என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    நெடுவாசலில் தொடங்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகளும், இளைஞர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகரும், சமூக அக்கறையாளருமான ராகவா லாரன்ஸ், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை சென்னையில் அமைதியான வழியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கவுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை 9 மணிக்கு இந்த போராட்டம் தொடங்கவுள்ளது.



    இதற்கான அனுமதிக்கு ராகவா லாரன்ஸ் ஒருவார காலம் காத்திருந்தாராம். ஜல்லிக்கட்டை பிரச்சினையைவிட ஹைட்ரோ கார்பன் பிரச்சினை மிகப்பெரியது. நாம் எல்லோரும் சேர்ந்து விவசாயிகளை காப்பாற்றுவோம் என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்திலும் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு, இளைஞர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சமீபகாலமாக பெண்களுக்கு எதிராக நடந்துவரும் குற்றங்களிலிருந்து அவர்களை காப்பதற்காக நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய பிரச்சாரத்தை கையிலெடுத்திருக்கிறார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    நடிகை பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் தற்போது நாடெங்கும் பெரிய அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. பாவான தைரியமாக இந்த விஷயத்தை வெளியில் சொன்னதையடுத்து மேலும் ஒரு சில நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

    அந்த வரிசையில் நடிகை வரலட்சுமியும், தானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தினார். வரலட்சுமியின் பதிவு செய்த இந்த டுவிட்டருக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்கும் பொருட்டு வரலட்சுமி கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கப்போவதாக வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘சேவ் சக்தி’ என்ற பெயரில் கையெழுத்து பிரச்சாரம் ஒன்றை உலக மகளிர் தினமான மார்ச் 8-ந் தேதி தொடங்கவுள்ளேன். இந்த கையெழுத்து பிரச்சாரத்தில் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து அனைவரிடமும் கருத்து கேட்க உள்ளோம்.



    அதாவது, தமிழகத்தில் பெண்களுக்கான சட்டத்திட்டங்களை அதிகப்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான வழக்கில் குறிப்பிட்ட தேதிக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்திதான் இந்த கையெழுத்து பிரச்சாரத்தை நடத்தவுள்ளோம்.

    மார்ச் 8-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த கையெழுத்து பிரச்சாரத்தை நடத்தவுள்ளேன். இது நடிகைகளுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த பெண்களுக்காகவும் நடத்தப்படவுள்ளது. இதில் கூறப்படும் கருத்துக்களை நமது மாநில அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்ல இருக்கிறோம். இதன்மூலம், பெண்களுக்கான பாதுகாப்பை ஓரளவுக்கு உறுதி செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்
    நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கடத்தல் கும்பல் அதை செல்போனிலும் படம் பிடித்தது. இதில் சுனிலின் நண்பர் வீட்டில் இருந்த மெமரிகார்டு, சிம்கார்டை போலீசார் கைப்பற்றினர்.
    பிரபல நடிகை பாவனா மலையாள சினிமா படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண் டிருந்தபோது கடத்தப்பட்டார்.

    ஓடும் காரில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கடத்தல் கும்பல் அதை செல்போனிலும் படம் பிடித்தது. இதுபற்றி நடிகை பாவனா துணிச்சலுடன் புகார் தெரிவித்ததை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் உள்பட 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் முக்கிய தடயமாக பாவனா ஆபாசமாக படம் பிடிக்கப்பட்டதாக கூறப்படும் சுனிலின் செல்போனை கைப்பற்ற போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். சுனிலிடம் விசாரணை நடத்திய போது அந்த செல்போனை கொச்சி அருகே உள்ள ஆற்றுப் பாலத்தில் இருந்து ஆற்று தண்ணீரில் அதை வீசிவிட்டதாக கூறினார்.

    அதை தொடர்ந்து கப்பல் படை வீரர்கள் உதவியுடன் அந்த ஆற்றில் நேற்று தேடுதல் வேட்டை நடந்தது. 6 மணி நேரம் ஆற்றில் சல்லடைப் போட்டு தேடியும் செல்போன் எதுவும் சிக்கவில்லை. விசாரணையை திசைத்திருப்பவும், தாமதப்படுத்தவும் சுனில் ஆற்றில் வீசியதாக பொய்யான தகவலை கூறி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இதை தொடர்ந்து செல்போனை கைப்பற்ற வேறு வழிகளில் போலீசார் விசாரணையை தொடர்ந்து உள்ளனர்.


