மாதிரி திரையில் எப்படித் தெரியும்? முதலில் அதை சரி பண்ணு' என்றார். ஒரு ஆர்ட்டிஸ்ட்டிடம் இருக்கும் திறமையை பட்டியலிட்டு பாராட்டும் குணம் இருந்த அளவுக்கு, குறைகளை பக்குவமாக சொல்லி சரி செய்யும் பண்பும் இவரிடம் இருந்தது. இவரது "ஓடி விளையாடு தாத்தா'' காமெடிப்படம் எனக்கு காமெடியில் ரொம்ப நல்ல பெயர் தேடித் தந்தது. "நல்லதுக்கு காலமில்லை'' படத்திலும், எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தார்.

    கமல் நடித்த "சங்கர்லால்'' படத்தை, இவர் இயக்கியபோதுதான் எனக்கும் அவருக்கும் சின்ன பிரச்சினை. படத்தில் கமல் ஜோடியாக என்னை ஒப்பந்தம் செய்தவர், நான் இரண்டொரு தடவை தேதிகளை மாற்றினேன் என்பதற்காக, உணர்ச்சிவசப்பட்டு கவுன்சிலில் என் மீது புகார் கொடுத்துவிட்டார். பிறகு பிரச்சினை சுமூகமாக தீர்ந்து போயிருந்தாலும், நாங்கள் சந்திக்கும் வாய்ப்பு இல்லாது போயிற்று.

    திடீரென அவர் இறந்தபோது, மனது தாங்காமல் அஞ்சலி செலுத்தப் போனேன். அப்போது என்னை கட்டிக்கொண்டு அழுத அவர் மனைவி, "அய்யோ அது (ஸ்ரீபிரியா) எவ்வளவு நல்ல பொண்ணு. நான் அவசரப்பட்டு புகார் கொடுத்து அது மனதை புண்படுத்தி விட்டேனேன்னு என்கிட்ட அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பாரே!'' என்று அழுதார். ஏற்கனவே சோகத்தில் இருந்த நான், அவங்க அப்படிச் சொன்னதும் உடைந்து கதறிவிட்டேன்.''

    இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.

    இந்தியில் சஞ்சீவ்குமார்- ஷர்மிளா தாகூர் இணைந்து நடித்த படம் "மாசூன்.'' இந்தப் படத்தில் நடித்த இருவருக்குமே சிறந்த நடிப்புக்காக தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தை தமிழில் "வசந்தத்தில் ஓர் நாள்'' என்ற தலைப்பில் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்ரீபிரியா நடித்து முடித்தபோது கைதட்டி பாராட்டினார்.

    "நிஜமாகவே உயரத்தில் மட்டுமல்ல... பண்பிலும் உயர்ந்தவர் அவர்'' என்று திருலோகசந்தரைப் பாராட்டிய ஸ்ரீபிரியா, மேலும் சொன்னார்:-

    "ஏவி.எம். ஸ்டூடியோவில் சின்னத்திரை தொடர் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தேன். நான் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த இடத்தைத் தாண்டி ஒரு கார் வேகமாக சென்றது. திடீரென அந்தக் கார் நிறுத்தப்பட்டு, அதில் இருந்து உயரமான மனிதர் ஒருவர் என்னை நோக்கி வந்தார். பார்த்தால் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர்! என்னைப் பார்த்ததும், "என்னம்மா எப்படி இருக்கீங்க?'' என்று பாசத்துடன் விசாரித்தார். என்னைப் பார்த்ததும், வந்த வேலையை கூட தள்ளிவைத்துவிட்டு தேடிவந்து நலம் விசாரிக்கும் அந்த மாதிரியான அன்பை யாரிடம் எதிர்பார்க்க முடியும்?

    ஒருமுறை அவர் இயக்கிய, சிவாஜி - கே.ஆர்.விஜயா நடித்த "பாரத விலாஸ்'' படத்தை, டிவி.யில் பார்த்தேன். தேச ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உணர்ச்சிப்பூர்வமாக காட்சிகளை அவர் அமைத்திருந்தார். மனம் நெகிழ்ந்துபோய், உடனே அவர் போன் நம்பரை தேடிப்பிடித்து பாராட்டினேன். "படம் இயக்கி இத்தனை வருஷம் கழித்தும் பாராட்டுகிற பண்பு உன்போன்ற சிலருக்கு இருப்பதை நினைத்தாலே பெருமையாக இருக்கிறது'' என்று மகிழ்ச்சி தெரிவித்தார். "தெய்வமகன்'' போன்ற படங்கள் எப்போதும் சினிமாவில் அவர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும்'' என்றார், ஸ்ரீபிரியா.
    கமலஹாசனும், ஸ்ரீபிரியாவும் நடித்த "வாழ்வே மாயம்'' பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

    கமலஹாசனும், ஸ்ரீபிரியாவும் நடித்த "வாழ்வே மாயம்'' பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

    தெலுங்கில், 'பிரேமபாசம்' என்ற பெயரில் காதலுக்கு புது இலக்கணம் சொன்ன படம் பெரும் வெற்றி பெற்றது. ஒரு அழகான இளம் பெண்ணை விரட்டி விரட்டி காதலிக்கும் இளைஞன் ஒருவன், அவள் காதல் கிடைக்கப் பெற்ற பிறகு அவளை உதாசீனம் செய்கிறான். காதலியை பல்வேறு கட்டங்களில் வெறுப்பேற்றி, அவளை வேறொரு திருமணமும் செய்ய வைத்து விடுகிறான். அதன் பிறகுதான் அவனுக்கு ரத்தப் புற்று நோய் வந்த விஷயமே காதலிக்கு தெரியவருகிறது.

