புதுச்சேரி

மீனவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

ஏலம் விட தடைக்கு எதிர்ப்பு- புதுவையில் மீன் விற்பனையை நிறுத்தி மீனவர்கள் போராட்டம்

Published On 2022-10-03 08:13 GMT   |   Update On 2022-10-03 08:13 GMT
  • கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி திறக்கப்பட்டது.
  • நவீன மீன் அங்காடி திறந்து 4 ஆண்டுகள் ஆகியும், மீனவர்கள் யாரும் அங்கு செல்லாமல், தொடர்ந்து நேரு வீதியிலேயே ஏலம் நடக்கிறது.

புதுச்சேரி:

புதுவையில் உள்ள 18 மீனவ பஞ்சாயத்து கிராம மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் நகரின் மையத்தில் உள்ள நேரு வீதி-காந்தி வீதி சந்திப்பில் ஏலம் விடப்படும்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் ஏலம் விட்ட பிறகு, மீன்களின் கழிவுகள் சாலையிலேயே கொட்டிவிட்டு போனதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி திறக்கப்பட்டது.

ஆனால் நவீன மீன் அங்காடி திறந்து 4 ஆண்டுகள் ஆகியும், மீனவர்கள் யாரும் அங்கு செல்லாமல், தொடர்ந்து நேரு வீதியிலேயே ஏலம் நடக்கிறது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குபேர் அங்காடி நவீனப்படுத்தப்படுவதால் மீன் ஏலத்தை கிழக்கு கடற்கரை சாலை நவீன அங்காடிக்கு அரசு மாற்றியது.

ஆனால் அதனை ஏற்காமல் கால அவகாசம் கேட்டு மீனவர்கள் தள்ளி போட்டு வந்தனர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் வல்லவன் காந்தி வீதியில் குபேர் மீன் மார்க்கெட் முன்பு கடந்த 1-ந் தேதி முதல் மீன் ஏலம் விடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 29-ந் தேதி மீன் ஏலத்தை நிறுத்திவிட்டு மீனவர்கள சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர்.

இதனிடையே தடையை மீறி மீன் ஏலம் விட முயன்ற 2 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த மீன்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் இன்று மீனவர்கள் மீன்களை ஏலம் விடாமல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் புதுவை முழுவதும் மீன் விற்பனையை நிறுத்தி விட்டு குபேர் அங்காடியில் உள்ள மீன் விற்பனை மையத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் மீன் விற்பனை பாதிக்கப்பட்டது. மீன்களை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பல ஆண்டுகளாக. மீன் ஏலம் மற்றும் விற்பனை நடைபெறும் நேரு வீதி-காந்தி வீதி சந்திப்பில் ஏலம் நடத்துவோம். இல்லையென்றால், காலவரையின்றி வேலைநிறுத்தம் செய்வோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News