    சுனில் பாவனாவை கடத்திய மறுநாள் அம்பல புழாவில் தனது நண்பர் மனு என்பவர் வீட்டில் தஞ்சம் அடைந்து உள்ளார். இதை தொடர்ந்து சுனிலை பலத்த பாதுகாப்புடன் மனுவின் வீட்டிற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை. வீட்டில் இருந்த அவரது தாயாரிடம் போலீசார் விசாரித்த போது அவர்கள் வீட்டிற்கு சுனில் வந்தது உறுதி செய்யப்பட்டது.

    சுனில் குற்ற செயலில் ஈடுபட்டது பற்றி டி.வி. மற்றும் பத்திரிகை மூலம் அறிந்ததும் அவரை தங்கள் வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் சுனில் தங்களது வீட்டில் தங்கி இருந்த போது செல்போனில் இருந்து சிம் கார்டு, மெமரிக் கார்டை வெளியே எடுக்கும் ‘பின்’னை தனது மகனிடம் இருந்து கேட்டு வாங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து அவர்கள் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி அங்கிருந்து ஒரு சிம் கார்டு, மெமரிக்கார்டை கைப்பற்றி உள்ளனர். இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக பாலியல் காட்சி உள்ளதால் அது தொடர்பான தடயம் இதில் உள்ளதா? என்பதை கண்டறிய அவற்றை ஆய்வுக்கு போலீசார் அனுப்பி உள்ளனர்.

    யாரையும் மரியாதைக் குறைவாக பேசவேண்டாம் என்று தனது இயக்கத்தாருக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் கமல் தனது பாணியில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய மாணவர்களுக்கு உறுதுணையாக கருத்துகளை கூறியிருந்த கமல், அடுத்ததாக தமிழகத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள் சம்பந்தமாகவும் தனது ஆணித்தரமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

    தற்போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி நடைபெற்று வரும் போராட்டம் சம்பந்தமாகவும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், கமல் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானதாக இன்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது.



    அந்த அறிக்கையில், தொடர்ந்து தமிழகத்திற்கு ஏற்பட்டு வரும் அவமானங்களையும், தமிழகத்தில் நிலவி வரும் சூழ்நிலைகளையும், யார் பக்கம் தவறு உள்ளது என்பதை சுட்டிக்காட்டியும் வெளியாகியிருந்தது. மேலும், நெடுவாசலில் மக்கள் நடத்தும் போராட்டம் போர் என்றும், அந்த போராட்டத்தில் போலீஸ்காரர்கள் அடிக்க வருகிறார்கள் என்றால் திருப்பி அடி என்றும், தானும் இந்த போரில் கலந்துகொள்ள வருகிறேன் என்றும் கமல் கூறியிருந்ததாக கூறப்பட்டது. லைவ் டே தமிழ்நாடு என்ற இணையதளம் அதை தனது வலைத்தளத்தில் பதிவும் செய்திருந்தது.



    இதுகுறித்து கமல் தற்போது விளக்கம் அளித்துள்ளார். லைவ் டே தமிழ்நாடு தளத்தில் என் பெயரால் எழுப்பப்படும் வன்மறை அறிவுறைகளும் வாக்குறுதிகளும் அவர்கள் கற்பனையே, என் கூற்றல்ல. போராடும் உத்வேகத்தில் எதையும் சொல்வது குற்றமாகும். எனக்கெதிரான குற்றம் மட்டுமல்ல, நாட்டுக்கும் இளைஞர்களுக்கும் எதிரானது. லைவ் டே தமிழ்நாடு இக்குற்றம் செய்வதை உடனே நிறுத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேலும் அவரது இயக்கத்தாருக்கு அறிவுரை ஒன்றையும் கூறியுள்ளார். அதாவது, யாரையும் மரியாதைக் குறைவாக பேசுவதை நம் இயக்கத்தார் செய்யாதிருக்க வேண்டும். நம்மைப் பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கும் அவதூறுகளுக்கும் பதில் தருவது நம் கடமை, பதிலடி கொடுப்பது வன்முறை என்று கூறியுள்ளார்.
    அமீர் இயக்கி வரும் ‘சந்தனத்தேவன்’ படத்தில் கண்டாங்கி சேலை கட்டி நடித்தது புதிய அனுபவமாக இருந்ததாக நாயகி அதிதி மேனன் கூறியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்
    ‘பட்டதாரி’ படத்தில் நாயகியாக நடித்தவர் அதிதிமேனன். அடுத்து அமீர் இயக்கும் ‘சந்தனதேவன்’ படத்தில் நடிக்கிறார். 1980 காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகும் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 21-ந்தேதி மதுரையில் தொடங்கியது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ஒரு பாடலுக்கான நடன காட்சியை அமீர் படமாக்கினார்.

