புதுச்சேரி

புதுவை கலால்துறையில் இயக்குனர் பதவி வாங்கி தருவதாக ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.26 லட்சம் மோசடி

Published On 2022-07-26 11:02 IST   |   Update On 2022-07-26 11:02:00 IST
  • புதுவை லாஸ்பேட்டை மகாவீர் நகர் 4-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் சீனுவாசபெருமாள்.
  • புதுவை கலால்துறையில் இயக்குனர் பதவி வாங்கி தருவதாக சீனுவாசபெருமாளிடம் கூறினர்.

புதுச்சேரி:

புதுவை கலால்துறையில் இயக்குனர் பதவி வாங்கி தருவதாக ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்த சென்னை கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுவை லாஸ்பேட்டை மகாவீர் நகர் 4-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் சீனுவாசபெருமாள். இவர் புதுவை நேரு வீதியில் பிரபல ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

இவருக்கு நண்பர் மூலம் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த பிரேமாவதி, சென்னை கொளப்பாக்கத்தை சேர்ந்த செந்தில் மற்றும் கணேசமூர்த்தி, சவுந்தர் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் மூலம் அறிமுகமானார்கள்.

அப்போது தங்களுக்கு மத்திய அரசின் அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், அவர்கள் மூலம் புதுவை கலால்துறையில் இயக்குனர் பதவி வாங்கி தருவதாக சீனுவாசபெருமாளிடம் கூறினர்.

இதனை நம்பி சீனுவாசபெருமாள் ரூ.26 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார். ஆனால் அவர்கள் கலால்துறை இயக்குனர் பதவியை வாங்கி கொடுக்கவில்லை. இதுபற்றி சீனுவாசபெருமாள் கேட்ட போது பல்வேறு காரணங்களை கூறி இழுத்தடித்து வந்தனர். மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த சீனுவாசபெருமாள் இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பணம் மோசடி செய்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News