    இந்த உணர்ச்சிபூர்வ காதல் கதையை தமிழில் எடுக்க விரும்பினார், பாலாஜி. அதுவே கமல், ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா நடிக்க "வாழ்வே மாயம்'' என்ற பெயரில் படமானது.

    இந்தப் படத்தில் கதாநாயகி என்ற இடத்தில் ஸ்ரீதேவிதான் இருந்தார். நோயுற்ற பிறகு தன்னைத் தேடிவரும் நாயகனுக்கு ஆதரவும், அடைக்கலமும் கொடுக்கும் 'விலை மாது' கேரக்டரில் நடித்திருந்தார், ஸ்ரீபிரியா.

    இந்தக் கேரக்டரிலும் நடிப்பது தொடர்பாக முதலில் தன் அதிருப்தியை வெளியிட்டார், ஸ்ரீபிரியா. ஆனால், படத்தில் ஸ்ரீதேவி கேரக்டருக்கு இணையாக அவரும் பேசப்பட்டார்.

    இந்தப் படத்தில் கமலின் காதலியாக வரும் ஸ்ரீதேவியும், விலைமாது கேரக்டரில் வரும் ஸ்ரீபிரியாவும் சந்திக்கும் இடத்தில் ஸ்ரீபிரியா பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டல் கிடைக்கும்படி செய்திருந்தார், வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன். ஏற்கனவே "பில்லா'' படத்தில் ஸ்ரீபிரியாவின் கேரக்டரை ஏ.எல்.நாராயணன் மெருகேற்றியிருந்தார். இந்தப் படத்தில் அது இன்னும் அதிகமாகப் பளிச்சிட்டது.

    இந்தப் படத்தில் நடித்த வகையில் ஸ்ரீபிரியாவுக்குள் இன்னொரு சந்தோஷமும் இருக்கிறது. பாலாஜி தயாரிக்கும் எல்லாப் படங்களிலுமே கதாநாயகன் பெயர் 'ராஜா' என்றும் கதாநாயகி பெயர் 'ராதா' என்றும் இருக்கும். "வாழ்வே மாயம்'' படத்தில், கதாநாயகன் ராஜாவாக கமல் நடித்தார். 'ராதா' கேரக்டரில் ஸ்ரீபிரியாதான் நடித்தார். ஸ்ரீதேவி, 'தேவி' என்ற கேரக்டரில் நடித்தார். இப்படி பாலாஜி பட 'நாயகி' பெயரில் நடிக்க நேர்ந்ததே பெரிய திருப்திதான் ஸ்ரீபிரியாவுக்கு.

    அடுத்தடுத்து 2 படங்களில் பெரிய கேரக்டர் அமையாததால், தயாரிப்பாளர் பாலாஜி தனது புதிய தயாரிப்பில் ஸ்ரீபிரியாவாலேயே மறக்க முடியாத கதாநாயகி கேரக்டரை கொடுக்க நினைத்தார். அப்போது இந்தியில் ரண்தீன்கபூர், ஹேமமாலினி நடித்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த "ஹாத் கீ சபாய்'' என்ற படத்தின் தமிழ் உரிமை வாங்கி அதில் கமலஹாசனையும், ஸ்ரீபிரியாவையும் ஜோடியாக நடிக்க வைத்தார். அந்தப் படமே "சவால்.'' படம் தமிழிலும் வெற்றி பெற்றது. ஸ்ரீபிரியாவின் நட்சத்திர அந்தஸ்தையும் உயர்த்தியது.

    எத்தனையோ நடிகைகளுடன் நடிக்க நேர்ந்த போதிலும், ஸ்ரீபிரியாவின் "மரியாதைக்குரிய நடிகை'' பட்டியலில் இருந்தவர் மனோரமாதான்.

    அதற்கான காரணத்தை ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:-

    "மற்ற நடிகர் - நடிகைகள் நலனில் எப்போதுமே அக்கறை செலுத்துபவர் 'ஆச்சி' மனோரமா. புதுமுகம் ஆயிற்றே என்றெல்லாம் ஒதுங்கிப் போகமாட்டார். என் நான்காவது படமான "தொட்டதெல்லாம் பொன்னாகும்'' படத்தில் ஆச்சியும் இருந்தார். படத்தில் ஜெய்சங்கர் - ஜெயசித்ரா ஜோடியாக நடித்தனர். நான் தேங்காய் சீனிவாசனின் ஜோடியாக நடித்தேன்.

    இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு சேலத்தில் நடந்தது. 'ஆச்சி'யும் வந்திருந்தார். நான் நடிக்க வருவதற்கு முன்பே, எங்கள் குடும்பத்துடன் ஆச்சிக்கு நெருங்கிய நட்பு இருந்தது. அதனால் நான் சினிமாவுக்கு வந்தபிறகு, என்னை ரொம்பவும் அக்கறையுடன் பார்த்துக் கொள்வார்.

    எப்போதும் படப்பிடிப்புக்கு என்னுடன் பாட்டி வருவதுண்டு. 'ஆச்சி'யுடன் எனக்கு படப்பிடிப்பு என்றால், பாட்டி வரமாட்டார். இந்த வகையில் ஆச்சி என் இன்னொரு அம்மா ஸ்தானத்தில் இருந்தார்.