    இதில் நடித்தது குறித்து அதிதிமேனன் கூறும்போது... “கேரளத்து பெண்ணான நான், இந்த படத்தில் மதுரை பெண்ணாக நடிக்கிறேன். கதைப்படி நான் இதில் ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கு ஜோடியாக வருகிறேன். இதில் எந்த மாதிரி வேடம் என்பது இதுவரை எனக்கு தெரியாது.



    முதலில் எடுத்த பாடல் காட்சியில் ஆர்யா, சத்யா இன்னொரு புதுமுக நடிகை ஆகியோருடன் நான் இணைந்து நடனம் ஆடினேன். இந்த பாடல் காட்சிக்காக கண்டாங்கி சேலை கட்டி நடித்தேன். அந்த ‘கெட்-அப்’ என்னை முழுவதும் மாற்றி விட்டது. என் வாழ்க்கையில் முதன் முதலாக கண்டாங்கி சேலை கட்டியது இப்போது தான்.

    நானே அசந்து போகும்படி மாறி இருந்தேன். அந்த மேக்கப்பில் மெலோடி பாடலுக்கு நடனம் ஆடியது புதிய, இனிய அனுபவம். மார்ச் முதல் வாரத்தில் இருந்து ஏப்ரல் முதல் வாரம் வரை ‘சந்தனதேவன்’ அடுத்தகட்ட படப்பிடிப்பில் தொடர்ந்து நடிக்க இருக்கிறேன்” என்றார்.

    மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்திற்கு முருகதாஸ் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு பெயர் தேடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. இந்தியிலும் வெளியாகிறது. மகேஷ்பாபு ஜோடியாக ராகுல் பிரீத்சிங் நடிக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

    படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கும் இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அதற்குள் இதன் ரிலீஸ் தேதியை ஏ,ஆர். முருகதாஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், ‘ஜுன் 23-ந்தேதி எங்கள் விருந்தினர்களாக தியேட்டர்களில் இருங்கள். ஆர்வத்துடன் இருக்கிறேன்’. என்று குறிப்பிட்டுள்ளார்.



    இதற்கு பதில் அளித்திருக்கும் மகேஷ் பாபு, ‘காத்திருக்கிறேன் சார். கொண்டாட வேண்டிய நாள்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார். ஆனால் படத்தின் தலைப்பு இன்னமும் முடிவாகவில்லை. 3 மொழிக்கும் பொதுவான தலைப்பு வைக்க வேண்டும் என்று நாயகன் மகேஷ்பாபு விரும்புவதாக கூறப்படுகிறது.

    ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே சில பெயர்களை தேர்வு செய்து வைத்திருக்கிறார். இதில் ஒரு பெயரை வைக்கலாமா? அல்லது வேறு பெயர் கிடைக்குமா? என்று பரிசீலித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
    மும்பையில் நடைபெற்ற யாஷ் சோப்ரா நினைவு தேசிய விருது வழங்கும் விழாவில் ஷாருக்கான் பேசியுள்ளார். அதில் அவர் பேசிய முக்கிய அம்சங்களை கீழே பார்ப்போம்.
    பிரபல இந்தி இயக்குனர் யாஷ் சோப்ரா நினைவு தேசிய விருது வழங்கும் விழா மும்பையில் நடந்தது. இந்த ஆண்டுக்கான விருது ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ் அதை வழங்கினார். அவருக்கு நடிகை ரேகா தங்ககாப்பு அணிவித்தார்.

