புதுச்சேரி

சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது- கவர்னர் தமிழிசை கருத்து

Published On 2023-05-12 13:41 IST   |   Update On 2023-05-12 13:41:00 IST
  • சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரவேற்றுள்ளனர்.
  • கவர்னர்கள்தான் அதிகாரம் படைத்தவர்கள் என்று நாங்கள் சொல்வதில்லை. முக்கியமாக நான் சொல்வதில்லை.

புதுச்சேரி:

புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசு நடந்து வருகிறது.

முதலமைச்சர் ரங்கசாமி புதுவைக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் முழுமையான அதிகாரம் இல்லை என்றும் திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியவில்லை. அதிகாரிகள் அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர் என அரசு விழாக்களில் பேசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் மாநில அந்தஸ்து வேண்டும் என சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர், உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மாநில அந்தஸ்து கேட்க உள்ளதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

யூனியன் பிரதேசமான டெல்லியை ஆளும் ஆம்ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் நிர்வாகத்தில் அதிகாரம் உள்ளது என சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரவேற்றுள்ளனர்.

ஆனால் கவர்னர் தமிழிசை டெல்லி யூனியன் பிரதேசத்துக்கு வழங்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தாது என கருத்து தெரிவித்துள்ளார்.

புதுவை கம்பன் விழாவை தொடங்கி வைத்த கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் இந்த கருத்தை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

சுப்ரீம்கோர்ட்டு டெல்லி அரசுக்கான வழிமுறையை சொல்லி இருக்கிறார்கள். தலைநகர் என்பதால் அதற்கென்று தனி கருத்து உள்ளது. ஒவ்வொரு யூனியன் பிரதேசமும் வெவ்வேறு தான். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதம். எல்லாமே மக்களுக்கானதுதான். நீதிமன்ற தீர்ப்பில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

டெல்லி யூனியன் பிரதேசத்துக்கான தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் தானே? என கேட்டதற்கு, 'இந்த தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது. கவர்னர்கள்தான் அதிகாரம் படைத்தவர்கள் என்று நாங்கள் சொல்வதில்லை. முக்கியமாக நான் சொல்வதில்லை. அன்பால்தான் ஆள்கிறோம் என தெரிவித்தார்.

தீர்ப்பு குறித்து முதலமைச்சர் ரங்கசாமி கூறும்போது, மக்களால் தேர்வான அரசுக்குதான் அதிகாரம் என்ற சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி தருகிறது. இதைதான் நாங்கள் வலியுறுத்தி வந்தோம். இத்தீர்ப்பு புதுவைக்கு பொருந்துமா என்பதற்கு தீர்ப்பை படித்து பார்த்தால்தான் முழுமையாக தெரியும் என்றார்.

Tags:    

Similar News