    "தொட்டதெல்லாம் பொன்னாகும்'' படப்பிடிப்பில் அன்று எனக்கும் ஆச்சிக்கும் சீன் இருந்தது. முதலில் எனக்கு மேக்கப் போட்டார்கள். எனக்கு மேக்கப் போட்டவர் ஏதோ பெயருக்கு அவசரமாக போட்டு விட்டு போய்விட்டார். நான் நடிக்க வேண்டிய அன்றைய காட்சிக்கு எனக்கு கொடுக்கப்பட்டிருந்த உடையும் 'ஏனோதானோ' என்றிருந்தது.

    நான் மேக்கப் ரூமை விட்டு வெளியே வரவும் 'ஆச்சி' என்னைப் பார்த்து விட்டார். 'மேக்கப்' என்ற பெயரில் என் முகம் இருந்த விதம் ஆச்சிக்குள் கோபத்தை உண்டுபண்ணிவிட்டது. என் கையைப்பிடித்து மறுபடியும் மேக்கப் ரூமுக்கு அழைத்துப் போனார்.

    மேக்கப் போட்டுக் கொண்டிருந்தவர்களிடம், "ஒரு தமிழ்ப்பொண்ணு நடிக்க வந்தா அவளுக்கு இந்த மாதிரிதான் மரியாதை கொடுப்பீங்களா?'' என்று உரத்த குரலில் கண்டித்ததுடன், எனக்கு மறுபடியும் மேக்கப் போட ஏற்பாடு செய்தார். சரியான உடைகளையும் தரச்செய்தார்.

    அன்றைக்கு என்னுடன் என் அம்மாவோ, பாட்டியோ இருந்திருந்தாலும், 'ஆச்சி' அளவுக்கு நிச்சயம் செய்திருக்க முடியாது. இந்த வகையில் ஆச்சி, எனக்கு இன்னொரு அம்மா.

    இப்படிப்பட்ட ஆச்சியிடமே ஒரு தடவை ஏதோ ஒரு காரணத்துக்காக கோபித்துக்கொண்டு விட்டேன். அம்மா - பெண்ணுக்கிடையே வந்து போகும் சாதாரண மோதலாக அதை ஆச்சி எடுத்துக் கொண்டார். எனக்கு அப்போது ஆச்சி அளவுக்கு பக்குவம் ஏது?

    ஒருநாள் ஷெட்டில் என் கண்ணில்பட்ட ஆச்சியின் ஹேர் டிரஸ்ஸரிடம், "மேடம் நல்லா இருக்காங்களா?'' என்று கேட்டுவிட்டேன். அடுத்த கணம் எங்கிருந்துதான் ஆச்சி வந்தாரோ, என்னை பிலுபிலுவென பிய்த்துவிட்டார்.

    "என்னை மேடம்னு கூப்பிடற அளவுக்கு நீங்க பெரிய மனுஷி ஆகிட்டீங்களா?'' என்று கோபத்துடன் கூறினார். அவர் அப்படி உரிமையுடன் என் மீது கோபப்பட்டு, மீண்டும் என்னுடன் சமரசமாகிவிடவேண்டும் என்பதுதான் என் திட்டம்! அது நன்றாகவே நடந்தேறியது.

    இப்போது நான் நடிக்கும் "இம்சை அரசிகள்'' சீரியலில்கூட எனக்கும் ஆச்சிக்கும் சமமான கேரக்டர்கள். ஆச்சி அவருக்கே உரிய ஆற்றலில் சின்னத்திரை ரசிகர்களையும் குலுங்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

    எப்போதும் என்னை வாய் நிறைய 'ஆலு' (ஒரிஜினல் பெயரான அலமேலுவின் சுருக்கம்) என்று வாய் நிறைய அவர் அழைப்பதே தனி அழகு.''
    நடிகையாகவே சினிமாவுக்குள் அறிமுகமாகியிருந்தாலும் ஸ்ரீபிரியாவுக்குள் கதை சொல்லும் ஆற்றலும் இருந்தது. "காதோடுதான் நான் பேசுவேன்'' என்ற கதையை, சினிமாவுக்காக எழுதினார். டைரக்டர் எம்.ஏ.காஜா இந்தப் படத்தை இயக்கினார்.
     
    புகழ் பெற்ற நட்சத்திரமாக விளங்கியபோதே, சில படங்களை ஸ்ரீபிரியா டைரக்ட் செய்தார்.

    நடிகையாகவே சினிமாவுக்குள் அறிமுகமாகியிருந்தாலும் ஸ்ரீபிரியாவுக்குள் கதை சொல்லும் ஆற்றலும் இருந்தது. "காதோடுதான் நான் பேசுவேன்'' என்ற கதையை, சினிமாவுக்காக எழுதினார். டைரக்டர் எம்.ஏ.காஜா இந்தப் படத்தை இயக்கினார்.

    தமிழில் படம் அவ்வளவாக வெற்றி பெறாவிட்டாலும், கதை நன்றாக இருப்பதாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

    இந்தப் படத்தின் கதை உரிமையை அனைத்து மொழிகளுக்கும் ஸ்ரீபிரியாவிடம் டைரக்டர் கே.பாலசந்தர் வாங்கினார். இது, ஸ்ரீபிரியாவுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. கதையை வாங்கியதும், தெலுங்கில் சரிதாவை வைத்து படத்தை இயக்கினார் பாலசந்தர். அங்கே படம் மிகப்பெரிய வெற்றி.

    "ஒரு தோல்விப்படத்தை எப்படி வெற்றிகரமாக மாற்றமுடியும்'' என்பதை அன்றே செய்து காட்டினார், கே.பாலசந்தர். இதில் கதை என்னுடையது என்பதில் எனக்கொரு பெருமை. அவ்வளவுதான்'' என்கிறார், ஸ்ரீபிரியா. இதே காலகட்டத்தில் டைரக்டராகவும் தன்னை வெளிப்படுத்தினார், ஸ்ரீபிரியா. "சாந்தி முகூர்த்தம்'' என்ற படத்தை இயக்கினார்.

