கவர்னர் மாளிகை நோக்கி விவசாயிகள் பேரணி
- இந்திய உழவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்திய தொடக்க நாளையொட்டி புதுவையில் எஸ்.கே.எம். ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பேரணி நடந்தது.
- டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த 760-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
இந்திய உழவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்திய தொடக்க நாளையொட்டி புதுவையில் எஸ்.கே.எம். ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பேரணி நடந்தது.
பழைய பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணிக்கு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கீதநாதன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ரவி, காங்கிரஸ் விவசாய அணி செல்லகணபதி, தி.மு.க. செந்தில்குமார், மற்றும் ராமமூர்த்தி, சங்கர், புருஷோத்தமன், சாந்தகுமார் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
பேரணி அண்ணாசாலை, நேருவீதி வழியாக கவர்னர் மாளிகை நோக்கி வந்தது. அவர்களை ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்குகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த 760-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்.
விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ்பெற வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் இயற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.