புதுச்சேரி

புதுவை கடற்கரை சாலையில் ஜி20 மாநாடு சின்னத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வெளியிட்ட போது எடுத்த படம்.

............

கலாச்சாரம்- பெருமையை ஜி20 மாநாடு மூலம் அறிந்து கொள்ளலாம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சு

Published On 2023-01-05 14:45 IST   |   Update On 2023-01-05 14:45:00 IST
  • புதுவை செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் ’ஜி20 சின்னம் காட்சிப்படுத்துதல்’ நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.
  • ஜி20 மாநாடு பிரதமரின் கனவு திட்டம். மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்க வேண்டும் என்ற நிலை வந்த போது, டெல்லியில் மட்டுமே நடைபெறும் என அனைவரும் நினைத்தனர்.

புதுச்சேரி:

புதுவை செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 'ஜி20 சின்னம் காட்சிப்படுத்துதல்' நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.

கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து 'ஜி20 செல்பி மையத்தை' திறந்து வைத்தார். பின்னர். வெளிப்புற விளம்பர பதாகைகள், ஜி20 அடையாள வில்லை, சுவரொட்டி ஆகியவற்றை வெளியிட்டார்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், சிவசங்கரன், தலைமைச்செயலர் ராஜிவ் வர்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது: -

ஜி20 மாநாடு பிரதமரின் கனவு திட்டம். மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்க வேண்டும் என்ற நிலை வந்த போது, டெல்லியில் மட்டுமே நடைபெறும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் அத்தனை மாநிலங்களுக்கும், அதற்கான வாய்ப்பை அளித்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

மற்ற நாடுகளில் மாநாடு நடைபெறும்போது அந்தந்த தலைநகரங்களில் தான் நடக்கும். ஆனால், தொடக்க நிலையின் முதல்மாநாடு புதுவையில் நடைபெற உள்ளது. உலகிற்கு நாம் குருவாக இருக்க வேண்டும் என் பதுதான் நம்நாட்டிற்கு உழைத்த அத்தனை தலைவர்களின் ஆசை.

இப்போது வளர்ந்து வரும் நாடு என்ற பெயரை இந்தியா பெற்றுள்ளது.

இந்தியா 2030-க்குள் உயர்ந்த பொருளாதார நிலையை அடையவேண்டும். நாம் கடுமையான இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி பயணிக்க வேண்டும். அந்த பயணம் நிச்சயம் வெற்றியை தரும். புதுவை நிச்சயமாக பல வளர்ச்சிகளை பெறும். புதுவைக்கு வரும் வெளிமாநிலத் தலைவர்கள், மறுபடியும் புதுவைக்கு வரவேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு மாநாடு நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

ஜி20 மாநாட்டை இந்தியாவிற்கு கொண்டு வந்ததற்கும், உலக அளவில் இந்தியாவை சிறந்தநாடாக உருவாக்கியதற்காகவும், அதனுடைய பிரதிநிதிகள் கூட்டத்தினை புதுவையில் நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உலகில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கின்ற ஒரு மாநாடு ஆகும்.

இது போன்ற மாநாடு நமது நாட்டில் நடைபெறுமா என்ற எண்ணம் இருந்தது. இந்த மாநாட்டை நடத்த முடியும் என்ற நம் பிக்கையை உருவாக்கி நடத்துவதற்கான நிலையை கொண்டு வந்ததற்காக மீண்டும் பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநாட்டை நடத்துவதுடன் தலைமை பொறுப்பை ஏற்கும் நிலையில் இருக்கின்றோம். எந்த முடிவை எடுத்தாலும் இ ந்தியாவை கேட்டு எடுக்க வேண்டும் என்ற நிலை தற்போது உருவாகி இருப்பது பெருமைக்குரியது. பருவநிலை மாற்றம், உலகின் பல நாடுகளில் ஏற்படும் குழப்பங்கள், பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள், அதனால் ஏற்படும் போர் உள்ளிட்ட எண்ணற்ற பிரச்சினைகளை சரி செய்வதற்காக நமது ஆலோசனையை கேட்கும் நிலை தற்போது இருக்கிறது.

ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம், சமமான வாழ்க்கை இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை பிரதமர் உருவாக்கியுள்ளார். புதுவை பல சித்தர்கள் வாழ்ந்த ஆன்மீக பூமியாகும். இதனாலேயே பல்வேறு புகழ் புதுவைக்கு கிடைக்கின்றன.இங்கே எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் நல்ல முடிவாக இருக்கும்.

மத்திய அமைச்சர்கள் புதுவைக்கு அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றனர். உலகம் புதுவையை உற்றுப் பார்க்கும் நிலை உள்ளது. ஜி20 மாநாடு பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதில் அரசு கவனமாக உள்ளது. புதுவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.

ஜி20 பிரதிநிதிகள் கூட்டமும் ஒன்றாக அமைந்துள்ளது. இதன் மூலம் புதுவையில் உள்ள கலாசாரம், பெருமையை அறிந்து கொண்டு, நம்மை நேசிக்கும் நிலை உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News