    அந்தப் படம் ஸ்ரீபிரியாவை ஒரு தரமான இயக்குனராக நிலைநிறுத்த, தொடர்ந்து "நானே வருவேன்'' என்ற படத்தை இயக்கினார். இதே படத்தை கன்னடத்திலும் இயக்கினார். இந்தக் காலக்கட்டத்தில், தெலுங்கில் பிரபல இயக்குனராக திகழ்ந்த தாசரி நாராயணராவ் தெலுங்கில் இயக்கிய "சிவரஞ்சனி'' படம் தமிழில் தயாரிக்கப்பட்டது. தமிழில் "நட்சத்திரம்'' என்ற பெயரில் தயாரான இந்தப் படத்தில் ஸ்ரீபிரியா நடிகையாகவே நடித்திருந்தார். இந்தப்படம் தெலுங்கில் பெற்ற வெற்றியை, தமிழில் எட்டவில்லை.

    டைரக்டர் ஸ்ரீதர் இயக்கிய "இளமை ஊஞ்சலாடுகிறது'' படம் ஸ்ரீபிரியாவுக்கு இன்னொரு திருப்பு முனையாக அமைந்தது. இந்தப் படத்தில் கமலஹாசனின் காதலியாக இருந்து ரஜினியின் மனைவியாக மாறும் கேரக்டரில் பிரமாதமாக நடித்திருந்தார், ஸ்ரீபிரியா.

    முதலில் இந்தக் கேரக்டரில் ஸ்ரீபிரியா நடிப்பதாக இல்லை. அதுபற்றி ஸ்ரீபிரியா கூறுகிறார்:-

    "படத்தில் ஜெயசித்ரா நடித்த கேரக்டரில்தான் நான் நடிப்பதாக இருந்தது. கதைப்படி அந்த கேரக்டருக்கு அத்தனை முக்கியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. டைரக்டர் ஸ்ரீதர் இந்தப்படத்தை தெலுங்கிலும் எடுத்துக் கொண்டிருந்தார். தெலுங்கில் அப்போது புகழின் உச்சியில் இருந்த ஜெயசுதா நடித்தார். நான் ஸ்ரீதரிடம், "படத்தில் நீங்கள் எனக்கு தருவதாக சொன்ன கேரக்டர் எனக்கு பிடிக்கவில்லை. மெயின் ரோல் தந்தால் பண்ணுகிறேன். சின்ன கேரக்டரில் நான் நடிக்க விரும்பவில்லை'' என்று சொல்லிவிட்டு விறுவிறுவென வந்து விட்டேன்.

    நான் இப்படி மனதில் இருப்பதை படபடவென கொட்டிவிட்டு வந்தது ஸ்ரீதர் சாருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கக் கூடும் என்று எண்ணினேன். ஆனால் என் தைரியத்தைப் பார்த்தோ, அல்லது நம்பிக்கை வந்தோ அந்த மெயின் கேரக்டரில் என்னை நடிக்க வைத்தார். நான் நடிக்க மறுத்த கேரக்டரில் சில நாட்களில் ஜெயசித்ரா நடித்தார்.

    படம் தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெற்றி. நீண்ட இடைவெளிக்குப்பிறகு, ஆடை நேர்த்திக்காக இந்தப் படத்தில்தான் நான், பேசப்பட்டேன். ஸ்ரீதர் சாரின் கலை அழகுணர்வுக்கு கிடைத்த மரியாதையாக இந்தப் பாராட்டை எடுத்துக் கொண்டேன். இந்தப்படம் இந்தியிலும் எடுக்கப்பட்டது. ராஜேஷ்கன்னா, சத்ருகன்சின்கா நடித்தார்கள். என் கேரக்டரில் ஜெயபிரதா நடித்தார். என்ன காரணத்தாலோ இந்தியில் படம் சரியாக ஓடவில்லை.''

    இவ்வாறு கூறினார், ஸ்ரீபிரியா.

    நடிகர் பாலாஜி அப்போது பட அதிபராகவும் மாறி நிறைய படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார். ரஜினியின் புகழ் ஏறுமுகமாக இருந்தபோது, அவரை கதாநாயகனாக்கி "பில்லா'' என்ற படத்தை தயாரித்தார். படத்தில் ரஜினிக்கு ஜோடி ஸ்ரீபிரியா.

    இந்தப் படத்தில் தனது கேரக்டர் சின்னதாக இருப்பதாக கூறி ஆரம்பத்தில் நடிக்க மறுத்திருக்கிறார், ஸ்ரீபிரியா. படத்தில் தனது கேரக்டர் வலுவில்லாததாக இருக்கிறது என்று அவர் கதை வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனிடம் கூறினார்.

    ஸ்ரீபிரியா இப்படிச் சொன்னதும் வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன், "வேண்டுமானால் பார். படத்தில் உன் கேரக்டரும் பேசப்படும். அதற்கு நான் பொறுப்பு'' என்றார்.

    இந்தப்படத்தில் நடித்தது பற்றி ஸ்ரீபிரியா கூறுகிறார்:-

    "தயாரிப்பாளர் பாலாஜி எப்போதுமே என் போன்ற கலைஞர்களின் மரியாதைக்குரியவர். அவர் கம்பெனியில், சின்ன நடிகர்கள், பெரிய நடிகர்கள் என்ற பேதம் கிடையாது. ஒவ்வொரு நடிகர் - நடிகைக்கும் நாற்காலி போட்டு அதில் எம்பிராய்டரியில் அவர்கள் பெயரை பதித்து இருப்பார்கள்.

