search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகம்
    X

    டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகம்

    பட அதிபர் கோவைத்தம்பி தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்தப் படத்தின் மூலம், டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானார்.
    பட அதிபர் கோவைத்தம்பி தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்தப் படத்தின் மூலம், டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானார்.

    கோவைத் தம்பியின் சொந்த ஊர் கோவை மாவட்டம் தெலுங்குபாளையம். 1940 நவம்பர் 28-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் பெருமாள் உடையார். தாயார் சுந்தாயி அம்மாள்.

    சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த கோவைத்தம்பி, எப்படி அரசியல்வாதியாகவும், பட அதிபராகவும் ஆகமுடிந்தது?

    "கிராமத்தில், கோவணம் கட்டிக்கொண்டு, எருமை மாட்டைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த என்னை, கோபுரத்தின் உச்சியில் உட்கார வைத்தது திராவிட இயக்கமும், எம்.ஜி.ஆரும்தான்.

    1954-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த "மலைக்கள்ளன்'' படம் வெளிவந்தது. அப்போது, கோவை ஆர்.எஸ்.புரம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.

    எங்கள் பள்ளியின் மாணவர் மன்றத்தில், "கலையும் நாமும்'' என்ற தலைப்பில் பேச எம்.ஜி.ஆர். அழைக்கப்பட்டிருந்தார்.

    அவரை நேரில் பார்த்த அந்த நாள், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அவர் அழகு, நடை-உடை-பாவனை, பேச்சு அனைத்தும் என்னைக் கவர்ந்தன. அவருடைய மேடைப் பேச்சு என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

    பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் கூட்டம் எங்கு நடந்தாலும் ஆர்வத்துடன் சென்று அந்தத் தலைவர்களின் பேச்சை கேட்டேன். அதனால்தான், பள்ளிப் பருவத்திலேயே, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறந்த பேச்சாளருக்கான விருதுகளைப் பெற்றேன். கலைஞரின் பேச்சும், எழுத்தும், சினிமா வசனங்களும், எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களும் என் உள்ளத்தில் கலை உணர்வைத் தூண்டின. நானே பல நாடகங்களை உருவாக்கி, வசனம் எழுதி மேடைகளில் நடித்து வந்தேன்.

    தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டு, அவர் அ.தி.மு.க.வை தொடங்கியபோது, நானும் அவர் கட்சியில் ஐக்கியமானேன். சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

    நான் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கியிருந்தபோது, 1981-ல் கோவையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் என்னை அணுகி, "எங்களிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது. அதை நீங்கள் சினிமாப்படமாகத் தயாரித்தால் நன்றாக இருக்கும்'' என்று கூறினார்கள். அந்த இளைஞர்கள்தான் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனும், துணை இயக்குனர் சிறுமுகை ரவியும்.

    "பொது வாழ்வுக்கு வந்து விட்டதால், சினிமா தயாரிக்கலாமா?'' என்று முதலில் தயங்கினேன். பிறகு சம்மதித்தேன்.

    பொதுவாக, அந்தக் காலக் கட்டத்தில் என் எண்ணங்களை அண்ணன் அரங்கநாயகத்திடம் (முன்னாள் அமைச்சர்) கலந்து பேசிய பிறகுதான் முடிவு எடுப்பது வழக்கம். எனவே, சுந்தர்ராஜன் என்னிடம் கதையை கூறியதும், அதை அரங்கநாயகத்திடம் கூறும்படியும், அவர் முடிவை ஏற்பதாகவும் தெரிவித்தேன்.

    அதன்படி, அரங்கநாயகத்தை சந்தித்து கதையைக் கூறினார், சுந்தர்ராஜன். "கதை நன்றாக இருக்கிறது. தாராளமாகப் படம் தயாரிக்கலாம்'' என்று அரங்கநாயகம் தெரிவித்தார்.

    இதன் பிறகு "மதர்லாண்ட் பிக்சர்ஸ்'' பட நிறுவனத்தை தொடங்கினேன். படத்தை ஆர்.சுந்தர்ராஜனே டைரக்ட் செய்வது என்று முடிவாயிற்று. படத்திற்கு "பயணங்கள் முடிவதில்லை'' என்று பெயர் சூட்டினோம்.

