சோதனை சாவடிகளில் நள்ளிரவில் தேர்தல் அதிகாரி ஆய்வு
- 24 மணி நேரமும் செயல்படும் பறக்கும் படை மற்றும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
- தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குலோத்துங்கன் நள்ளிரவில் திடீர் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரியில் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் பறக்கும் படை மற்றும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கனக செட்டிக்குளம், சிவாஜி சிலை, அய்யங் குட்டிப்பாளையம், கோரிமேடு, பத்துக்கண்ணு மற்றும் திருக்கானூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குலோத்துங்கன் நள்ளிரவில் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கிருந்த வாகன சோதனை பதிவேட்டை பார்வையிட்டு, சோதனைச் சாவடிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் எண்ணிக்கை மற்றும் வருகை, பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் தொடர் ஆய்வுகளின் விவரம் குறித்து கேட்டறிந்தார்.
அனைத்து வாகனங்களையும் கட்டாயம் சோதனை செய்ய வேண்டும் மற்றும் சோதனைச் சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து உரிய அறிவுரைகளையும் வழங்கினார்.