தொழில்நுட்பம்
விரைவில் இந்தியா வரும் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்
தாய்வான் நாட்டு ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹெச்.டி.சி. இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை 18:9 ரக டிஸ்ப்ளேவுடன் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:
ஸ்மார்ட்போன்களை அதிக தரத்துடன் வெளியாவதில் பெயர்பெற்ற ஹெச்.டி.சி. நிறுவனம் இந்தியாவில் ஹெச்.டி.சி. டிசையர் 12 ஸ்மார்ட்போனினை வெளியிட திட்டமிட்டிருக்கிறது.
புதிய ஹெச்.டி.சி. ஸ்மார்ட்போன் குறித்து இணையத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் டிசையர் 12 ஸ்மார்ட்போன் ஃபுல் ஸ்கிரீன், 18:9 ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இதன் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எண்ட்ரி-லெவல் அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன் பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஹெச்.டி.சி. யு12 ஸ்மார்ட்போன் இவ்விழாவில் அறிமுகம் செய்யப்படாது என்பதால் புதிய எண்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான எவான் பிளாஸ் விரைவில் வெளியாக இருக்கும் ஹெச்.டி.சி. ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரீஸ் (Breeze) என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வரும் புதிய ஸ்மார்ட்போன் ஹெச்.டி.சி. டிசையர் 12 என அழைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இதன் வெளியீடு மற்றும் விற்பனை குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை. எண்ட்ரி-லெவல் போன் என்பதால் இதன் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படாது என்பதை மட்டும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹெச்.டி.சி. டிசையர் 12 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் டிஸ்ப்ளே (ஃபுல் ஹெச்.டி பிளஸ் அல்லது ஹெச்.டி. பிளஸ்), மீடியாடெக் சிப்செட், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, 2730 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என எவான் குறிப்பிட்டுள்ளார்.