2025 புரட்டாசி மாத ராசிபலன்

Published on

கும்ப ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரோடு ராகுவும் சேர்ந்திருக்கிறார். சப்தம ஸ்தானத்தில் சுக்ரனும், கேதுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். எனவே சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கின்றது. சனியும் ஜென்மச் சனியாக இருப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. கடன்சுமை கூடிக் கொண்டே செல்லும். தொழிலில் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த இயலாது. மனவருத்தம் அதிகரிக்கும். வருமானப் பற்றாக்குறை யின் காரணமாக இனம்புரியாத கவலை மேலோங்கும்.

துலாம் - புதன்

புரட்டாசி 13-ந் தேதி துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய தகவல் கிடைக்கும். அவர்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு மேலோங்கும். மனதிற்கினிய பதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும்.

கடக - குரு

புரட்டாசி 22-ந் தேதி கடக ராசிக்கு குரு அதிசாரமாக செல்கிறார். அங்கு செல்லும் அவர் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் 6-ம் இடத்திற்கு வரும்போது எதிரிகளின் பலம் மேலோங்கும். எதிலும் முழுமையாக கவனம் செலுத்த இயலாது. வீண் விரயங்கள் அதிகரிக்கும். வீடு தேடி வம்பு, வழக்குகள் வரலாம். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளத்தை வாடவைக்கும். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும்.

குருவின் பார்வை பலத்தால் ஓரளவு நன்மை கிடைக்கும். என்றாலும் ஏழரைச் சனியும் நடைபெறுகிறதல்லவா?. எனவே புது முயற்சிகள் செய்யத் தொடங்கும் பொழுது, அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது நடைபெறும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற எண்ணம் நிறை வேறும். பொதுவாக குரு வழிபாடு இக்காலத்தில் நன்மையை வழங்கும்.

சனி வக்ரம்

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. இருப்பினும் தொடக்கத்தில் குரு பார்வை இருப்பதால் மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் நல்ல சம்பவங்கள் நடைபெறலாம். வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். வியாபாரம் மற்றும் தொழில் சூடுபிடிக்கும். ஆனால் புரட்டாசி 22-ந் தேதிக்கு மேல் குரு அதிசாரமாக பெயர்வதால், மகிழ்ச்சியும், மனநிம்மதியும் குறையும். சனிபகவான் வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் முன்னேற்றம் உண்டு.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரவும், செலவும் சமமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாதக் கடைசியில் மாற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் உயர்வு உண்டு. பெண்களுக்கு கருத்து வேறுபாடுகள் அகலும். கல்யாண முயற்சி கைகூடும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 25, 26, 29, 30, அக்டோபர்: 6, 7, 11, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com