    அதுமாதிரி சம்பள விஷயத்திலும் அவர்களின் அணுகுமுறை புதுமையானது. யார் நடிக்கிறார்களோ அவர்கள் கையில்தான் சம்பளப் பணத்தையே கொடுப்பார்கள். அதுவரை நான் நடித்த படங்களில் என் சம்பளத்தை அம்மாவிடம்தான் கொடுத்திருக்கிறார்கள். முதன் முதலாக இந்தப் படத்தில்தான் என் சம்பளத்தை நான் வாங்கினேன்.

    அப்போது கூட பாலாஜி சாரிடம், "அம்மாவிடம் கொடுத்து விடுங்களேன் சார்'' என்று சொல்லிப் பார்த்தேன். அவரோ, "என் படத்தில் நடிப்பவர் யாரோ, அவர்தான் சம்பளத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்'' என்று கூறிவிட்டார்.

    பாலாஜி சாரின் "பில்லா'' படம் இந்தியில் வந்த `டான்' படத்தின் ரீமேக். அமிதாப்பச்சனும், ஜீனத் அமனும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை எனக்குப் போட்டுக் காட்டியபோது முழுவதும் பார்க்காமல் தூங்கிவிட்டேன். கடைசியில் என் கேரக்டர் இதுதான் என்று வந்தபோது `சின்ன ரோல்' என்று தயங்கினேன்.

    கதை வசன கர்த்தா ஏ.எல்.நாராயணன், இந்தியில் சின்னதாக இருந்த கேரக்டரை, தமிழில் பெரிதாக உருவாக்கித் தருகிறேன் என்றார்.

    ஆனாலும் படம் வந்தபோது என் கேரக்டர் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாமே என்று எனக்குத் தோன்றவே செய்தது. என்றாலும் அந்த கேரக்டரில் நான் பேசப்பட்டேன். ஏ.எல்.நாராயணன் சார் சொன்னது உண்மையாயிற்று.

    இந்தப் படத்தில் என் கேரக்டர் பெரிய அளவில் இல்லை என்பதை தயாரிப்பாளர் பாலாஜி சாரும் தெரிந்தே வைத்திருந்தார். "பில்லா'' படப்பிடிப்பு சமயத்தில் ஒரு நாள் என்னைப் பார்த்தவர், "என்னுடைய அடுத்த படத்தில் உங்களுக்கு பெரிய கேரக்டர் உண்டு'' என்று சொன்னார்.

    இப்படி எல்லோருமே நம்பிக்கையூட்டுகிற விதமாக சொல்லவே செய்வார்கள். ஆனால் காலப்போக்கில் மறந்து விடுவார்கள். பாலாஜி சார் அப்படியில்லாமல், அவரது அடுத்த படத்தில் எனக்கு பெரிய கேரக்டரே கொடுத்தார். "சவால்'' என்ற அந்தப் படத்தில் கமல் ஜோடியாக நடித்தேன். இப்போதுகூட மறக்க முடியாத கேரக்டர் அது.''

    இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.
    ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், "நீயா" என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.

    ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், "நீயா'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். "நாகின்'' என்ற இந்திப்படத்தில் வந்த ஒரு பாடல்தான் அவரை படத்தயாரிப்பாளர் ஆக்கியது.

    வைஜயந்திமாலா இந்திப்படங்களில் கொடிகட்டிப் பறந்தபோது "நாகின்'' என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடி பிரதீப்குமார். மகுடி வாத்தியத்தை வைத்து அற்புதமான மெட்டுகளில் இசை அமைத்திருந்தார், ஹேமந்தகுமார்.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு "நாகின்'' என்ற பெயரிலேயே இன்னொரு இந்திப்படம் வெளிவந்தது. இந்தப் படத்திலும் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. "வீடியோ சிடி'' எல்லாம் வராத காலம் அது. சென்னை ஸ்டார் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த இந்தப் படத்தை, தன் தாயாருடன் சென்று பார்த்தார், ஸ்ரீபிரியா.

    படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பாடல் அவரை ரொம்பவும் கவர்ந்தது. அந்தப் பாடலுக்காகவே அந்தப் படத்தை 6 தடவை பார்த்து ரசித்தார். அதோடு நில்லாமல், தனது தாயாரிடம் "நான் நடிக்கிற படத்தில் இப்படியொரு பாட்டு இருந்தால், எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்'' என்று கூறினார். "அவ்வளவுதானே! கவலையைவிடு'' என்று அம்மா சொன்னார்.

    அம்மா அப்படிச் சொன்னதன் பொருள் ஸ்ரீபிரியாவுக்கு ஒரு வாரம் கழித்தே புரிய ஆரம்பித்தது. "நாகின்'' படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை ஸ்ரீபிரியாவின் தாயார் வாங்கினார். அப்போது பிசியாக இருந்த டைரக்டர் துரையை அந்தப் படத்தை இயக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரும் சம்மதம் தெரிவித்தார். அப்போது முன்னணியில் இருந்த கமல், விஜயகுமார், ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன், ஜெய்கணேஷ், சந்திரமோகன் என 6 ஹீரோக்கள் நடித்தனர்.

