புதுவை கடற்பகுதிக்கு மீண்டும் வந்த உல்லாச சொகுசு கப்பல்
- புதுவை அரசின் அனுமதி இல்லாததால் பயணிகளை இறக்காமல் கப்பல் திரும்பிச்சென்றது.
- கடல் பகுதியில் உலா வர மத்திய அரசின் அனுமதி பெற்றுள்ளதால், சொகுசு கப்பல் புதுவையை ஒட்டிய கடலோர பகுதியில் உலா வந்து சென்றது.
புதுச்சேரி:
சென்னை-விசாகப்பட்டினம்-புதுவை இடையே இயங்கும் தனியார் சொகுசு கப்பலை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
சென்னையில் இருந்து புறப்படும் கப்பல் ஆழ்கடலுக்கு சென்று நங்கூரமிட்டு நிற்கும். பின்னர் புதுவை உப்பளம் துறைமுகத்துக்கு வந்து பயணிகளை இறக்கி நகரை சுற்றிப்பார்த்த பின் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கப்பலில் கேசினோ என்னும் சூதாட்டங்கள் உள்ளதால் புதுவைக்கு வர அனுமதி அளிக்கக் கூடாது என ஆளும் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
கவர்னர் தமிழிசையும், கலாச்சார சீர்கேடு தொடர்பான் எந்த நடவடிக்கையையும் அரசு அனுமதிக்காது. கப்பலில் சூதாட்டங்கள் ஏதும் இல்லை என்றால் அதை அனுமதிப்போம். சொகுசு கப்பலுக்கு அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
கடந்த 10-ந் தேதி புதுவை கடல் பகுதியில் சொகுசுகப்பல் நிறுத்தப்பட்டது. கடற்கரையிலிருந்து பொதுமக்கள் பிரம்மாண்ட கப்பலை கண்டுகளித்தனர்.
புதுவை அரசின் அனுமதி இல்லாததால் பயணிகளை இறக்காமல் கப்பல் திரும்பிச்சென்றது. ஆழ்கடலுக்குள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பல் இன்று அதிகாலை மீண்டும் புதுவை கடலோர பகுதிக்கு வந்தது.
கடற்கரை சாலை காந்தி திடலின் பின்புறம் கடலில் உலா வந்த சொகுசு கப்பலில் இருந்து பயணிகள் புதுவையின் அழகை ரசித்தனர். அரசின் அனுமதி இல்லாததால் புதுவை எல்லையில் நங்கூரமிட்டு கப்பலை நிறுத்தாமல் ஆழ்கடலுக்கு திரும்பிச்சென்றனர்.
கடல் பகுதியில் உலா வர மத்திய அரசின் அனுமதி பெற்றுள்ளதால், சொகுசு கப்பல் புதுவையை ஒட்டிய கடலோர பகுதியில் உலா வந்து சென்றது.
புதுவை அரசின் அனுமதி கிடைக்காததால் சொகுசு கப்பல் நிறுவனத்தினர், அடுத்த பயணத்தின் போது கடலூரில் கப்பலை நிறுத்தவும், அங்கிருந்து பயணிகளை பஸ்களில் ஏற்றி புதுவைக்கு அழைத்து வந்து சுற்றிப் பார்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.