தொழில்நுட்பம்
சாம்சங் மற்றும் குவால்காம் கூட்டணியில் உருவாகும் 5ஜி சிப்செட்
சாம்சங் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து 5ஜி நெட்வொர்க் சேவை வழங்கும் 7 நானோமீட்டர் சிப்செட்களை உருவாக்க இருக்கின்றன.
புதுடெல்லி:
சாம்சங் எலெக்ட்ராணிக்ஸ் கோ மற்றும் குவால்காம் டெக்னாலஜீஸ் இன்க் நிறுவனங்கள் இணைந்து ஐந்தாம் தலைமுறை (5ஜி) நெட்வொர்க் சேவைக்கான 7 நானோமீட்டர் சிப்செட்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன.
இரு நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் எக்ஸ்ட்ரீம் அல்ட்ரா வைலட் லித்தோகிராப்பி வழிமுறையை கொண்டு குவால்காம் ஸ்னாப்டிராகன் 5ஜி மொபைல் சிப்செட்களை உருவாக்க இருக்கின்றன. இவற்றில் சாம்சங்-இன் 7 நானோமீட்டர் லோ பவர் பிளஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருக்கிறது.
ஏற்கனவே சாம்சங் மற்றும் குவால்காம் இணைந்து 10 என்.எம். மற்றும் 14 என்.எம். தொழில்நுட்பங்களை உருவாக்கி இருக்கின்றன. அந்த வகையில் குவால்காம் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நீட்டித்து 5ஜி தொழில்நுட்பங்களை உருவாக்குவது மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குகிறது. என சாம்சங் நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணை தலைவர் சார்லி பே தெரிவித்துள்ளார்.
கோப்பு படம்: குவால்காம்
இரு நிறுவனங்களுக்கும் இந்த கூட்டணி மைல்கல் அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஃபவுண்ட்ரி பிஸ்னஸ் (Foundry Business) அடிப்படையில் சிப்செட்களை போதுமான தொழில்நுட்ப வசதிகளற்ற இதர நிறுவனங்களுக்கு தயாரித்து வழங்குவது ஆகும்.
சாம்சங் மற்றும் குவால்காம் தயாரிக்க இருக்கும் புதிய 7LLP EUV வழிமுறை சார்ந்த தொழில்நுட்பம் 5ஜி மொபைல் சிப்செட்களுக்கு சிறிய அளவில் உருவாக்க வழி செய்யும். இதனால் இந்த சிப்செட்களை பயன்படுத்தும் சாதனங்களில் பெரிய பேட்டரி மற்றும் மெல்லிய வடிவமைப்புகளை வழங்க முடியும்.
முன்னதாக 7LLP EUV வழிமுறை சார்ந்த தொழில்நுட்பத்தை மே 2017-இல் சாம்சங் அறிமுகம் செய்தது. இது சாம்சங் நிறுவனத்தின் முதல் செமி கண்டக்டர் வழிமுறை சார்ந்த தொழில்நுட்பம் ஆகும்.