கவர்னர் தமிழிசை தலைமையில் ராஜ் நிவாஸில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.
கவர்னர்- ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை
- புதுவையில் மின்துறையை தனியார்மயமாக்க அரசு டெண்டர் வெளியிட்டது.
- இதையடுத்து முதல் -அமைச்சர் ரங்கசாமி கடந்த 2-ந் தேதி மின்துறை ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுச்சேரி:
புதுவையில் மின்துறையை தனியார்மயமாக்க அரசு டெண்டர் வெளியிட்டது. இதையடுத்து மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கினர். இதனால் கடும் மின்தடை ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். மாநிலமெங்கும் மறியல், போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து முதல் -அமைச்சர் ரங்கசாமி கடந்த 2-ந் தேதி மின்துறை ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத்தப் போராட்டத்தை தீபாவளி வரை மின் ஊழியர்கள் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் மின்துறை தனியார்மயமாக்கல் தொடர்பாக ஊழியர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக தங்கள் பணிபாதுகாப்பு தொடர்பாக அச்சம் தெரிவித்தனர்.
அதனால் தனியார்மயமாக்கல் கட்டமைப்புக்கு ஏற்கெனவே நியமிக்கப்பட்ட ஆலோசனை அதிகாரியிடம் நேரடியாக விளக்கம் கேட்க புதுவை அரசு திட்டமிட்டது. இக்கட்டமைப்பு குழு அதிகாரிகள் புதுவை வந்துள்ளனர். 2 நாள் புதுவையில் முகாமிடும் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தலைமைச்செயலர் ராஜீவ்வர்மா மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினர்.
அதையடுத்து ராஜ்நிவாஸில் கவர்னர் தமிழிசை தலைமையில் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் முதல்- அமைச்சர் ரங்கசாமி, தலைமைச்செயலர் ராஜீவ் வர்மா, மின்துறை செயலர் அருண், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, மின்துறை செயற்பொறியாளர்கள் ராஜேஷ் சன்யால், ஸ்ரீதரன், சண்முகம், தனியார்ம யமாக்கலுக்கான பரிவர்த்தனை அதிகாரிகள் பங்கேற்றனர்.