    இந்தப்படம் இசைக்கு முக்கியத்துவம் உள்ள படமாகையால், இளையராஜா இசை அமைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். சுந்தர்ராஜனையும் அழைத்துக்கொண்டு, இளையராஜாவை சந்திக்கச் சென்றேன்.

    பிரசாத் ஸ்டூடியோவில் அவரை சந்தித்து, "பயணங்கள் முடிவதில்லை என்ற பெயரில் படம் தயாரிக்கப்போகிறேன். அதற்கு நீங்கள் இசை அமைக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டேன்.

    "முழுக் கதையையும் எனக்கு கூறுங்கள். கதைப் பிடித்திருந்தால்தான் இசை அமைப்பேன். கதை பிடிக்காவிட்டால், நீங்கள் எவ்வளவு பணம் தந்தாலும் இசை அமைக்க மாட்டேன்'' என்றார், இளையராஜா.

    மறுநாள் பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவுக்கு கதை சொல்லத் தொடங்கினார், சுந்தர்ராஜன். "கதையை சுருக்கமாக, மையக் கருத்துடன் சொல்ல வேண்டும். எவ்வளவு நேரம் ஆகும்?'' என்று இளையராஜா கேட்டார். "அரைமணி நேரம் போதும்'' என்று சொன்னார், சுந்தர்ராஜன்.

    கதையை அவர் சொல்லச்சொல்ல, அந்த இசை மேதை கதையில் ஐக்கியமாகி, 2 மணி நேரம் கதை கேட்டார்.

    கதையை கேட்டு முடித்ததும், "இந்தப் படத்திற்கு நான் இசை அமைக்கிறேன். நாளை காலை வி.ஜி.பி.யில் பாடல்களை கம்போஸ் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்'' என்று இளையராஜா கூறினார்.

    அவர் கூறியபடி, மறுநாள் இசை அமைக்க ஏற்பாடு செய்தோம். 12 மணி நேரத்தில் 30 டிïன்கள் போட்டார், இளையராஜா.

    "இதில், காட்சி அமைப்புக்கு ஏற்றபடி, உங்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்.

    "நான் காட்சிகளை விளக்குகிறேன். அதற்கேற்ற டிïன்களை நீங்களே தீர்மானியுங்கள்'' என்று சுந்தர்ராஜன் சொல்ல, அப்படி தீர்மானித்ததுதான் பயணங்கள் முடிவதில்லை படப்பாடல்கள்.

    "பயணங்கள் முடிவதில்லை'' படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் அறிமுகப்படுத்த எண்ணினோம். ஆனால் நான் அரசியல்வாதி என்பதாலும், டைரக்டர் புதியவர் என்பதாலும் யாரும் முன்வரவில்லை.

    அந்த சமயத்தில், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படம் வெளிவந்திருந்தது. அதில் மோகனின் தோற்றமும், நடிப்பும் எனக்குப் பிடித்திருந்தன. அவரை கதாநாயகனாகப் போட நானும், சுந்தர்ராஜனும் தீர்மானித்தோம். அவரை அணுகியபோது, "கதையைக் கேட்டபிறகு, என் முடிவை சொல்கிறேன்'' என்றார்.

    கதையைக் கேட்டதும், "கதை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் கால்ஷீட் தருகிறேன்'' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

    இந்த சமயத்தில், "மஞ்சவிரிச்ச பூக்கள்'' என்ற மலையாளப்படம் சென்னையில் ஓடிக்கொண்டிருந்தது. அதில் நடித்த பூர்ணிமாவை (பின்னாளில் பூர்ணிமா பாக்கியராஜ்) கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தோம்.

    ரூ.13 லட்சம் செலவில், நான்கே மாதங்களில் "பயணங்கள் முடிவதில்லை'' தயாராகிவிட்டது. 26-2-1982-ல் படம் ரிலீஸ் ஆகியது.

    திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் நூறு நாட்கள் ஓடிய இப்படம், முக்கிய நகரங்களில் 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.

    சென்னையில் லிட்டில் ஆனந்த் தியேட்டரில் 425 நாட்கள் ஓடி வரலாறு படைத்தது.

    இந்த ஒரே படத்தின் மூலம், நான் முன்னணி படத் தயாரிப்பாளர்களின் வரிசைக்கு உயர்த்தப்பட்டேன்.''

    இவ்வாறு கூறினார், கோவைத்தம்பி.
    Next Story
    ×