    இந்தப் படத்தில் கமல் நடித்த கேரக்டரில் முதலில் ரஜினி நடிக்க இருந்தார். ரஜினியின் கால்ஷீட் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் ரஜினிக்கு பதிலாக கமல் நடித்தார். இந்திப்படத்தில் ரேகா நடித்த "பாம்பு'' கேரக்டரில் ஸ்ரீபிரியாவும், அவருக்கு ஜோடிப் பாம்பாக சந்திரமோகனும் நடித்தார்கள்.

    இந்திப் படத்தில் ஸ்ரீபிரியா எந்தப் பாட்டுக்கு மயங்கினாரோ, அதே டியூனில் தமிழிலும் அந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தார்கள். "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா'' என்பதுதான் அந்தப் பாடல். 1979 பொங்கலுக்கு வெளிவந்த "நீயா'' பெரிய வெற்றி பெற்றது.

    இந்தப் படம் வெளியானபோது, சிவாஜிகணேசனுடன் "திரிசூலம்'' படத்தில் ஸ்ரீபிரியா நடித்துக் கொண்டிருந்தார்.

    "நீயா!'' படத்தை பார்த்து விட்டு, ஸ்ரீபிரியாவிடம் சிவாஜிகணேசன் செல்லமாகக் கோபித்துக் கொண்டார். அதுபற்றி ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:-

    "நடிகர் திலகம் எவ்வளவு பெரிய நடிகர். நடிப்பில் இமயம். அவர் "நீயா'' படம் பார்த்து விட்டு மறுநாள் "திரிசூலம்'' படப்பிடிப்பில் இருந்தபோது என்னிடம் பேசினார். "படம் பார்த்தேன் புள்ளே! பாம்பா உன் கூட சேர்ந்து நடனமாடற அந்தப் பையன் (சந்திரமோகன்) என்னமா டான்ஸ் ஆடறான்! அவன் `கெட்அப்'பும், கொண்டை போட்டிருந்த அழகும் அடடா! அடடா! இந்த கேரக்டருக்கு என்னை ஏன் புள்ளே கூப்பிடலை?'' என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சி ஒருபுறம்; ஆனந்தம் ஒருபுறம்'' என்றார், ஸ்ரீபிரியா.

    டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய சில படங்களில் ஸ்ரீபிரியா நடித்து இருக்கிறார். அவற்றில் முக்கியமானது "தசாவதாரம்'' படம். இந்தப் படத்தில் சூர்ப்பனகை வேடத்தில் நடிக்க ஸ்ரீபிரியாவை கேட்டார் இயக்குனர். ஸ்ரீபிரியா மறுத்துவிட்டார். "நடிகர் திலகம் சிவாஜி எப்பேர்ப்பட்ட நடிகர்! அவர் ராமாயண நாடகத்தில் நடித்தபோது கைகேயி வேடத்தில் நடித்தார். ஒரு ஆர்ட்டிஸ்ட் என்றால் எந்த கேரக்டரிலும் நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உன்னால் இந்த சூர்ப்பனகை கேரக்டரிலும் நடித்து பெயர் வாங்க முடியும்'' என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறினார்.

    இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இருந்ததாலும், எந்த கேரக்டரிலும் தன்னால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையாலும் சூர்ப்பனகை வேடத்தில் நடிக்க சம்மதித்தார், ஸ்ரீபிரியா. கதாநாயகியாக திரைக்கு அறிமுகமாகியிருந்தாலும் காமெடி, அதிரடி என சகல விஷயமும் தொட்டவர், இவர். கமலஹாசனுடன் நடித்த "பட்டிக்காட்டுராஜா'' படத்தில் `வில்லி' கேரக்டரில் கூட வந்தார். அதுமாதிரி "தொட்டதெல்லாம் பொன்னாகும்'' படத்தில் கதாநாயகன் ஜெய்சங்கர் என்றாலும், படத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த மாதிரியான `சவால்' கேரக்டர்கள், சின்ன கேரக்டர்களிலும் நடித்த அனுபவம் இருந்ததால் சூர்ப்பனகை கேரக்டரையும் சிறப்பாகவே செய்தார், ஸ்ரீபிரியா.

    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து ஸ்ரீபிரியா கூறியதாவது:-

    "பெரியப்பா தண்டாயுதபாணி பிள்ளை மீது டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சாருக்கு பிரியமும் அதிகம். மரியாதையும் அதிகம். அந்த அடிப்படையில் தன்னை `சித்தப்பா' என்றே அழைக்கச் சொல்வார். ஆரம்பத்தில் வாய் தவறி `சார்' வந்தாலும், "நான் உன்னிடம் என்ன சொல்லியிருக்கிறேன்?'' என்று குரலில் கடுமை காட்டி கேட்பார். வசனங்களை இவர் சொல்லித் தருவதே தனி அழகு. காட்சியை விவரிக்கும்போதே அவரிடம் இருந்து வசனங்கள் வந்து விழும். ஒத்திகையின்போது பேசவேண்டிய வசனத்தை சொல்லிக் கொடுப்பவர், மறுபடி `டேக்'கின் போது இன்னமும் கூடுதலாக சில வசனங்களை சேர்ப்பார். ஆனால் அப்படி புதிதாக சேர்க்கப்பட்ட வசனங்களும் அற்புதமாக இருக்கும்.

    தசாவதாரம் படத்தில் சூர்ப்பனகையாக நடிக்கும்போதே, "வாய் வலிக்குது'' என்று அவரிடம் கிண்டல் செய்திருக்கிறேன். வசனம் அதிகம் இருப்பதைப்பற்றி கிண்டல் செய்கிறேன் என்பதை அவரும் புரிந்து கொள்வார். அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு, அதுபற்றி பேசாமல் சிரிக்க மட்டும் செய்வார். அவர் சொன்னபடி தசாவதாரம் படத்தில் எனக்கும் நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ந்து, "வாயில்லாப்பூச்சி'', "பாலாபிஷேகம்'', "உள்ளத்தில் குழந்தையடி'' உள்பட ஏழெட்டு படங்களில் நடித்தேன். எல்லாமே எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள்.