    விழாவில் பேசிய ஷாருக்கான், “நான் மும்பைக்கு வந்த போது எனக்கு தாயும் இல்லை. தந்தையும் இல்லை. இருந்த ஒரு சகோதரிக்கும் உடல்நிலை சரியில்லை. அப்போது எனக்கு என்று ஒரு குடும்பமும் இல்லை. ஆனால் இந்திய சினிமா உலகம் என்னை தத்து எடுத்து இருகரங்களாலும் அணைத்துக் கொண்டது.



    ஆனால் இன்று நான் நூறு கோடிக்கும் அதிகமான மக்களை கொண்ட குடும்பத்தை பெற்றிருக்கிறேன். இதற்காக அனைவருக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். இந்த இரவு என் வாழ்வில் மிக முக்கியமான தருணம். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள். என்னைப்பற்றி பேசினார்கள். என்னைப்பற்றிய குறும்படம் காட்டினார்கள்.



    நான் வாழ்க்கையில் சந்தித்த எல்லோரும் என்னிடம் காட்டிய அன்பு, அக்கறை, பரிவு, ஊக்கம் அனைத்தும் இல்லையென்றால் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்க முடியாது. இது என் வாழ்க்கையில் சிறப்பு வாய்ந்தது. ஆனால் நடிகை ரேகா எனது கையில் ராக்கி கட்டியது வருத்தம் அளிக்கிறது. என் இளமை காலத்தில் ஜெயப்பிரதா என்னை ஈர்த்திருக்கிறர். அவரை நினைத்து வண்ண கனவுகள் கண்டிக்கிறேன். ஆனால், அதை அவரிடம் சொல்வதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது” என்றார் நகைச்சுவையாக.

    விழாவில் ஜெயப்பிரதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு கடந்த மாதம் 15-ந் தேதி அனுமதி வழங்கியது. இந்த திட்டத்துக்கு எதிராக விவசாயிகளும், இளைஞகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் இன்று 14-வது நாளை எட்டியுள்ளது.

    இந்நிலையில், இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று நடிகர் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தற்போது தமிழகம் மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் இன்றி இயற்கையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கிறது. எதிர் வருகிற காலங்களும் மழை வந்து நம்பிக்கையூட்டுவதாக இல்லாமல் பயப்படுத்துகிறது. இந்நிலையில் ‘மீத்தேன்’ என்கின்ற திட்டம் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டமாக மறுவடிவமெடுத்து புதுக்கோட்டை, தஞ்சை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் செயல்படுத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



    நாட்டிற்கும், வளர்ச்சிக்கும் உகந்த திட்டமாக இருந்தாலும், விவசாய நிலங்களை அழித்தும் அதற்கான பாதிப்பை உண்டாக்கியும் ஏற்படுத்தும் திட்டம் எதுவுமே ஏற்புடையதல்ல. அத்தோடு, இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும்போது, அப்பகுதி மக்களிடையே விளக்கி ஒப்புதல் பெற்ற பிறகே செயல்படுத்தவேண்டும்.

    களங்மிறங்கி போராடும் மக்களின் உணர்வுகளுக்கு அழுத்தம் தரும் வகையில் நாங்கள் அவர்களுக்கு என்றும் துணை நிற்போம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். மக்களும், தமிழக அரசும் வைத்துள்ள இந்த கோரிக்கையை ஏற்று இத்திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.    

    ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கும் ‘நாச்சியார்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கும் ‘நாச்சியார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியாகி, சமூக வலைத்தளங்களை பரபரப்புக்கு ஆளாக்கியது. இந்நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளனர்.

    படப்பிடிப்பு தொடங்கியுள்ளதையடுத்து, இப்படத்தை வருகிற செப்டம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் ‘நாச்சியார்’ என்ற கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கிறாராம். முழுக்க முழுக்க அவரை மையப்படுத்தியே இந்த கதை நகரவுள்ளதாம்.



    இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. விரைவில், இப்படத்தில் நடிக்கவுள்ள மேலும் நடிகர், நடிகையர் விவரங்கள் வெளியிடப்படும் என தெரிகிறது.
    நடிகை பாவனா வழக்கில் தொடர்புடைய செல்போனை, கடற்படை வீரர்கள் ஏரியில் மூழ்கி தேடுகிறார்கள். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    நடிகை பாவனா, கடந்த 17-ந்தேதி திருச்சூரில் ‘ஹனிபி-2’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்துவிட்டு, கொச்சிக்கு சொகுசு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவரை ஒரு கும்பல் காரில் கடத்தி, 2 மணி நேரம் பாலியல் தொல்லை செய்தது.

