என் மலர்
சினிமா

ஸ்ரீதர் டைரக்ஷனில் நெஞ்சம் மறப்பதில்லை ஜுபிடர் சோமுவின் மகன் காசி தயாரித்தார்
ஜுபிடர் சோமுவின் மறைவுக்குப் பிறகு, அவர் மகன் எம்.எஸ்.காசி, படத்தொழிலில் இறங்கினார். ஸ்ரீதர் டைரக்ஷனில் "நெஞ்சம் மறப்பதில்லை'' படத்தைத் தயாரித்தார்.
ஜுபிடர் சோமுவின் மறைவுக்குப் பிறகு, அவர் மகன் எம்.எஸ்.காசி, படத்தொழிலில் இறங்கினார். ஸ்ரீதர் டைரக்ஷனில் "நெஞ்சம் மறப்பதில்லை'' படத்தைத் தயாரித்தார்.
காசி, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் "பி.எஸ்.சி'' முதல் ஆண்டு படித்து வந்தபோது, தந்தை சோமுவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால், தனக்கு உதவியாக மகன் காசியை படத்தொழிலில் இறக்கினார். 1959-ம் ஆண்டு "தங்கப்பதுமை'' படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை காசி கவனித்தார்.
இதன்பின் எம்.ஜி.ஆர். நடித்த "அரசிளங்குமரி'' தயாரிக்கப்பட்டு வந்தபோது, சோமு மரணம் அடைந்தார். இதனால், அந்தப்படத்தின் தயாரிப்பு நிர்வாகப் பொறுப்பை காசி ஏற்றார்.
இந்த அனுபவம் பற்றி காசி கூறியதாவது:-
"மாணவ பருவத்திலேயே, ஜுபிடர் படங்களின் படப்பிடிப்பை பார்த்திருக்கிறேன். எனவே, சின்ன வயதிலேயே எனக்கு சினிமா பற்றி ஓரளவு தெரியும். என் தந்தை உடல் நலம் குன்றியதால், நான் படத்தொழிலுக்கு வந்தேன். படத்தயாரிப்பின் நுட்ங்கள் பற்றி, எனக்கு என் தந்தை பயிற்சி அளித்தார்.
"அரசிளங்குமரி'' தயாராகி வந்தபோது என் தந்தை காலமாகிவிட்டதால், அந்தப் படத்தை முடிக்க எம்.ஜி.ஆர். செய்த உதவி மறக்க முடியாதது. கிட்டத்தட்ட பாதி படத்தை அவர்தான் டைரக்ட் செய்தார் என்று கூறவேண்டும். ஒரு காரியத்தை எடுத்தால், அதை முடிக்கும் வரை சாப்பாடு, தூக்கம் எதைப்பற்றியும் எம்.ஜி.ஆர். நினைக்கமாட்டார். "எடுத்த காரியத்தை எப்படியும் முடிக்க வேண்டும்'' என்பதே அவர் கொள்கை. அவரிடமிருந்து நான் கற்ற முக்கிய பாடம் இது.''
இவ்வாறு காசி கூறினார்.
"அரசிளங்குமரி'' படத்திற்குப் பிறகு, ஜுபிடர் பிக்சர்ஸ் பேனரில் படம் எதுவும் தயாரிக்கப்படவில்லை. 1963-ல், மனோகர் பிக்சர்ஸ் பேனரில் "நெஞ்சம் மறப்பதில்லை'' என்ற படத்தை காசி தயாரித்தார். அதன் கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை ஸ்ரீதர் கவனித்தார். பூர்வஜென்மம் பற்றிய கதையைக் கொண்ட இப்படத்தில் தேவிகா, கல்யாண்குமார், நம்பியார் ஆகியோர் நடித்தனர்.
இதுபற்றி காசி கூறுகையில், "நெஞ்சம் மறப்பதில்லை படத்தை எடுத்து முடிக்க ஸ்ரீதர் மிகவும் உதவினார். அவர் செய்த உதவிகளை மறக்க முடியாது. "நெஞ்சம் மறப்பதில்லை'' தரமான படம் என்று பெயர் பெற்றது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை'' என்று கூறினார். இதன் பிறகு கே.பாலசந்தரின் நாடகமான "பாமா விஜய''த்தை திரைப்படமாக காசி தயாரித்தார். கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை பாலசந்தர் ஏற்றார். முத்துராமன், நாகேஷ், காஞ்சனா, ஜெயந்தி நடித்த இப்படம், வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப்படத்தைத் தயாரிப்பதற்கு ஜெமினி எஸ்.எஸ்.வாசன் மிகவும் உதவினார். கதை விவாதத்திலும் கலந்து கொண்டார். படத்தையும் விநியோகித்தார்.
இந்தப் படத்தின் திரைக்கதையை பாலசந்தர் மிக சிறப்பாக அமைத்திருந்தார். படத்தின் வெற்றிக்கு, அதுவே அடிப்படையாக அமைந்தது. இதுபற்றி காசி கூறுகையில், "இந்தப் படத்தயாரிப்பின்போது, வாசன் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மாமனிதர். அவருடைய சாதனைகளைப் பார்த்தபோது, `நாம் இன்னும் உழைக்கத் தொடங்கவே இல்லை' என்று தோன்றியது. என் தந்தை மீது அவர் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அதன் காரணமாகவே அவர் எனக்கு உதவினார்'' என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து "சூதாட்டம்'' என்ற படத்தை காசி தயாரித்தார். ஜெய்சங்கர், முத்துராமன், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் டைரக்டராக மதுரை திருமாறன் அறிமுகமானார். பின்னர் `வாயாடி' என்ற படத்தை தயாரித்தார். படத்தின் கதையை கலைஞானம் எழுதினார். மதுரை திருமாறன் டைரக்ட் செய்தார். ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்தனர். படம் வெற்றி பெற்றது. இதன்பின் "திருடி'' என்ற படத்தை தயாரித்தார். கதையை "தங்கப்பதக்கம்'' மகேந்திரன் எழுதினார். திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்தார், மதுரை திருமாறன். ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடித்தனர். படம் வெற்றிப்படமானது.
1976-ம் ஆண்டு "தாய்வீட்டு சீதனம்'' என்ற படத்தை தயாரித்தார். படத்திற்கு கலைஞானம் கதை எழுதினார். திரைக்கதை வசனம் எழுதி டைரக்ட் செய்தவர் மதுரை திருமாறன். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்தனர்.
இதுபற்றி காசி குறிப்பிடுகையில், "இந்தப் படத்தை தயாரித்து முடிக்க கே.ஆர்.விஜயா, இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், பைனான்சியரும், பட அதிபருமான நந்தகோபால் செட்டியார், விநியோகஸ்தர் "போட்டோ லித்தோ'' சதாசிவம், திருப்பூர் நண்பர் லோகராஜ் ஆகியோர் உதவினார்கள். அவர்களை நான் மறக்க முடியாது'' என்றார். 1976-ல், சர்க்கரை நோயினால் காசி பாதிக்கப்பட்டார். மரணத்தின் விளிம்பு வரை சென்று தப்பினார். அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஆச்சரியமானவை.
Next Story