புதிய தார் சாலை வசதி-முதல்-அமைச்சர் ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்
- கடலூர்-புதுவை தேசிய நெடுஞ்சாலை கடந்த காலங்களில் பெய்த பலத்த மழையினால் கடுமையாக சேதம் அடைந்தது.
- பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை கோட்டம் சார்பில் ரூ.17.98 கோடியில் சாலை வசதி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
புதுச்சேரி:
கடலூர்-புதுவை தேசிய நெடுஞ்சாலை கடந்த காலங்களில் பெய்த பலத்த மழையினால் கடுமையாக சேதம் அடைந்தது.
இதனால் போக்குவரத்து இடையூறுகளும் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இது சம்பந்தமாக பொது மக்களும், சமூக ஆர்வலர்களும், போக்குவரத்து போலீசாரும் புதிய தார் சாலை அமைக்க கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் முதலியார் பேட்டை, அரியாங்குப்பம், ஏம்பலம், பாகூர் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்திவந்தனர்.
அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை கோட்டம் சார்பில் ரூ.17.98 கோடியில் சாலை வசதி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்புதலை மத்திய சாலை மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கி உள்ளது.
இந்தத் திட்டத்தில் தற்போது உள்ள பழுதடைந்தை சாலையை வலுப்படுத்துவது, தேவையான இடங்களில் வாய்க்கால் கட்டுவது, தடுப்பு சுவர் கட்டுவது, சாலை பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்துவது, சாலை மார்க்கிங் பெயிண்ட் அடிப்பது, பிளிங்கர் வைப்பது, எச்சரிக்கை பலகைகள் நடுவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 14கி.மீ தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை இன்று காலை கடலூர்-புதுவை ரோடு தவளக்குப்பம் அடுத்த கொருக்குமேடு பகுதியில் நடைபெற்றது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். சிறப்பு விருந்தினர்களாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், கே.எஸ்.பி ரமேஷ், சம்பத், பாஸ்கரன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர் ஆறுமுகம், ஒப்பந்ததாரர் கதிரேசன், பா.ஜனதா ராமு, என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா முக்கிய கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.