    மேலும், குற்றவாளிகள் அந்த சம்பவத்தை தங்கள் செல்போனில் வீடியோ படமாகவும், புகைப்படமாகவும் பிடித்ததாக தகவல்கள் வெளியாகின.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், கேரள சட்டசபையில் புயலைக் கிளப்பியது. எனவே போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி, அவரது கூட்டாளி வி.பி.விகீஷ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.



    இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட செல்போன் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுபற்றி பல்சர் சுனியிடமும், விகீஷிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், “இந்த வழக்கில் விசாரணை சூடுபிடித்த நிலையில், செல்போன் முக்கிய ஆதாரம் ஆகிவிடும் என்று கருதினோம். எனவே அந்த செல்போனை நாங்கள் கொச்சியில் உள்ள ஏரியில் வீசிவிட்டோம்” என்று கூறினர்.

    உடனே அவர்களை போலீசார் அங்கு அழைத்துச்சென்றனர். அந்த ஏரி பாலத்தில் நின்றவாறு, அவர்கள் செல்போனை ஏரிக்குள் வீசியதை நடித்துக்காண்பித்தனர்.

    இதையடுத்து கொச்சி ஏரியில் கடற்படையின் நீர்மூழ்கி வீரர்களை பயன்படுத்தி செல்போனை தேடிகண்டுபிடிக்க போலீஸ் முடிவு செய்தது.

    இதற்காக கடற்படையின் உதவியை போலீஸ் தரப்பில் நாடினர். தற்போது கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் 5 பேர் அடங்கிய குழுவினர், கொச்சி ஏரியில் மூழ்கி செல்போனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த செல்போன் சிக்கினால் அது இந்த வழக்கில் முக்கிய ஆதாரம் ஆகிவிடும்.

    இந்த தகவலை கடற்படை அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.
    தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக வலம்வந்த சுரேஷ் காமாட்சி தற்போது இயக்குனராகவும் களமிறங்கியிருக்கிறார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்க்கலாம்.
    தமிழ் சினிமாவின் இன்றைய பரபரப்பு நாயகன். குறிப்பாக தயாரிப்பாளர்கள் - நடிகர்கள் மத்தியில் சுரேஷ் காமாட்சி பெயருக்கு தனி கவனம் உண்டு. ‘அமைதிப்படை 2’, ‘கங்காரு’ என இரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்போது இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ளார்.

    அவர் முதல் முறையாக இயக்கும் படத்துக்கு ‘மிக மிக அவசரம்’ என தலைப்பிட்டுள்ளார். தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை யாரும் சொல்லாத ஒரு பிரச்சினையை இந்தப் படத்தில் முன்வைத்திருப்பதாகச் சொல்கிறார் சுரேஷ் காமாட்சி.

    இதுகுறித்து அவர் கூறும்போது, முதலில் நான் ஒரு உதவி இயக்குநராகத்தான் இருந்தேன். இயக்குநராக வேண்டும் என்பதுதான் என் நோக்கமும்கூட. அமரர் மணிவண்ணன் இயக்கிய ‘அமைதிப்படை’க்கு தயாரிப்பாளரானேன். ‘கங்காரு’ படத்துக்குப் பிறகு புதிய படம் செய்ய கதைகளை யோசித்துக் கொண்டிருந்தபோது, நண்பர் ஜெகன் சொன்ன இந்தக் கதை கவனத்தை ஈர்த்தது. அதைத்தான் ‘மிக மிக அவசரம்’ எனப் படமாக்கியுள்ளேன்.



    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மகளிர் போலீசாரின் பாதுகாப்புக்காக எத்தனையே ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால் உண்மையில் அதற்கு நேர்மாறான விஷயங்கள்தான் நடக்கின்றன. அதை மையமாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. மிக உணர்வுப்பூர்வமான கதை. திரையில் வரும்போது அதிர்வுகளை ஏற்படுத்தும்.

