புதுச்சேரி

பிள்ளைச்சாவடி கிராமத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பார்வையிட்ட காட்சி.

வீடுகளுக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்-அ.தி.மு.க. கோரிக்கை

Published On 2022-12-10 13:39 IST   |   Update On 2022-12-10 13:39:00 IST
  • புதுவை பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பார்வையிட்டார்.
  • அதேபோன்று சேதமடைந்த வலை,படகு உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்குரிய நிவாரண உதவியை கணக்கெடுத்து வழங்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பார்வையிட்டார்.

பின்னர், வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறிய அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடற்கரையில் கல் கொட்டுதல் சம்பந்தமாக சரியான புரிதல் இல்லாமல் தலைமை செயலகம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கற்களை கொட்டி செயற்கை மணற்பரப்பை உருவாக்குவதால் அதற்கு அடுத்துள்ள பல மீனவ கிராமங்கள் கடல் சீற்றத்தால் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் சரியான திட்டமிடுதலின்றி சில இடங்களில் கொட்டப்பட்ட கற்களால் கனக செட்டிகுளம், பிள்ளைச் சாவடி, காலாப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கடல் அரிப்பு ஏற்படுகிறது. புயலால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கடலோடு அடித்து செல்லப்பட்டன.

வீடு, வாசல், வீட்டு உபயோக பொருட்கள், மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்ட தனது உடைமைகளை முழுமையாக இழந்து நிற்கதியாய் பல மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.கடலில் மூழ்கிய ஒவ்வொரு வீட்டிற்கும் உரிய நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இயற்கை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.15 லட்சமும், பகுதி பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.8 லட்சமும் இழப்பீடாக அரசு வழங்கும் அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட வேண்டும். அதேபோன்று சேதமடைந்த வலை,படகு உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்குரிய நிவாரண உதவியை கணக்கெடுத்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அன்பழகன் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணை செயலாளர் நாகமணி, நகர செயலாளர் அன்பழகன் உடையார், மேற்கு மாநில ஜெ.பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி, மணவெளி தொகுதி செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News