    நான் கதை கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்ட டைரக்டர்களில் இவரும் ஒருவர். "நாளை பூஜை. படத்தில் நீயும் இருக்கிறாய். பூஜைக்கு வந்துவிடு'' என்பது மட்டுமே இவரது திடீர் அழைப்பாக இருக்கும். ஒரு படத்தில் எத்தனை கேரக்டர்கள் இருக்கிறதோ அத்தனை கேரக்டர்களையும் உயிரோட்டமாகத் தரும் இயக்குனர் என்ற வகையில் நான் மட்டுமல்ல, பல நடிகர் - நடிகைகள் இவரிடம் `படத்தில் தங்களுக்கு என்ன கேரக்டர்' என்று கேட்கமாட்டார்கள்.

    சமீபத்தில் நான் இயக்கும் டெலிவிஷன் சீரியல் ஒன்றுக்காக கற்பகம் ஸ்டூடியோவுக்குப் போயிருந்தபோது குதூகலத்துடன் என் அருகில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து கொண்டார். "நீ டைரக்ட் பண்றதை பார்க்கும்போது எனக்கே நடிக்கணும் போல இருக்கு'' என்று சொல்லி என்னை பாராட்டினார். அப்போது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.'' இவ்வாறு ஸ்ரீபிரியா குறிப்பிட்டார்.
    பி.மாதவன் டைரக்ட் செய்த "முருகன் காட்டிய வழி'' மூலமாக திரை உலகில் அடியெடுத்து வைத்த ஸ்ரீபிரியா, தொடக்கத்தில் வசனம் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.
    சினிமா ஆசை இல்லாமல் சர்ச் பார்க் கான்வென்டில் படித்துக் கொண்டிருந்தபோது, ஸ்ரீபிரியாவுக்கு திரைப்பட வாய்ப்பு தேடி வந்தது.

    "நல்ல வாய்ப்பு வரும்போது சொல்லி அனுப்புகிறேன்'' என்று கூறியிருந்த டைரக்டர் பி.மாதவன், ஸ்ரீபிரியாவுக்கு அழைப்பு அனுப்பினார்.

    ஸ்ரீபிரியா அவரைச் சந்தித்தார். மாதவன் "முருகன் காட்டிய வழி''யின் கதையைச் சொன்னார். ஏவி.எம்.ராஜனின் தங்கை வேடத்தில் ஸ்ரீபிரியா நடிக்க வேண்டும் என்று கூறினார்.

    சிறு வேடங்களில் நடிப்பதில் ஸ்ரீபிரியாவுக்கு ஆரம்பத்திலேயே விருப்பம் இல்லை. ஆனால், "முருகன் காட்டிய வழி''யில் ஏவி.எம்.ராஜனுக்கு தங்கை என்றாலும், படத்திலேயே மிக முக்கியமான பாத்திரம். எனவே ஸ்ரீபிரியா ஒப்புக்கொண்டார்.

    மேக்கப் டெஸ்ட்டின் போது, ஸ்ரீபிரியா கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. நெற்றி சின்னதாக இருப்பதாகக் கூறி, முன்புற நெற்றி முடியை பிளேடு வைத்து அகற்றி, மேக்கப் டெஸ்ட் நடத்தினார்கள்! இதனால் பள்ளிக்கு பஸ்சில் போய் வந்து கொண்டிருந்த ஸ்ரீபிரியா, பஸ்சில் ஏறியதும் கையிலிருக்கும் நோட்டுப் புத்தகத்தால் நெற்றியை மறைத்துக்கொண்டு பயணம் செய்தார்!

    பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் சமயங்களிலும் இந்த `முகமறைப்பு' தொடர்ந்து இருக்கிறது.

    முகத்தைக்கூட காட்ட முடியாத சோகம், ஸ்ரீபிரியாவுக்குள் ஒரு கட்டத்தில் கோப அலைகளை எழுப்பியது. தன்னை சினிமாவில் நடிக்க அழைத்த டைரக்டர் பி.மாதவன் மீதே கோபப்பட வைத்தது.

    ஒருநாள் பள்ளி முடிந்ததும், நேராக டைரக்டர் பி.மாதவன் ஆபீசுக்கு போனார். ஏதோ, பட விஷயமாகப் பேச வந்திருப்பதாக மாதவன் நினைத்தார்.

    ஆனால் ஸ்ரீபிரியாவோ, "எனக்கு நடிக்க விருப்பமில்லை. தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்'' என்று கெஞ்சல் குரலில் சொன்னார்.

    "வீணாக பயப்படாதே. மேக்கப் டெஸ்ட் `ஓகே' ஆகிவிட்டது. உன்னை நன்றாக நடிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!'' என்று மாதவன் கூறினார்.

    ஆனால் ஸ்ரீபிரியாவோ, சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்ல, கோபம் அடைந்தார், மாதவன்.

    "எத்தனையோ பேர் நடிப்பதற்கு ஆசைப்பட்டு தவம் கிடக்கிறார்கள். உனக்கு வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. இப்போது நீ மறுத்துவிட்டால், பிறகு இந்த வாய்ப்பு மீண்டும் வராது!'' என்று கூறினார்.