    இந்தப் படம் கதாநாயகியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை’ படங்களில் நடித்த ஸ்ரீஜா (ஸ்ரீபிரியங்கா) நாயகியாக நடித்துள்ளார். ‘கோரிப்பாளையம்’ ஹரீஷ், ‘வழக்கு எண்’ முத்துராமன், ‘ஈ’ ராமதாஸ், ‘ஆண்டவன் கட்டளை’ அரவிந்த், லிங்கா, சக்தி சரவணன், வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர். அண்ணன் சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.



    99 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படம் முழுவதுமே பவானிக்குப் பக்கத்தில் உள்ள கோனேரிப்பட்டி அணையில்தான் நடந்தது. பாக்யராஜ் சார் ‘பவுனு பவுனு’தான் படத்தை இங்குதான் எடுத்திருந்தார். அதன் பிறகு 25 ஆண்டுகள் வேறு படங்களுக்கு அங்கே அனுமதி தரவில்லை. போராடி நாங்கள் அனுமதி வாங்கி படமாக்கினோம். அந்த அணையும் ஒரு பாத்திரமாகவே வருகிறது இந்தப் படத்தில். படப்பிடிப்பின்போது அந்தப் பகுதி மக்கள் தந்த அபார ஒத்துழைப்பை மறக்க மாட்டேன்.

    எனக்கு திரை இயக்கம் புதிதில்லை. இயக்கம் - சுரேஷ் காமாட்சி என போட்டுக் கொள்வது வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். என் திரைப் பயணம் சினிமா இயக்கத்துடன் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. படத்தின் கதை வசனத்தை ஜெகன் எழுதியுள்ளார் (புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை இயக்குநர்). திரைக்கதை எழுதி இயக்கியுள்ளேன். நல்ல ஆர்டிஸ்டுகள் அமைந்துவிட்டார்கள்.

    ஸ்ரீஜாவுக்கு இந்தப் படம் வேறு ஒரு தளத்தை உருவாக்கித் தரும் என நம்பலாம். வழக்கு எண் முத்துராமன், ஈ ராமதாஸ், லிங்கா, அரவிந்த் என எல்லோருமே பிரமாதமான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். என் வேலையைச் சுலபமாக்கியிருக்கிறார்கள். பெண்களை மையப்படுத்தி என்பதை தனித்துச் சொல்ல வேண்டியதில்லை. நம்மை இயக்கும் அச்சே பெண்தான். அவர்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகும்கூட, அவர்களுக்கு எதிரான சீண்டல்கள், தொல்லைகள் ஓய்வதில்லை. அதை என் முதல் படத்திலேயே சொல்ல முயற்சித்திருப்பது பெருமைக்குரிய ஒன்றுதானே என்றார்.
    நடிகை பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களும் வெளியிடுவதை தடுத்து நிறுத்த முகநூல் நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ படமும், புகைப்படங்களும் தங்களிடம் இருப்பதாக ‘முகநூல்’ பக்கம் ஒன்றில் ஒருவர் தமிழில் குறிப்பிட்டு இருந்தார். அந்த காட்சிகளை பகிர்ந்துகொள்வதாகவும் அவர் உறுதி அளித்திருந்தார். அதில், ஒரு தொலைபேசி எண்ணும் வெளியாகி இருந்தது.

    இந்நிலையில், பாலியல் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட தடை விதிக்கக்கோரி, ‘பிரஜ்வாலா’ என்ற தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் மதன் பி.லோகுர் தலைமையிலான சமூகநீதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் அபர்ணா பட், நடிகை பாவனா வீடியோவை வெளியிடப்போவதாக ‘முகநூல்’ பக்கத்தில் வெளியான தகவலை நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.



    அதைக் கேட்ட நீதிபதிகள், அந்த வீடியோவையும், காட்சிகளையும் வெளியிடுவதை தடுத்து நிறுத்த எல்லாவித முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு ‘முகநூல்’ நிறுவனத்துக்கு வாய்மொழியாக உத்தரவிட்டனர்.

    மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து பதில் அளிக்குமாறு ‘முகநூல்’ நிறுவனத்தை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், ஆபாச வீடியோக்களை தடுப்பது எப்படி என்று விளக்கம் அளிக்குமாறு சமூக வலைத்தளங்களுக்கு உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை 6-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, பாவனாவின் வீடியோ படத்தை வெளியிடுவதாக கூறிய ‘முகநூல்’ பக்கம் மறைந்துவிட்டது.
    ×