    ஆனால் ஸ்ரீபிரியாவோ, "எனக்கு அதுபற்றிக் கவலை இல்லை சார்!'' என்று கூறிவிட்டு விடுவிடுவென்று அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

    ஆனால் டைரக்டர் மாதவன் விடுவதாக இல்லை. 2 மாதம் கழித்து, ஸ்ரீபிரியாவுக்கு மீண்டும் அழைப்பு அனுப்பினார். `ஏன் திரும்பவும் அழைக்கிறார்' என்று யோசித்தபடியே அவரைப் போய் சந்தித்தார்.

    "என்ன ஆனாலும் சரி. நடிக்கமாட்டேன் என்று தைரியமாக கூறிவிட்டுப் போனாய் அல்லவா? அந்த தைரியம்தான் எனக்கு ரொம்பவும் பிடிக்கிறது. என் கதையின் அந்தக் கேரக்டர், உனக்கு ரொம்பப் பொருத்தமாக இருக்கும். பிடிவாதம் செய்யாமல் நடி!'' என்று மாதவன் கூறினார்.

    ஸ்ரீபிரியாவின் தாயாரும், மாதவன் கருத்தை ஆதரித்தார். "டைரக்டர் சார் இவ்வளவு சொல்லும்போது நீ மறுப்பது சரியல்ல'' என்று எடுத்துச் சொன்னார். எனவே, நடிப்பதற்கு சம்மதித்தார், ஸ்ரீபிரியா.

    முதல் படத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து ஸ்ரீபிரியா கூறியதாவது:-

    "நடிப்பது என்று முடிவு எடுத்ததும், அதற்கேற்ப என்னை பக்குவப்படுத்திக் கொண்டேன். எங்கள் சர்ச் பார்க் பள்ளியின் எதிரே `சினிமா கட்- அவுட்கள் வைப்பார்கள். அதில் பிரபல நடிகர் -நடிகைகள் படங்கள் பெரிய அளவில் பளிச்சென்று காணப்படும். `நாம் இப்போது நடிக்கப்போகிறோம். இனி நமக்கும் இதே இடத்தில் `கட்அவுட்' வைப்பார்கள்!' என்று எண்ணிக் கொண்டேன்.

    அன்றைய பிரபல சினிமா பத்திரிகைகளில் என் படத்தை அட்டையில் பிரசுரித்தார்கள். அதனால், பள்ளி மாணவிகள் மத்தியில் என் புகழ் பரவியது.''- இப்படிச் சொன்ன ஸ்ரீபிரியா, முதல் படம் "முருகன் காட்டிய வழி''யில் வசனம் பேசத்தான் ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார்.

    டைரக்டர் பி.மாதவனிடம் உதவியாளர்களாக இருந்த தேவராஜ் -மோகன் இருவரில் மோகன்தான் ஸ்ரீபிரியாவுக்கு வசனம் பேச கற்றுக் கொடுத்தார். அதுவரை தமிழில் பேச, எழுதத் தெரியாத ஸ்ரீபிரியாவுக்கு தமிழில் சரளமாக பேசிப்பழக அவர் கொடுத்த வசனம் "தங்கப்பதக்கம்'' படத்தில் சிவாஜியிடம் மருமகளாக நடிக்கும் பிரமிளா பேசும் வசனம்.

    `மாமா! காஞ்சுப்போன நதியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காய்ஞ்சு போயிட்டா?''

    இந்த வசனத்தை ஸ்ரீபிரியா சொன்ன பிறகு, படத்துக்கான 2 பக்க வசனத்தை படித்துக்காட்டினார், மோகன்.

    இந்த வசனத்தை ஸ்ரீபிரியா தயங்கித் தயங்கி பேசினார். அப்போது பின்னால் நின்று கொண்டிருந்த டைரக்டர் பி.மாதவன், `பொண்ணு தேறுமா?' என்பது போல் மோகனிடம் கை அசைவில் கேட்டிருக்கிறார். மோகனோ, உதட்டைப் பிதுக்கி `தேறாது' என்பதுபோல் சொல்லியிருக்கிறார்!

    ஆனால், வெகு விரைவிலேயே எல்லோரும் ஆச்சரியப்படும்படி வசனத்தை தெளிவான உச்சரிப்புடன் பேசத்தொடங்கினார், ஸ்ரீபிரியா.

    "எனக்கு தமிழ் சரியாகத் தெரியவில்லை என்றாலும், இரண்டு தடவை படித்துக் காட்டினால் போதும். அப்படியே மனதுக்குள் கிரகித்துக் கொண்டு திருப்பிச் சொல்லிவிடுவேன். மோகன் சார் எனக்கான வசனத்தை இரண்டாவது தடவையாகச் சொன்னபோது, அப்படியே கடகடன்னு திருப்பிச் சொல்லி, அவரை ஆச்சரியப்படுத்தி விட்டேன். நான் பேசி முடித்ததும் கேமராமேன் பி.என்.சுந்தரம் சார் கைதட்டி பாராட்டினார்'' என்று `மலரும் நினைவு'களை பகிர்ந்து கொண்டார், ஸ்ரீபிரியா.

    இதன் பிறகு ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீபிரியா நடித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அங்கு நடிகர் சிவகுமார் வந்தார்.

    "படத்தின் சில காட்சிகளை டைரக்டர் மாதவன் சாருடன் சேர்ந்து பார்த்தேன். நன்றாக நடித்திருக்கிறாய். வசனத்தையும் அழகாகப் பேசியிருக்கிறாய். எதிர்காலத்தில் சிறந்த நடிகையாக வருவாய்!'' என்று வாழ்த்தினார்.

    பூரித்துப்போனார், ஸ்ரீபிரியா.

    ×